ஐ.நா. விசேட அறிக்கையாளர் மீது கொழும்பு பேராயர் அதிருப்தி!

டந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் Clement Nyalettossi Voul என்பவரை கொழும்பு பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் விமர்சனம் செய்திருப்பதாக கத்தோலிக்க தேவாலயத்தின் பேச்சாளர் வணக்கத்துக்குரிய யூட் கிறிஸ்கந்த தெரிவித்துள்ளார். ஐ.நா. விசேட அறிக்கையாளர் வடக்கில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரிப்பதற்காகச் சென்ற அதேசமயம், ஈஸ்டர் ஞாயிறன்று 250 பேரைக் கொலை செய்து, 500 பேர் வரை காயமடைய வைத்த குண்டுத்தாக்குதல்கள் குறித்து விசாரிக்கத் தவறியுள்ளமை குறித்தே கொழும்பு பேராயர் தமது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

தேவாலயப் பேச்சாளர் மேலும் கூறுகையில், ஐ.நா. விசேட அறிக்கையாளர் ஈஸ்டர் தினத்தன்று உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்தும், இப்பொழுது நிலைமை எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் கொழும்பு பேராயரிடம் கருத்துக் கேட்பதற்கு முயற்சிக்கவில்லை என்றும் கூறினார்.

இதற்கு முன்னரும் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக வருகை தந்த ஐ.நா. பிரதிநிதிகளின் மனோபாவம் குறித்து கொழும்பு பேராயர் பகிரங்கமாக அதிருப்திகளை வெளியிட்டு வந்திருக்கிறார்.

தேவாலயப் பேச்சாளர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் தினத் தாக்குதலின் போது உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து எவ்விதமான பொறுப்பையும் ஏற்காத அரசாங்கம் வெறுமனே டம்பமாகப் பேசியபடி அதனைக் கடந்து சென்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு பிரபல்யம் தேடுவதற்காக அரசாங்கம் ஆரம்பித்துள்ள ‘ஸ்ரன்ட்’ வேலை எனவும் கூறினார்.

Tags: