நாட்டில் அரசியல் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் அமரர் பண்டாரநாயக்க

மர்லின் மரிக்கார்

59th commemoration of late S.W.R.D. Bandaranaike

செப்டம்பர் 26: அமரர் பண்டாரநாயக்க நினைவு தினம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் பிரதமருமான எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் 61 வது நினைவு தினம் செப்டம்பர் இருபத்தாறாகும். இலங்கை வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் தனித்துவமிக்க அரசியல் தலைவராக விளங்கியவர் அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆவார். இவர் நாட்டின் சமூக, கலாசார, பொருளாதார மற்றும் அரசியல் துறைகளின் மறுமலர்ச்சிக்கு அளித்துள்ள பங்களிப்புக்கள் அழியாத் தடம் பதித்திருக்கின்றன.

அவர் மறைந்து ஆறு தசாப்தமாகியுள்ள போதும், இன்றும் நினைவு கூரப்படுகிறார்.

அமரர் பண்டாரநாயக்க 1899 ஜனவரி 8 ஆம் திகதி ஹொரகொல்லவில் பிறந்தார். செல்வச் செழிப்புமிக்க மகாமுதலி சேர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவுக்கும், டெஸி எஸிலின் ஒபேசேகரவுக்கும் மகனாக அவர் பிறந்தார்.

கல்கிசை சென். தோமஸ் கல்லூரியில் இரு மொழி கல்வி பெற்றார். இக்கல்வியை பூர்த்தி செய்த பண்டாரநாயக்க, 1919 இல் இங்கிலாந்து சென்று ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இணைந்து சட்டத் துறையில் உயர் கல்வியைத் தொடர்ந்தார். பல்கலைக்கழக காலத்தில் அவர் ஏனைய துறைகளிலும் தமது திறமைகளை வெளிப்படுத்தினார்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் கற்ற பண்டாரநாயக்க பரிஸ்டர் பட்டத்தை பெற்று 1925 பெப்ரவரி 27 ஆம் திகதி தாயகம் திரும்பினார். தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் போது உரையாற்றிய பண்டாரநாயக்க, தமது நாடு காலனியாதிக்கத்துக்கு உட்பட்டிருப்பதால் மக்களும் நாடும் அனுபவிக்கும் வேதனையை சுட்டிக்காட்டியதோடு அவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்கான முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்.

‘நாட்டுக்காக அரசியலைத் தெரிவு செய்ய மக்கள் விரும்புவார்களாயின் தாம் மக்களை ஆளும் ஆட்சியாளனாகவன்றி மக்கள் சேவகனாக கடமையாற்ற தயாராக உள்ளேன்’ என்றார்.

இந்நாட்டை பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுவிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் அவர் சிந்திக்கத் தொடங்கினார். இதற்கென மக்கள் மத்தியில் தேசிய சிந்தனையை கட்டியெழுப்புவதன் அவசியத்தையும் உணர்ந்து அன்றைய காலகட்டத்தில் செயற்பாட்டிலிருந்த இலங்கை தேசிய சங்கத்திலும் அவர் இணைந்து தீவிரமாக செயற்படலானார்.

1926 டிசம்பர் 14ஆம் திகதி கொழும்பு மாநகரசபைக்கு நடைபெற்ற தேர்தலில் மருதானை வட்டாரத்தில் இவர் போட்டியிட, இவருக்கு எதிராக தொழிற்சங்கத் தலைவர் ஈ. ஏ. குணசிங்க தேர்தலில் களமிறங்கினார். 615 மேலதிக வாக்குகளால் குணசிங்கவை தோற்கடித்து இவர் மாநகர சபை உறுப்பினரானார். அதனூடாக நேரடி அரசியலில் பிரவேசித்த இவர், மக்கள் சேவகனாக மாறினார். மாநகர சபை உறுப்பினராக பதவி வகித்த காலத்தில் மக்கள் சேவைக்கு அளித்த முன்னுரிமை காரணமாக மக்களின் விருப்பத்திற்குரிய தலைவராக மாறினார் பண்டாரநாயக்கா.

இவ்வாறான சூழலில் 1931 மே 04 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் வெயாங்கொட தொகுதியில் போட்டியிட்டு அரச பிரதிநிதிகள் சபைக்கு இவர் தெரிவானார். அதனைத் தொடர்ந்து அரசியலின் ஊடாக நாட்டினும் மக்களினும் சுபீட்சத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்து உழைக்கலானார்.

இவர் 1940 ஒக்டோபர் 03 ஆம் திகதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை திருமணம் செய்து குடும்ப வாழ்வில் பிரவேசித்தார். அதனூடாக இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் கிடைக்கப் பெற்றனர். இவர்களில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பிற்காலத்தில் இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டார். அநுர பண்டாரநாயக்க பிற்காலத்தில் இந்நாட்டின் சபாநாயகரானார். சுனேத்ரா பண்டாரநாயக்க இந்நாட்டின் முன்னணி சமூக செயற்பாட்டாளராக விளங்குகிறார்.

பண்டாரநாயக்க ‘எனக்கு முதல் நாடு’ என்ற எண்ணக்கருவை இந்நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில் 1945 ஜனவரி 19ஆம் திகதியன்று ‘சுதந்திர இலங்கைச் சட்டத்தை அவர் அரச பேரவைக்கு கொண்டுவந்தார். அது தனித்துவமிக்க சுயாதீனமான இலங்கைக்கான முதலாவது ஆவணமாகும். இந்த ஆவணம் இந்நாட்டு சுதந்திரத்தின் தேவையையும் தனித்துவத்தையும் எடுத்துக்காட்டக் கூடியதாக விளங்கியது. பிரித்தானியர் அச்சட்டத்திற்காக இலங்கைக்கு உடனடியாக சுதந்திரத்தை வழங்க முன்வரவில்லை. ஆனாலும் நாலாண்டுகள் கடந்த நிலையில் 1948 பெப்ரவரி 04 ஆம் திகதி இந்நாட்டுக்கு சுதந்திரம் வழங்கினர். அது டொமினியன் அந்தஸ்து கொண்ட சுதந்திரமாகவே இருந்தது.

சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமராக டி. எஸ் சேனநாயக்க பதவியேற்றார். அவர் தலைமையிலான அரசாங்கத்தில் இவர் சுகாதாரம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பதவியேற்றார். இந்நாட்டுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை பண்டாரநாயக்க விமர்சனக் கண்கொண்டுதான் நோக்கினார். இது தொடர்பில் அவர் ‘பெளதீக ரீதியில் நாடு பெற்றுக் கொண்ட பேரளவிலான சுதந்திரம்’ என்று அடிக்கடி கூறலானார்.

Founders S.W.R.D.Bandaranaike and D.A.Rajapaksa
S.W.R.D.Bandaranaike and D.A.Rajapaksa

நாட்டின் சுதந்திரம், தனித்துவம் தொடர்பில் கொண்டிருந்த பார்வையின் அடிப்படையில் டி.எஸ். சேனநாயக்கவின் அரசிலிருந்து 1951 ஜுலை 12 ஆம் திகதி பண்டாரநாயக்க வெளியேறி எதிரணிக்கு சென்றார். அவருடன் அமரர் டி.ஏ. ராஜபக்‌ஷவும் இணைந்து சென்றார். அதன் பின்னர் மேலும் சிலர் எதிரணிக்கு சென்றனர்.

இவர்கள் ஒன்றிணைந்து 1951 செப்டம்பர் முதலாம் திகதி கண்டியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். அவர்களுடன் கலாநிதி பதியுதீன் மஹ்மூத், எஸ். தங்கராசா, ரி.பி இலங்கரத்ன உள்ளிட்ட மேலும் பல முக்கியஸ்தர்கள் அன்று இணைந்து கொண்டனர். அங்கு கட்சிக்கான ஆட்சேர்ப்பும் இடம்பெற்றது.

மறுநாளான 1951 செப்டம்பர் 02 ஆம் திகதி கொழும்பு புதிய நகர மண்டபத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இக்கட்சியை நாடெங்கிலும் மக்கள் மத்தியில் பரவலாக்குவதற்காக பண்டாரநாயக்கவும் அவரது தோழர்களும் இரவு பகல் பாராது அயராது உழைத்தனர். இதன் பயனாக கட்சி அமைக்கப்பட்ட ஒரு வருட காலப்பகுதிக்குள் நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு முதன் முறையாக 08 ஆசனங்களை வென்றெடுத்தது ஸ்ரீ.லசு.க. அவர்களில் பண்டாரநாயக்கவும், டி.ஏ ராஜபக்‌ஷவும் அடங்கியிருந்தனர். அந்த 8 ஆசனங்களையும் கொண்டு எதிர்க்கட்சி அரசியலினூடாக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஸ்ரீ.ல.சுதந்திர கட்சி ஆற்றிய சேவைகளின் பயனாக சொற்ப காலத்தில் ஆட்சிபீடமேறும் கட்சியென்ற அந்தஸ்தை அக்கட்சி பெற்றுக் கொண்டது.

1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீல.சு.கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிபீடமேறியதோடு இந்நாட்டின் மூன்றாவது பிரதமராக எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க பதவியேற்றார். அந்த அரசாங்கத்தில் டி.ஏ. ராஜபக்‌ஷ நிலங்கள் மற்றும் நில மேம்பாட்டு அமைச்சின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார். பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்ததும் கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் திருகோணமலை சீனக்குடாவில் விமானப்படை முகாம்களை அகற்றியதோடு அங்கு பறந்து கொண்டிருந்த பிரித்தானியகொடிகளை இறக்கி, இந்நாட்டின் சிங்கக் கொடியைப் பறக்க விட்டார்.

மேலும் இவர் சிங்கள மட்டும் சட்டத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார். தமிழ் பேசும் மக்களின் தேவைகளையும் அபிலாஷைகளையும் யதார்த்தபூர்வமாக உணர்ந்து தமிழரசுக் கட்சி தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துடன் 1957 ஜுலை 26 ஆம் திகதியன்று உடன்படிக்கை செய்து கொண்டார்.

சிங்களம் மட்டும் சட்டத்தினால் ஏற்படும் விளைவுகளை தவிர்ப்பதற்காக தமிழ்மொழி விஷேட ஏற்பாடுகள் சட்டத்தையும் நிறைவேற்றினார். துறைமுகங்களையும் விமான நிலையங்களையும் பஸ் போக்குவரத்தையும் அரசு​ைடமையாக்கினார். தொழிலாளர்களின் நலன் கருதி ஊழியர் சேமலாப நிதியத்தை ஆரம்பித்தார். மே தினத்தை பொதுவிடுமுறை தினமாக்கினார். நாட்டின் நலன்களை முன்னிறுத்தி அணிசேராக் கொள்கையை முன்னெடுத்தார். அத்தோடு ரஷ்யாவுடனும் சீனாவுடனும் இராஜதந்திர உறவுகளையும் ஆரம்பித்தார். அமரர் செல்வநாயகத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையைத் தொடர்ந்து தென்பகுதியில் ஏற்பட்ட எதிர்ப்புகளுக்கும் ஆட்சேபனைகளுக்கும் இவர் துணிகரமாக முகங்கொடுத்து வந்தார். ஆனபோதிலும் அந்த உடன்படிக்கையிலிருந்து பின்வாங்க வேண்டிய நிலை அவருக்கு இறுதியில் ஏற்பட்டது. என்றாலும் அவர் மக்கள் சேவைக்கு முன்னுரிமை தொடர்ந்தும் செயற்பட்டு வந்தார்.

இவ்வாறான சூழலில் 25.09.1959 அன்று பிரதமரின் கொழும்பு -7 லுள்ள ரொஷ்மிட் பி​ளேஸ் இல்லத்திற்கு வந்த தல்துவே சோமராம தேரர் எவரும் எதிர்பாராத நிலையில் பிரதமர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தார். அதனால் படுகாயமடைந்த பண்டாரநாயக்காவுக்கு கொழும்பு வைத்தியசாலையில் ஆறு மணித்தியாலய சத்திரசிகிச்சை அளிக்கப்பட்டது. அச்சிகிச்சை பலனளிக்காத நிலையில் 1959 செப்டம்பர் 26ஆம் திகதி பண்டாரநாயக்கா உயிரிழந்தார். தல்துவே சோமராம தேரரின் ரவைகள் பண்டாரநாயக்கவை மௌனிக்கச் செய்த போதிலும் அவர் நாட்டுக்கும் மக்களுக்கும் ஆற்றிய சேவைகள் என்றும் அழியா தடம்பதித்தவையாக இடம்பிடித்து விட்டன. முன்மாதிரி மிக்க அரசியல் தலைவராக அவரை அடையாளப்படுத்தியுள்ளது.

Tags: