மாபெரும் திட்டத்துடன் வருவோம்!

டக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், “ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலில், தற்போதைய அரசாங்கம் வெற்றி பெற்ற பின்னர், மாபெரும் திட்டத்துடன் வடக்கு, கிழக்குக்கு வருவோம்” என்று தெரிவித்துள்ளார்.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் அண்மையில், ஹட்டனில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு முடிவடைந்த பின்னர், ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, இவ்வாறு தெரிவித்துள்ளார்.  

அங்கு, அவர் மேலும் தெரிவிக்கையில், “முப்பது ஆண்டு காலப் போருக்குப் பின்னர், அரசியலில் ஏற்பட்டுள்ள ஜனநாயக ஆட்சிமுறைமையின் பலாபலன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்னமும் மக்களைச் சென்றடையவில்லை என்று தான் கூற வேண்டும். ஏனெனில், கடந்த 10 ஆண்டுகளாக, மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்தில் இருந்த கட்சி, மக்களுக்காக என்ன செய்துள்ளது? இந்தக் கேள்வியை எழுப்பும் போது, அந்தந்தக் கட்சிகளில் உள்ளவர்களே, திருப்தி அடைய முடியாத அளவுக்குத்தான் நிலைமை உள்ளது. எனவே, முட்டி மோதும் அரசியலைக் கைவிட்டு, போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதற்கான பாதையை உருவாக்குவதற்காகவே நான் சுதந்திரக்கட்சியுடன் இருக்கின்றேன். ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பின்னர் மாபெரும் திட்டத்துடன் வடக்கு, கிழக்குக்கு வருவோம். அதேவேளை, காணாமல்போனோர் பிரச்சினை உட்பட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காணவேண்டும் என்ற சிந்தனையிலேயே ஜனாதிபதியும் இருக்கிறார்” எனவும் கலாநிதி சுரேன் ராகவன் கூறினார்.  

 

Tags: