பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் நாம் எங்கே இருக்கின்றோம்?

கௌரி சிவபாலன்

அத்தனை உயிரினத்திலும் மனிதனே வலியவன் என்ற சிந்தனை அறிவீனம்!

இந்த பிரபஞ்சத்தில் நாம் எங்கே இருக்கின்றோம். எந்த அளவாக நாம் இருக்கின்றோம், எமது அறிவு பிற உயிர்களுடன் ஒப்பிடும் பொழுது எப்படியானது என்பன பற்றி ஆராய்வதே இக்கட்டுரை.

நாம் வாழும் பூமி சூரியக் குடும்பத்தைச் சேர்ந்தது. இச்சூரியக் குடும்பத்தில் ஒன்பது கிரகங்களும் அவை பிரயாணம் செய்கின்ற பாதைகளும் அமைந்த பரப்பு ‘சிற்றண்டம்’ என்று அழைக்கப்படும். நாம் வாழ்கின்ற பூமி தன்னைத் தானே சுற்றுவதுடன் சூரியனையும் சுற்றி வரும் பாதை இந்தச் சிற்றண்டத்திலேயே அடங்குகின்றது.

1008 சிற்றண்டங்கள் சேர்ந்த பரப்பு ஒரு பேரண்டமாகும். 1002 பேரண்டங்கள் சேர்ந்த பரப்பு ஒரு புவனம் ஆகும். 2214 புவனங்கள் சேர்ந்த பரப்பு சாகரம் எனப்படுகின்றது. 7 சாகரங்கள் சேர்ந்த பரப்பு பதம் எனப்படுகிறது. 814 பதங்கள் சேர்ந்ததே இந்தப் பிரபஞ்சம் என பிரபஞ்சப் படைப்புப் பற்றி ‘தொன்மைத் தத்துவங்களும் அண்மை அறிவியலும்’ என்னும் நூலில் இருந்து அறியக் கூடியதாக இருக்கின்றது.

நாம் வாழும் பூமி 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. அதன் வயது 460 கோடி வருடங்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். இத்தனை கோடி வருடங்களில் நிலம், நீர், காற்று போன்றவற்றில் சிறிய நுண்ணுயிர்கள், தாவரங்கள், பூச்சிகள், ஊர்வன, விலங்குகள், மனிதன் என ஒரு பில்லியனுக்கும் அதிகமான வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றுள் ஒரு இனமே மனித இனம். இம்மனித இனத்திலே நாமே அறிவாளிகள், எம்மை மிஞ்ச ஆளும் இல்லை, எமக்கு நிகர் எவரும் இல்லை என மார்பு தட்டிக் கொள்ளும் நாம் இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போம்.

இந்த பிரபஞ்சத்தில் பூமி தவிர்ந்த வேற்றுப் பிரபஞ்சப் பரப்பில் எம்மைப் போன்ற மனிதர்களோ வேறு விதமான உயிரினங்களோ வாழ்கின்றனவா என ஆராய்ச்சியாளர்கள் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். எழுத்தாளர்களும் கற்பனையில் உயிர்கள் இப்படி இருக்கலாம் என்று வடிவங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இது பற்றிய விதம் விதமான ஆங்கிலப் படங்கள் வெளிவந்துள்ளன. ஒரு அண்டத்தில் இருந்து பிற அண்டத்தை அடையவே மனிதனின் ஆயுள் காலம் முடிந்து விடும். இந்த அற்புதமான பிரபஞ்சப் படைப்பில் மனிதனும் அவன் போன்ற வேற்றுக் கிரகவாசிகளும் இம்முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள் என்பதே கற்பனையாகின்றது.

450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தான் தாவரங்கள் தோன்றின என்றும், உலகில் மனிதனின் தொகை 700 கோடியாக அதிகரித்துள்ளது என்பதும் ஆய்வாளர்கள் கணிப்பீடு. நாம் வாழும் காலப்பகுதியில் எத்தனையோ எழுத்தாளர்கள், சுவாமிகள், மேதாவிகள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகளைக் கண்டிருக்கின்றோம், கேள்விப்பட்டிருக்கின்றோம். தற்போது இணையம் அவர்களை அடையாளம் காட்டுகிறது. காலப்போக்கில் எம்முடைய வீடியோ நாடாக்கள், ஒலிநாடாக்கள் மறைந்து போனது போல் இணைய வடிவமும் மாறலாம். அப்போது இணையம் தொலைத்து ‘ரொபோட்டோக்கள்’ தேடும் காலங்களில் இவர்கள் மறக்கப்படலாம்.

எமது சந்ததியை பார்க்கின்ற போது, எமது தந்தையின் தந்தையை அல்லது எமது தந்தையின் பாட்டனின் பெயர் எமக்குத் தெரிந்திருக்கின்றதா? இல்லை அவர் பற்றி அறிகின்றோமா? இங்கு எமது நிலை இப்பிரபஞ்ச வாழ்நாளில் எங்கே என்று இப்போது அறிந்து கொள்கின்றோம்.

இத்தேடல் என்பது மனிதனில் மட்டும்தான் இருக்கின்றதா, இல்லை வேறு உயிரினங்களிலும் இருக்கின்றனவா? என்பன கேள்விக்குறிகளாகும். பூமியில் கோடிக்கணக்கான உயிரினங்கள் உள்ளன. அவற்றை தொல்காப்பியர்

‘ஒன்ற றிவதுவே உற்ற றிவதுவே

இரண்டறிவதுவே அதனொடு நாவே

மூன்றறிவதுவெ அவற்றொடு மூக்கே

நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே

ஆறறிவதுவெ அவற்றொடு மனனே

நேரிதி உயர்ந்தோர் நெறிப்படுத்தினரே’ என்று ஓரறிவு, ஈரறிவென வகைப்படுத்தினார்.

ஆனால் இவ்வகைப்படுத்தலை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. லின்னேயஸ் என்னும் பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி 1707 ஆம் ஆண்டிலே உயிர்களின் உடலமைப்பு, தன்மை, இயல்புகளை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தினார். உயிரினங்கள் முதலில் தாவரங்கள், பிராணிகள் என்று வேறுபடுத்தினார். பிராணிகளில் முதுகெலும்பு உள்ளவை, முதுகெலும்பு இல்லாதவை என்று இரு உபபிரிவுகள் உள்ளன. முதுகெலும்பு உள்ளவை மீன், தவளை, ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என்று 5 பிரிவுகள் உள்ளன. முதுகெலும்பு இல்லாதவை அமீபா, கடற்பஞ்சு, மண்புழு, பூச்சி, சிப்பி, நட்சத்திரமீன் ஆகியன அடங்கும்.

தாவரங்களில் இரு பெரும் பிரிவுகள் உள்ளன. பூ உள்ளவை, பூ இல்லாதவை. பூவுள்ள தாவரங்களில் மூடிய விதையுள்ளவை, மூடாத விதை உள்ளவை என இருவகைப்படுகின்றன. அல்கா, காளான், பாசி, பிரணி ஆகியவை பூக்காத தாவரங்களாகின்றன. பாலூட்டிகள் குட்டி போட்டு பால் தருபவை. ஆடும், மாடும் ஒரே குடும்பம் . பூனையும், புலியும் ஒரு குடும்பம். கழுதையும், குதிரையும் ஒரே குடும்பம். இவற்றில் சைவமும் அசைவமும் உள்ளன. ஊர்வனவற்றுள்ள பாலூட்டிகள் உஷ்ண இரத்தம் உடையவை, நுரையீரல்களால் சுவாசிப்பவை… பறவைகளும் நுரையீரலால் சுவாசிக்கின்றன. ஆனால் அவை முட்டையிட்டு குஞ்சு பொரிப்பவை. ஒவ்வொரு பிரிவிலும் வெள்வேறு இலட்சணங்களும், பாகுபாடுகளும் இருக்கின்றன. இவ்வாறு லின்னேயஸ் மேற்கொண்ட ஆராய்ச்சி சொல்கின்றது.

இவற்றுடன் மனிதனின் திறமையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நாம் எம்மை நாமே மெச்சிக் கொள்வது போலியாகவே படுகின்றது. மனிதர்களில் சிறந்த கட்டடக் கலை விற்பனர்களுக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கின்றோம். ஆனால் கறையான்கள் சிறந்த கட்டடக்கலை நிபுணர்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இவர்களில் அரசன், அரசி, தொழிலாளர்கள், படைவீரர்கள், போன்ற பல பிரிவுகள் இருக்கின்றன. தொழிலாளர் கறையான்கள் செம்மண்ணை உண்ணும். அச்செம்மண் வயிற்றினுள் சென்று அமிலங்களுடன் சேர்ந்து ஒருவகை பதார்த்தமாகும். இதனை வாயினால் வெளியெடுத்தே தன் கட்டடப்பணியைத் தொழிலாளர் கறையான்கள் மேற்கொள்ளும்.

இக்கட்டடத்தில் ஏதாவது பழுது ஏற்பட்டு விட்டால், டிக்டிக் என்று மற்றைய கறையான்கள் தட்டும் போது தொழிலாளர் கறையான்கள் வந்து திருத்த வேலைகளைச் செய்யும். இக்கட்டடத்தில் பலவகையான அறைகள் இருக்கின்றன. உலாவும் அறையும் உண்டு. தொனேசியாவிலுள்ள ஒரு கறையான் புற்று 15,000 தொன் எடையுள்ளது. இது 150 ஆண்டுகள் பழைமையானது. சோழர்காலக் கட்டடம், பல்லவர் காலக் கட்டடம் என நாமும் பெருமை பேசிக் கொள்ளுகின்றோம். ஆபிரிக்கக் காட்டிலுள்ள சில கறையான் புற்றுகளை யானைகளால் கூட உடைக்க முடியாது.

இப்போது நினைத்துப் பாருங்கள் நாம் மட்டுமா நாட்டையும் வீட்டையும் காக்கின்றோம்? இப்படிப் பல பணிகளைப் பிரித்து ஒவ்வொருவருக்கும் கொடுத்து ஒரு இராச்சியமே நடத்தும் கறையான்களைப் பற்றி எம்முடைய ஒளவைப்பாட்டி என்ன கூறியுள்ளார் என்று பார்ப்போம்.

‘வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்

தேன்சிலம்பி யாவருக்குஞ் செய்யரிதால் யாம்பெரிதும்

வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்

எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது’

தூக்கணாங்குருவிக் கூடு, தேன்கூடு, கறையான் புற்று இவை யாருக்கும் செய்வது அரிது. எனவே யாம் கெட்டிக்காரர் என்று வலிமை சொல்ல வேண்டாம் என்று உறைக்கச் சொல்லுகின்றார்.

‘கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்ல மரங்கள் – சபைநடுவே

நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய

மாட்டா தவனன் மரம்’ என்று தரப்படுகின்ற எழுதப்பட்ட செய்தியை ஒரு சபையிலே வாசிக்கத் தெரியாதவனை மரம் என்று இகழ்ந்தார் ஒளவைப்பிராட்டி.

ஆனால், ‘மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்

மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்’

எனக் கவிதை பாடிய கவிப்பேரரசு வைரமுத்து மரங்களின் அத்தனை மகிமையையும் எடுத்துக் காட்டி மரங்களைப் பெருமைப்படுத்தினார்.

வேர்களால் உண்ட நீரை தலையாலே எமக்குத் திருப்பித் தருகின்ற தென்னையை எமது உபகாரத்திற்கு ஒப்பிடுவோமா. தன்னுடைய அங்கங்கள் அனைத்தையும் எமக்குப் பயன்படத் தருகின்ற பனையை எமது உபகாரத்திற்கு எடுத்துரைப்போமா?

நோய்களுக்கு மருந்தாக வாய்க்குச் சுவையாக வாழ்க்கைக்கு உதவியாகப் பயன்படுகின்ற மரங்களுக்குள் ஆச்சரியப்பட வைக்கும் பண்புகள் இருக்கின்றன.

இவ்வாறு உலகப்படைப்பின் அனைத்தும் அற்புதமே. அனைத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது நாம் எங்கே நிற்கின்றோம்?

Tags: