இலங்கையில் அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா?

-பிரதீபன்

‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு.

இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான போர் 2019 மே மாதத்தில் முடிவுற்ற பின்னர் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் சீனாவின் பக்கம் சாய்வதாகவும், சீனாவுக்கு பல வசதிகளை இலங்கையில் செய்து கொடுப்பதாகவும் மேற்கு நாடுகளில் பெரும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்தப் பிரச்சாரத்தில் உலகின் பொலிஸ்காரனாக விளங்கும் அமெரிக்காவே முன்னணியில் நின்றது.

இன்னொரு பக்கம் மகிந்த அரசாங்கத்தின் போக்கு குறித்து இந்தியாவும் கவலை கொண்டிருந்தது. அதனால் அதுவும் மகிந்த அரசாங்கத்துக்கு எதிராக காய்களை மறைமுகமாக நகர்த்தி வந்தது.

புலிகளுக்கு எதிரான யுத்த காலத்தில் இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு பல்வேறு வடிவங்களில் உதவி வந்தது. ஏனெனில் மற்றைய நாடுகள் இலங்கைக்கு பண உதவியும் ஆயுத உதவியும் செய்தாலும், அயல்நாடு என்ற வகையில் அதைவிடக் கூடுதலான பல்வேறு உதவிகளை இந்தியாவே உதவக்கூடிய நாடாக இருந்தது.

அமெரிக்காவும் ஏனைய மேற்கு நாடுகளும் புலிகளை பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்திருந்தாலும், இந்த நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களே புலிகளுக்கு பெருமளவு நிதி வழங்கி யுத்தத்தை முன்னெடுத்துச் செல்ல ஊக்குவித்தனர் என்ற மற்றொரு பக்க உண்மையும் இருக்கின்றது.

அமெரிக்க அரசைப் பொறுத்தவரையிலும் அது பல நாடுகளில் செயல்பட்டது போல இலங்கை விவகாரத்திலும் ஒரு இரட்டை நிலையையே வகித்தது. அமெரிக்காவின் 2001 செப்ரெம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் பயங்கரவாதத்தை ஒழிப்பதையே அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு.புஸ் தனது அரசியல் – இராணுவ முன்னுரிமையாக வைத்திருந்தார்.

ஆனால், ஒபாமாவின் அமெரிக்க அரசாங்கம் இலங்கை யுத்தத்தின் கடைசித் தருண நேரத்தில் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்துவதற்கு இலங்கை அரசின் மீது பலத்த நிர்ப்பந்தங்களைச் செலுத்தியதாக இப்பொழுது தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த நேரத்தில் கொழும்பில் அமெரிக்கத் தூதுவராக இருந்த ரொபேர்ட் ஓ பிளேக் (Robert O Blake) புலிகளுக்கு எதிரான போரை இலங்கை நிறுத்தாவிடில் எதிர்காலத்தில் போர்க்குற்ற விசாரணையை எதிரN;நாக்க வேண்டி வரும் என எச்சரித்ததாக அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளராகப் பதவி வகித்த கலாநிதி மொகான் சமரநாயக்க சமீபத்தில் தெரிவித்திருந்தார். அவ்வாறே பின்னர் மகிந்த அரசின் மீது ஜெனிவாவில் போர்க்குற்ற தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது.

சொல்லப்போனால், போர் முடிவுற்ற பின்னர் 2015 ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் மூலம் மகிந்தவின் ஆட்சி கவிழ்க்கப்படும்வரை, அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் மகிந்த அரசு மீது ஒரு விரோதப் போக்கையே கடைப்பிடித்து வந்தன எனலாம்.

ஆனால், 2015 ஜனாதிபதி தேர்தலின் பின் அமெரிக்கா பின்னணியில் இருந்து உருவாக்கிய ரணில் – மைத்திரி தலைமையிலான கூட்டரசாங்கத்தின் உடைவும், கடந்த வருடம் பெப்ருவரியில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் மகிந்த அணிக்கு சார்பான சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் அமோக வெற்றியும் அமெரிக்காவின் சிந்தனைகளில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. அதன் வெளிப்பாடாக சில நடவடிக்கைகள் திரைமறைவில் நடைபெற்று வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

மகிந்த காலத்து போர்க்குற்றங்கள் எனப்படுபவை மகிந்த மீது மட்டுமின்றி, அவரது சகோதரரும் யுத்த காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்தவருமான கோத்தபாய ராஜபக்ச மீதும் சுமத்தப்பட்டு வந்தது.

அதுமட்டுமின்றி, கடும் போக்கு பௌத்த சிங்கள பேரினவாதிகளின் ஊக்குவிப்பாளராகவும், முஸ்லீம் மக்களுக்கு எதிரான போக்குடையவராகவும் கோத்தபாய சித்தரிக்கப்பட்டு வந்தார். ஆனால் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தவர் கோத்தாதான் எனக் கருதிய சாதாரண கிராமப்புற சிங்கள மக்களில் பெரும்பான்மையினர் கோத்தா மீது அளவற்ற மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளனர்.

ரணில் – மைத்திரி அரசு கொண்டுவந்த 19 ஆவது அரசியல் திருத்தம் காரணமாக மகிந்த மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. அந்தத் அந்த திருத்தச்சட்டத்தில் கொண்டு வரப்பட்ட இன்னொரு சரத்து காரணமாக முப்பது வயதுக்குட்பட்ட மகிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்சவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தடை வித்திக்கப்பட்டது.

சில வேளைகளில் மகிந்த குடும்பத்தில் இருந்து கோத்தபாய ராஜபக்ச போட்டியிடலாம் எனக் கருதிய ரணில் அரசாங்கம் இரட்டைப் பிராஜாவுரிமை உடையவர்களும் (கோத்தாவுக்கு அமெரிக்க குடியுரிமையும் உண்டு) தேர்தலில் போட்டியிட முடியாது என்ற ஒரு சரத்தையும் 19 ஆவது திருத்தத்தில் சேர்த்திருந்தது.

ஆனால், கோத்தா இவையெல்லாவற்றையும் புறந்தள்ளி தான் எப்படியும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் எனக் கூறி வந்தார். அதற்காக தனது அமெரிக்க குடியுரிமையை ரத்துச்செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

கோத்தாவின் அந்த முயற்சி சாத்தியப்படாது என்றும், அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை அமெரக்கா விரும்பாதபடியால் அவரது அமெரிக்க குடியுரிமையை நீக்க அமெரிக்கா சம்மதிக்காது எனவும் அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இலங்கையில் தற்போதைய தூதுவருக்கு முன்னதாக அமெரிகத் தூதுவராகப் பதவி வகித்த யுவரட முநளாயி என்பவரும் கோத்தபாய இலங்கை ஜனாதிபதியாக வருவதை அமெரிக்கா தடுக்கும் எனக் கூறியதாக ஒரு சர்ச்சையும் உருவாகி இருந்தது.

ஆனால், திரைமறைவில் அமெரிக்க அதிகாரிகளுக்கும் கோத்தபாய ராஜபக்சவுக்கும் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள்; நடைபெற்றதாகவும், அதன் விளைவாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தடையாக இருக்கும் அவரது அமெரிக்க குடியுரிமையை நீக்குவதற்கு அமெரிக்கா பச்சைக்கொடி காட்டிவிட்டது என்றும் கூறப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் Alaina B.Teplitz  மகிந்த ராஜபக்ச, ஜீ.எல்.பீரிஸ் உட்பட எதிரணி முக்கியஸ்தர்கள் சிலரைக் கூப்பிட்டு கலந்துரையாடியுள்ளார். ஆனால், அந்தக் கலந்துரையாடலில் என்ன பேசப்பட்டது என்ற விடயம் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை.

ஆனாலும், முன்னைய மகிந்த அரசாங்கம் போல எதிர்கால ராஜபக்ச அரசாங்கம் ஒன்று சீனாவுடன் பொருளாதாரம் தவிர்ந்த இராணுவ மூலோபாய கூட்டு எதனையும் வைக்கக்கூடாது எனபதும், அதேநேரத்தில் இலங்கையில் அமெரிக்காவின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் கோத்தாவை இலங்கையின் எதிர்கால ஜனாதிபதியாக அங்கீகரிக்க அமெரிக்க தயாராகி வருவதான ஒரு ஊகம் அரசியல் வட்டாரங்களில் காணப்படுகிறது.

அமெரிக்காவின் இந்தப் புதிய போக்கிற்கு கட்டியம் கூறுவது போல அண்மையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் முக்கியமான இராஜதந்திரிகளில் ஒருவரும், இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவருமான ரொபேர்ட் ஓ பிளேக் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசும்போது இலங்கையில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரின்போது அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாய கையாண்ட வழிமுறையை வெகுவாகச் சிலாகித்துப் பேசியிருக்கிறார்.

“சீனா மற்றும் தென்னாசியா மீதான அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மற்றும் இலங்கை மீதான இதன் அர்த்தம்” என்ற தலைப்பில் கொழும்பில் உரையாற்றிய பிளேக், கோத்தபாய இலங்கையின் யுத்தகாலத்தில் புலனாய்வுப் பிரிவுகளை ஒழுங்கான முறையில் ஒருங்கிணைத்து, உயர்மட்ட தொழில்நுட்பத் திறமையாளர்களின் உதவியையும் பெற்றபடியாலேயே போரில் வெற்றிபெற முடிந்தது என கோத்தாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னர் அமெரிக்க அதிகாரிகளால் தொடர்ச்சியாக போர்க்குற்றம் சுமத்தப்பட்டு வந்த கோத்தாவை ஒரு உயர்மட்ட அமெரிக்க அதிகாரி முன்னுதாரணம் காட்டுவதென்பது, அமெரிக்காவின் இலங்கை பற்றிய நிலைப்பாட்டில் ‘யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ என்பதன் அறிகுறியாகவே விடயமறிந்தவர்கள் இதைப் பார்க்கின்றனர்.

ஆம், அமெரிக்கா இலங்கையில் நடைபெறும் குதிரைப் பந்தயத்தில் குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டது போலத்தான் தோன்றுகிறது.

பாரம்பரியமாக ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்து வந்த அமெரிக்கா, திடீரென தனது நிலைப்பாடடை மாற்றி அக்கட்சிக்கு எதிரான ஒரு வேட்பாளரை ஆதரிக்குமா என சிலருக்கு ஐயம் எழலாம்.

‘அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை’ என்பதை இதற்குப் பதிலாகச் சொல்லலாம்.

இன்றைய பூகோளமயப்பட்ட அரசியலில் ஒவ்வொரு நாடும் தத்தமது நலன்களை முதன்மைப்படுத்தும் போக்கே நிலவுகின்றது. இதற்கு அமெரிக்க வரலாற்றிலேயே பல உதாரணங்கள் உண்டு. அமெரிக்கா மட்டுமின்றி, ரஸ்யா, சீனா, இந்தியா உட்பட பெரும் நாடுகள் எல்லாம் அதன் அடிப்படையிலேயே செயல்படுகின்றன.

உதாரணமாக, 1947 இல் பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து அந்த நாட்டுடன் கூடிக்குலாவி கொஞ்சி வந்த அமெரிக்கா, அந்த நாட்டுடனான உறவுகளைக் குறைத்துக்கொண்டு, பாகிஸ்தானின் பரமவைரி நாடான இந்தியாவுடன் இப்பொழுது ஒட்டி உறவாடி வருவது இதற்கு ஒரு உதாரணம்.

அதேநேரத்தில், ஒரே நேரத்தில் சீனாவுடனும் அமெரிக்காவுடனும் நெருங்கி உறவாடி வந்த பாகிஸ்தானின் இராஜதந்திரம் போல, இலங்கையின் எதிர்கால புதிய அரசாங்கத்தின் போக்கும் சமகாலத்தில் சீனாவுடனும் அமெரிக்காவுடனும் அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Tags: