பயண இலக்கியத்தின் தந்தை ராகுல் சாங்கிருத்தியாயன்

யண இலக்கியம் என்றொரு பிரிவு உருவாகக் காரணமாக அமைந்தவர்களில் முதன்மையானவர்கள் என்றால் ராகுல்ஜி என்ற ராகுல் சாங்கிருத்தியாயன் அதில் முக்கியமானவர். குறிப்பாக மானுடவியல் ஆய்வுகளில் ஆவண நூலாகப் போற்றப்படும் வால்காவிலிருந்து கங்கை வரை என்னும் பெரும் பயண ஆவணத்தின் படைப்பு கர்த்தா இவரே.

ஆன்மீகவாதியாக, புத்த மத துறவியாக, மானுடவியல் ஆய்வாளராக, மார்க்சியவாதியாக என பல பரிமாணங்களில் தன் பரிணம வளர்ச்சியைப் பதிவு செய்த ராகுல சாங்கிருத்தியாயனை வரலாறு தன் கணக்குப்புத்தக்கத்தில் வரவு வைத்துக் கொண்ட நாள் இன்று.

அது 1893ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி. இன்றை உத்தரப்பிரதேச மாநிலத்தில், இருந்த பண்டகா என்னும் கிராமத்தில் பிறந்தார். எல்லா சிந்தனையாளர்களுக்குமான பொது விதிதான். இவருக்கும் பள்ளிப்படிப்பில் பெரும் நாட்டமெல்லாம் இல்லை. ஆனால், எந்த ஒன்றையும் தேடி அடைவது என்பதில் தீரா உறுதி கொண்டவராக இருந்தார்.

தன் 20ஆவது வயதில் எழுதத் தொடங்குகிறார். அவரது பிள்ளைப்பருவ காலத்தில் தேசத்தின் பெரும் பிரச்சினையாக இருந்த பஞ்சம் குறித்து எழுதியதுதான் அவரது முதல் எழுத்துப்படி. அதன்பின்னர் தன் வாழ்நாள் முழுக்க அலைந்து அலைந்து அனுபவங்களை ஆவணமாக்கிக்கொண்டே இருந்தார். இது, பயண இலக்கியத்தின் தந்தை என்ற பொருண்மைக்கு அவரைப் பொருத்தமாக்கியது.

ஊர் சுற்றிகளின் அரசன் ராகுல்ஜி

வீ.பா. கணேசன்

ம்மில் பலரும் மார்க்சியத்தை நோக்கி அடிவைக்கும்போது ராகுல்ஜியின் ‘பொதுவுடமைதான் என்ன?’, ‘வால்காவிலிருந்து கங்கை வரை’, ‘சிந்து முதல் கங்கை வரை’ போன்ற பல நூல்களை படித்திருப்போம். நாம் அதுவரை படித்து வந்த மாமன்னர்களின் பட்டியல் வரிசைக்கு முற்றிலும் மாறாக, இந்தியாவின் எழுதப்படாத வரலாறு பற்றிய சித்திரங்களை நம் மனக்கண் முன் கொண்டு வந்த அந்த மாமேதையின் வாழ்க்கை முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவே இருந்தது.

அன்று ஐக்கிய மாகாணம் என அழைக்கப்பட்டு வந்த உத்திரப் பிரதேசத்தில் ஆஜம்கட் மாவட்டத்தில் இருந்த பண்டகா என்ற கிராமத்தில், ஏழு தலைமுறைகளாக விவசாயத்தில் ஈடுபட்டு வந்த ஒரு பிராமணக் குடும்பத்தில், 1893 ஏப்ரல் 9 அன்று கேதார் நாத் பாண்டே என்ற இயற்பெயருடன் பிறந்த அவர் ஊர் சுற்றிகளின் அரசன் என்று போற்றப்படும் அளவிற்கு பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து அங்கிருந்த கலைச்செல்வங்களை இந்தியாவிற்குக் கொண்டு வந்தவர். அவர் சேகரித்து வந்த புத்த மத தத்துவ நூல்கள் இன்றும் பாட்னா அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சிறு பகுதி மட்டுமே ஜப்பான், சீனா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த புத்தமத ஆய்வாளர்களின் ஆய்வுக்கு உட்பட்டுள்ளன. 1963 ஏப்ரல் 14 அன்று தனது 70வது வயதில் மறைந்த ராகுல்ஜி எனும் ராகுல சாங்கிருத்தியாயன் இன்றளவும் அவரது எண்ணற்ற எழுத்துக்களுக்காக இன்றுவரை போற்றப்படுகிறார்.

ராகுல்ஜியின் வாழ்க்கையை நான்கு பருவங்களாகப் பிரிக்கலாம். முதல் பருவம் அவரது துறவுக்காலத்தைக் குறிப்பிடுவதாக இருக்கும். இப்பருவத்தில் 17-18வயதிலேயே துறவு பூண்டு இமயமலைப் பகுதிகளில் சுற்றி வந்து இந்தியாவின் பல வைணவ மடங்களின் மடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டு ராமுதர் தாஸ், தாமோதராச்சாரி என்ற பெயர்களில் வாழ்ந்த காலத்தை, இக்காலத்தில் அவர் பெற்ற மிக ஆழமான சமஸ்கிருத அறிவாற்றலை எடுத்துக் கூறுவதாக இருக்கும்.

அதற்கடுத்த பருவம் துறவுக் கோலத்திலிருந்து வெளியேறி அவர் ஆர்ய சமாஜியாக இருந்த காலத்தைக் குறிக்கிறது. இப்பருவத்தில் மத வேறுபாடுகளைக் கடந்து, இந்திய விடுதலைக்கு கல்வியே அடித்தளம் என்ற உணர்வுடன் மக்களிடையே ஆங்கிலத்திலும், இந்தியிலும் நாவன்மை மிக்க பிரச்சாரகராய் செயல்பட்ட காலத்தை நமக்கு எடுத்துக் காட்டுவதாய் இருக்கும்.

அதற்கடுத்த பருவம் புத்தமத தத்துவங்களை அறியத்துவங்கி, அதன் ஆணிவேர் எனச் சொல்லத்தக்க திரிபீடகம் (முப்பெரும் தத்துவம்) என்ற தத்துவத்தை முழுமையாக உள்வாங்கி, அதையும் தாண்டி புத்தமத அறிவுச் செல்வங்களைத் தேடி கடும் முயற்சியுடன் திபெத் பகுதிக்குச் சென்று பெறர்கரிய சமஸ்கிருத, பாலி, பிராகிருத மொழி நூல்களை படியெடுத்துக் கொண்டு வந்து சேர்த்த பகுதியாகும். இந்தப் பருவத்தில் நேபாளத்தில் தேரவாடா என்ற புத்த மதப்பிரிவு தழைத்தோங்கவும், அங்கிருந்த மன்னராட்சிக்கு எதிராக இளைஞர்களை தட்டியெழுப்பிய எழுத்துக்களை வடித்ததும் அடங்கும்.

இதற்கடுத்த பருவம் சோஷலிச கருத்துக்களை ஆழ்ந்து கற்று, சோவியத் மண்ணில் பேராசிரியராக, ஆராய்ச்சியாளராக பணியாற்றி, அந்த நாட்டில் சோஷலிசம் விதைக்கப்படுவதை நேரில் கண்டு அதை தம் தாய்நாட்டிலும் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற வேகத்துடன் பீகாரில் விவசாயிகளின் போராட்டங்களை உருவாக்கி நடத்திய கம்யூனிஸ்ட் செயல்வீரராக இருந்த, பொதுவுடமைத் தத்துவங்களை மிக எளிய முறையில் மக்களுக்குக் கொண்டு செல்ல எண்ணற்ற நூல்களை எழுதிக் குவித்த பருவமும் ஆகும்.

தமிழ் உள்ளிட்டு மொத்தம் 33 மொழிகளில் செயல்படும் திறமை பெற்றவராக இருந்த ராகுல்ஜி தன் வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்திலும் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான அறிவுச் செல்வத்தைத் தேடி அலைபவராகவே இருந்தார். வேதாந்தக் கல்வியில் மூழ்கியிருந்தபோதும் இந்திய நாட்டின் விடுதலைக்கான இயக்கங்களில் தீவிரமாகச் செயல்பட்டு சிறைத் தண்டனை பெறும் செயல் வீரராகவும் அவர் திகழ்ந்தார். அவரது நீண்ட சிறைவாழ்க்கையும் எழுத்துப் பணிகளை மேற்கொள்ள உதவியது. முறையான பள்ளிக் கல்வியோ, பல்கலைக்கழகப் பட்டமோ பெறாதவராக இருந்தபோதிலும் அவரது ஆழ்ந்த கல்வித் திறனின் காரணமாக இலங்கையில் வித்யாலங்கார பரிவேனா என்ற பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத பேராசிரியராக, சோவியத் யூனியனில் லெனின்கிராட் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத பேராசிரியராக பணியாற்றும் வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. மிக நீண்ட காலமாகவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ராகுல்ஜி 1961டிசம்பரில் கல்கத்தாவில் தன் சுயநினைவை இழந்தார். இந்தியாவிலும் சோவியத் யூனியனிலும் அவரது நிலையை மேம்படுத்த சிகிச்சைகள் செய்யப்பட்டபோதும், எவ்வித முன்னேற்றமும் இல்லை. இறுதியில் 1963 ஏப்ரல் 14 அன்று டார்ஜிலிங்கில் இருந்த அவரது இல்லத்தில் உயிர்நீத்தார்.

இந்தி மொழியில் அவர் எழுதிய ஆறு தொகுதிகளைக் கொண்ட எனது வாழ்க்கைப் பயணம், சிம்ம சேனாபதி, புத்த சரிதம், புத்த தர்ஷன், புத்த சம்ஸ்க்ருதி, மகா மனிதர் புத்தர், புத்தரின் பன்முகப் பார்வை, ஊர்சுற்றிப் புராணம், ரிக் வேத ரகசியம், இஸ்லாமிய தர்மம் என நீண்டு கொண்டே போகும் நூல்களின் பட்டியல்.

மார்க்சிய தத்துவத்தில் ஆழ்ந்த பிறகு, பொதுவுடமைத் தத்துவத்தைப் பரப்புவதற்காக அவர் எழுதிய எண்ணற்ற நூல்களில் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் பற்றிய அறிமுக நூல்கள், மார்க்சிய தத்துவம் குறித்த அறிமுக நூல்கள், மார்க்சிய பார்வையில் உலக வரலாற்றை, இந்திய வரலாற்றை அறிமுகம் செய்யும் நூல்கள், இதுவரை அவர் கற்றறிந்திருந்த வேதாந்த, புத்த தத்துவங்கள்  குறித்த மீள்பார்வை குறித்த நூல்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவையாக  இருந்தன. அவரது வாழ்நாளில் 50,000 பக்கங்களுக்கு நூல்கள் வெளியாகி இருந்தன எனில், அவரது குறிப்புகளின் அடிப்படையில் மேலும் 25,000 பக்கங்களுக்கு நூல்கள் (அவரது மனைவியும் பேராசிரியருமான கமலாவின் முயற்சியில்) பின்னர் வெளியாயின என்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றில் வால்காவிலிருந்து கங்கை வரை நூல் வேறெந்த நூல்களையும் விட அதிகமான மொழிகளில் வெளியாகி ராகுல்ஜியின் பெயரை இன்றும் நிலைநிறுத்தி வருகிறது.

இந்திய தத்துவ உலகில் மூழ்கி, அதன் விலைமதிக்க முடியாத செல்வங்களை மீட்டெடுத்து வந்து அறிமுகப் படுத்தி, பின்னர் மார்க்சிய தத்துவத்தில் ஈடுபட்டு, அதை இந்திய மண்ணுக்கு, இந்திய தத்துவப் பின்னணியில் அறிமுகப்படுத்தும் பணிகளில் தன் வாழ்நாளின் இறுதிவரை பாடுபட்ட தேசியவாதியாக அவர் திகழ்ந்தார் எனில் மிகையாகாது. இந்தியாவின் பண்டைய இலக்கியங்களை உலகிற்கு அறிமுகப்படுத்துவதில், குறிப்பாக புத்த மத தத்துவ  நூல்களை மீட்டெடுத்து வந்து அவற்றுக்குப் புத்துயிர் ஊட்டியதில் தனிச்சிறப்பு பெற்றவராகவும் அவர் திகழ்கிறார்.

ஊர் சுற்றுவதில் தனிச்சிறப்பு பெற்றிருந்த ராகுல்ஜி, தான் கண்ட செல்வங்கள் அனைத்தையும் திரட்டிக் கொண்டு வந்து இந்திய அறிவுலகில் பாத்தி கட்டி வளர்த்த அறிஞரும் ஆவார். இந்தியாவின் பண்டைய வரலாற்றில் ஆழக் கால்பதித்து அவர் எழுதிய எழுத்துக்கள் நமக்கு புதிய வெளிச்சத்தை தருபவையாய் விளங்குகின்றன. அவர் பிறந்து மறைந்த இந்த மாதத்தில் அவரை நினைவு கூர்ந்து அவற்றை வாசிப்போம்! அனைவருக்கும் எடுத்துச் செல்வோம்!

ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி! – யார் இவர்?

ருவரின் புத்தகத்தைப் படிக்கிறோமோ இல்லையோ, அப்புத்தகம் பற்றிய மற்றவரின் அபிப்ராயத்தைக் கேட்டவுடன், அப்புத்தகத்தின் மீது ஒரு மதிப்பு வரும். ஒரு கட்டத்தில், நாம் அந்தப் புத்தகங்களைப் படிக்கிறபோது, இன்னும் அம்மதிப்பு இரட்டிப்பாகும். அவ்வாறு படித்ததுதான், இந்தி பயண இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்படும் ராகுல சாங்கிருத்தியாயனின் புத்தகங்கள். இன்று அவரின் பிறந்த நாள் என்பதால். அவரின் படைப்புகள் குறித்து இங்கு பகிர்கிறேன்.

#பயணம் செய்யக் கற்றுக்கொள்;

கற்றுக்கொள்ள பயணம் செய்

“ஓ அறிவிலிகான்சோம்பேறிகளே புறப்படுங்கள்…பரந்த உலகம் முழுவதும் சுற்றி வாருங்கள். இதற்காக உங்களுக்கு இன்னொருவாழ்வு கிடைக்கப்போவதில்லை. நீங்கள் நெடுநாள் வாழ்ந்தாலும்கூட, இந்த இளமை உங்களுக்கு மீண்டும் வரப்போவதில்லை.”

ராகுல சாங்கிருத்தியாயனின் மனம் கவர்ந்த உருது கவிதை இது.

தன் 10 வயதிலேயே வீட்டிலிருந்து வெளியேறியவர். கேதார்நாத் பாண்டே எனும் இயற்பெயர் கொண்ட இவர், திபெத்தில் புத்த துறவியாக மாறி, தன் பெயரை ராகுல சாங்கிருத்தியாயன் என மாற்றிக்கொண்டார்.

45 ஆண்டு காலம் பயணம் செய்து, 30 மொழிகளைக் கற்று, 146 புத்தகங்களை எழுதியுள்ளார். தமிழின் சைவ, வைணவ நூல்கள் கற்றார்.

ரஷ்யாவில் லெனின் கிராட் பல்கலைக்கழகம் இவரை கெளரவப் பேராசிரியராக நியமித்தது குறிப்பிடத்தக்கது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். 1942 ஹஜாரிபாக் சிறையில் இருந்தபோதுதான், புகழ்பெற்ற ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ (1949) மற்றும் ‘பொதுவுடைமைதான் என்ன?'(1946) எனும் இரு நூல்களை எழுதினார். அங்கே, ஓர் அதிசயமாக… அதே சிறையிலிருந்த கண.முத்தையா அவர்கள் இந்த இரு நூல்களையும் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

#தத்துவநூல்

ராகுல் என்றவுடன் அனைவரும் சொல்வது வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகமே. ஆனால், பொதுவுடைமைதான் என்ன எனும் புத்தகம் ராகுல்ஜி தீர்க்கதரிசனத்துடன் எழுதிய புத்தகம் என்று சொல்லலாம்.1914 முதல் உலகப் போரை ஒட்டி இந்தியாவை மையமாக வைத்து எழுதினார். அப்போது, இந்நூலை தமிழகத்தில் தடை செய்யலாமென சட்டசபையில் கூறியவுடன், டாக்டர் சுப்பராயன், ‘இந்நூலை தடைசெய்ய வேண்டியதில்லை. இது ஒரு தத்துவ விளக்க நூல்’ எனப் பதிலளித்தார்.

#பொதுவுடைமைதான் என்ன

ஐரோப்பாவில் முதலாளிகள் என்பவர்கள் பரம்பரை பணக்காரர்கள், ஜமீன்தார்கள், வட்டித்தொழில் செய்பவர்களாய் இருந்தனர். நீராவி இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்புதான் முதலாளிக் கொள்கை ஆரம்பமானது. நீராவியில் இயங்கும் இயந்திரம் வந்தவுடன், தொழில் வளர்ச்சியின் தொடக்கப்புள்ளி தோன்றியது.இங்கிலாந்தில் அநேகர் அப்போது முதலாளியாக முயற்சித்தனர்.

இதன்மூலம் அவர்களிடையே போட்டி ஏற்பட்டது. விற்பதற்கு சந்தை தேவைப்பட்டது. தங்கள் பொருள்களின் சந்தை தேவைக்காக முதலாளித்துவம் நாடுகளைப் பிடித்து பங்கு போட ஆரம்பித்தது.1865ல், பம்பாயில் மில்களை ஆரம்பித்தனர். இந்த இயந்திரங்களின் மூலம் தனி மனிதர்கள் லாபமடைந்தாலும் பெருமளவு மனிதர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது.10 பேர் செய்யவேண்டிய வேலையை ஒருவர் செய்ததால், 9 பேர் வேலையிழந்து வறுமையில் வாழ்ந்தனர். வயிற்றுப்பசி எந்த சாதாரண மனிதனையும் கொஞ்சமாக சிந்திக்க கட்டாயப்படுத்தும். அப்போது, பொதுவுடைமை துணை நிற்கும் என்றார்.

#முதலாளித்துவத்தால் ஏற்படும் இடர்பாடுகள்

“உலகின் பெரிய பெரிய யுத்தங்களுக்கெல்லாம் ஒரே காரணம் முதலாளித்துவக் கொள்கையாயிருக்கும்”என்றார்.

இயந்திரங்களின் வளர்ச்சியினாலும், அதிகமான மனித வளம் இருப்பதாலும் வேலையிழப்பு தவிர்க்க முடியாதது. உதாரணத்திற்கு, தற்போது ஏழாயிரம் ரூபாய் ஊதியத்தில் ஒரு நிறுவனத்தில் டெலிவரி மேனாகப் பணியாற்றுவோர், பத்தாயிரம் ரூபாய் வந்தவுடன் அவர்களை நீக்கிவிட்டு புதிதாய் மீண்டும் ஏழாயிரம் ரூபாய்க்கு ஆள் எடுப்பார்கள். இவ்வாறு வேலையிழப்பு காலமாற்றத்திற்கேற்ப பரிணமித்திருக்கிறது. இதனால் ஆரம்பகால மாட்டு வண்டி காலத்திற்குச் செல்லலாம் எனக் கூறவில்லை. இந்த முதலாளித்துவ விஷயத்திற்கு பொதுவுடைமைதான் தீர்வு எனக் கூறுகிறார்.

நாடுகளிடையே நிலவும் ஆயுதப் போட்டி, பலம் குறைந்த நாடுகளை வழிக்குக் கொண்டுவருவது. இதுதவிர மக்களிடையே மதம்-ஜாதியெனப் பிரிவினை பேதம் ஏற்படுத்தும் எனவும் எச்சரித்தார்.

சுரண்டுபவர்கள், கடவுளை ஆயுதமாக நினைப்பதை வெறுத்தார்.

பெண்களுக்கு வேலை கொடுப்பதாகச் சொல்லும் முதலாளிகள், அதையும் தங்கள் சுய லாபத்திற்குப் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு, ஐரோப்பாவில் அப்போது ஒரு ஆணுக்கு 3 ரூபாய் கூலி தர வேண்டும். ஆனால், பெண்களுக்கு 1-50 பைசா கூலி கொடுத்தார்கள். பொதுவுடைமை இத்தகைய பொருளாதார சமத்துவத்திற்குப் போராடியது.

#எதிர்காலத்தில்

இப்புத்தகம் எழுதி 74 ஆண்டுகள் இருக்கும். ஆனால், ராகுல்ஜி தீர்க்கதரிசனத்துடன் எழுதியுள்ள பல விஷயங்கள் பிரமிப்பாக உள்ளது.

*வாக்குரிமைகளை விலைக்கு வாங்குவதைத் தடுக்க முடியாது.

* சாமான்யர்கள் போட்டியிட முடியாது.

*சுயசிந்தனை குறையும்.”காகம் உன் காதைக் களவாடிவிட்டது என்றால், காதைத் தடவிப்பார்க்காமல் காகத்தின் பின் ஓடுவார்கள்.

*இன்று அதிர்ஷ்டப் பொருளாயிருக்கும் கலை,கல்வி எல்லா மக்களுக்கும் அப்போது எட்டக் கூடியதாயிருக்கும்.

*உலகில் வேலை செய்யத் தகுதியுள்ள நபர்கள் ஒரு மணி நேரம் உழைத்தால் போதும். அடிப்படை வசதிகள் கிடைக்கப் போதுமானதாய் இருக்கும்.

*மீதமுள்ள நேரத்தில் கலை, உடற்பயிற்சி,பிரயாணத்தில் ஈடுபடுவர். ஒரு இடத்திலுள்ள மனிதர்கள் மற்ற இடத்திலுள்ள மனிதர்களுக்கு உதவி செய்ய ஓடுவார்கள். அப்போது, மனித சமுதாயம் ஒரு குடும்பமாய் மாறியிருக்கும்.

#புத்தகத்தின் இறுதி வரியாய் எழுதியிருப்பார் இவ்வாறு…

“இயற்கையின் கோபத்தால் ஆபத்துகள் ஏற்படும்போது, அதிக விரைவாகவும், தயாராகவும், தைரியத்துடனும் அதை எதிர்ப்பான்.

அக்காலத்தில் மனிதனுக்கும் மனிதனுக்குமான உறவு, அன்பும் அனுதாபமும் நிறைந்ததாய் இருக்கும் என முடித்திருப்பார்.

தீர்க்கதரிசனத்துடன் எழுதிய மகாபண்டிதரின் எழுத்துகளின் வழியே அவர் பிறந்தநாளில் நினைவு கூர்வோம்.

மணிகண்ட பிரபு

Tags: