“இஸ்ரேல் ஒருபோதும் ஹிஸ்புல்லா, ஹமாஸை வீழ்த்த முடியாது” – ஈரான் தலைவர் காமெனி

ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸை இஸ்ரேலால் ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது என்று ஈரான் நாட்டின் உச்ச தலைவரும், மதகுருவுமான அயதுல்லா அலி காமெனி (Ayatollah Ali Khamenei) தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

ஹமாஸ், ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி இன்று (04.10.2024, வெள்ளிக்கிழமை) அரிதான உரையாற்றினார். அப்போது அவர், “இந்த பிராந்தியத்தில் இருந்து மேற்கு நாடுகளுக்கு எரிசக்தியை ஏற்றுமதி செய்வதற்கான நுழைவாயிலாக இஸ்ரேலை மாற்றும் நோக்கிலேயே அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அதற்கு பாதுகாப்பை வழங்கி வருகின்றன. ஆனால், நமது பிராந்தியத்தின் எதிர்ப்பு சக்தி, இஸ்ரேலுக்கு எதிராக பின்வாங்காது.

அனைத்து முஸ்லிம் நாடுகளும் பாதுகாப்புக்காக ஒன்றுபட வேண்டும். ஆப்கானிஸ்தானில் இருந்து யேமன் வரை, ஈரானில் இருந்து காஸா மற்றும் லெபனான் வரை முஸ்லிம் நாடுகள் தற்காப்புக்காக தயாராக வேண்டும். இஸ்ரேலை எதிர்கொள்வதில் ஈரான் தாமதம் செய்யாது. அதேநேரத்தில், அது தனது கடமையை நிறைவேற்ற அவசரப்படாது. சில இரவுகளுக்கு முன்பு நமது ஆயுதப் படைகள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல் நடவடிக்கை என்பது முற்றிலும் சட்டபூர்வமானது.

லெபனான் மற்றும் பலஸ்தீன போராளிகள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் சிந்தும் ரத்தம், உங்கள் வலிமையை பலவீனப்படுத்தக் கூடாது. கடந்த ஒக்ரோபர் 7 ம் தேதி இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய தாக்குதல் தர்க்க ரீதியிலானது மற்றும் சட்டபூர்வமானது. பலஸ்தீனியர்கள் செய்தது சரியானது” என்று அயதுல்லா அலி காமெனி தெரிவித்தார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் முன்பு பொதுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அவர் உரை நிகழ்த்தியிருப்பது கவனிக்கத்தக்கது.

இதனிடையே, வியாழன் அன்று (03.10.2024) பெய்ரூட்டில் நடத்தப்பட்ட துல்லிய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் தகவல் தொடர்பு நெட்வொர்க்குகளின் தலைவரான முகமது ரஷீத் சகாபி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் வெள்ளிக்கிழமை (04.10.2024) தெரிவித்தது. லெபனான் எல்லைப் பகுதியில் இஸ்ரேல் துருப்புக்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா, இன்று (04.10.2024) தெற்கு லெபனானின் எல்லைப் பகுதியில் இஸ்ரேலிய துருப்புக்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளது.

பின்புலம்: பலஸ்தீனத்தின் காஸாவை ஆட்சி செய்த ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு ஒக்ரோபர் 7-ம் திகதி இஸ்ரேல் பகுதியில் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக, காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் இராணுவம் – ஹமாஸ் இடையே ஓராண்டாக போர் நீடித்து வருகிறது. இதற்கிடையே, மத்திய கிழக்கில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த தீவிரவாத குழுக்களும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இஸ்ரேலை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

அந்த வகையில், லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கடந்த 27-ம் திகதி இஸ்ரேல் விமானப் படை தாக்குதல் நடத்தியது. இதில், ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, லெபனான் எல்லைக்குள் இஸ்ரேல் இராணுவம் நுழைந்து தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல, யேமன் நாட்டின் ஹவுத்தி தீவிரவாதிகள், இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக யேமன் நாட்டின் துறைமுகங்களை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

சிரியாவின் ஷியா பிரிவை சேர்ந்த பல்வேறு தீவிரவாத குழுக்களும் இஸ்ரேலை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த குழுக்களுக்கு சிரியா அதிபர் ஆசாத், ஈரான் இராணுவம் முழு ஆதரவு அளிக்கிறது. இந்நிலையில், லெபனான், காஸா, சிரியா, யேமன் ஆகிய நாடுகள் மீது இஸ்ரேல் இராணுவம் தற்போது ஒரே நேரத்தில் பலமுனை தாக்குதல் நடத்தி வருகிறது. பலஸ்தீனத்தின் காஸா பகுதி தற்போது இஸ்ரேல் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. எனினும், ஹமாஸ் தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானில் மிகப் பெரிய தாக்குதல் – கடந்த 1-ம் திகதி இரவு இஸ்ரேலின் டெல்அவிவ் மற்றும் விமானப் படை தளங்களை குறிவைத்து ஈரான் இராணுவம் 180 ஏவுகணைகளை வீசியது. அவற்றில் பெரும்பாலான ஏவுகணைகளை இஸ்ரேல் இராணுவம் நடுவானில் இடைமறித்து அழித்தது. ஈரானுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

இதன்படி, ஈரானின் 6 நகரங்களில் உள்ள அணு உலைகள், எண்ணெய் கிணறுகளை குறிவைத்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் இராணுவம் திட்டமிட்டுள்ளது. ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்த கூடாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்திய நிலையில், ஈரானின் எண்ணெய் கிணறுகள், மின் விநியோக கட்டமைப்புகளை குறிவைத்து விரைவில் மிக பெரிய தாக்குதல் நடத்த இஸ்ரேல் இராணுவம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பின்னணியில் ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமெனியின் உரை கவனத்துக்குரியது. 

Tags: