எழுத்தாளர் நந்தினி சேவியர் காலமானார்!

தே. சேவியர் என்ற இயற்பெயர் கொண்ட இலங்கையின் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் தமது 72வது வயதில் (மே 25, 1949 ஆண்டு பிறந்தார்) இன்று (16.09.2021) திருகோணமலையில் காலமானார்.

கடந்த சில நாட்களாக காய்ச்சால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நந்தினி சேவியர் யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவிலை பிறப்பிடமாகக் கொண்டவர். அவர் தமது ஆரம்ப கல்வியை மட்டுவில் கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலை, மட்டுவில் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, வதிரி திரு இருதயக் கல்லூரி ஆகியவற்றில் கற்றார்.

இதனையடுத்து அவர் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்றார்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிப சங்க இயக்கத்தில் இணைந்து செயற்பட்ட அவர், இலக்கியத்துறை மற்றும் சமூகச் செயற்பாடுகளிலும் முன்நின்று செயற்பட்டவராவார்.

1967 ஆம் ஆண்டும் எழுத்துத்துறையில் தடம்பதித்த அவர் கவிதை, சிறுகதை, நாவல், பத்தி, விமர்சனக்கட்டுரை ஆகிய துறைகளில் தமது ஆளுமையைச் செலுத்தியுள்ளார்.

அவருடைய பத்தி எழுத்துக்கள் மற்றும் கட்டுரைகள் சில வ.தேவசகாயம், தாவீது கிறிஸ்ரோ ஆகிய பெயர்களிலும் வெளிவந்துள்ளன.

நாவல்கள் குறுநாவல்கள் கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள் ஆகியவற்றை எழுதியிருந்தாலும் அவை இன்னமும் நூல்வடிவம் பெறவில்லை.

அவரின் சிறுகதைகள் மாத்திரமே இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

இவருடைய படைப்புக்கள் தாயகம், மல்லிகை, வாகை, அலை, புதுசு, இதயம், ஒளி,சிந்தாமணி, வீரகேசரி, தொழிலாளி, சுதந்திரன், ஈழமுரசு, ஈழநாடு ஆகிய சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.

வடமாகாண கல்வி அமைச்சு கலை இலக்கியச் செயற்பாடுகளுக்கு அவர் செய்த பங்களிப்பு முக்கியமானது.

மறைந்த நந்தினி சேவியர் பெற்ற கெளரவங்கள்:

  • ஈழநாடு பத்திரிகையின் 10வது ஆண்டு நிறைவையொட்டி அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட நாவல் போட்டியில் ‘மேகங்கள்’ என்ற நாவல் இரண்டாம் பரிசு பெற்றது.
  • பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் 50 வது ஆண்டு நிறைவையொட்டி நடத்திய நாவல் போட்டியில் ‘ஒரு வயதுபோன மனிதரின் வாரிசுகள்’ என்ற குறுநாவல் தங்கப் பதக்கத்தை முதற்பரிசாகப் பெற்றது.
  • 1993 இல் வெளிவந்த சிறந்த சிறுகதைத்தொகுப்புக்கான முதற்பரிசை விபவி சுதந்திர இலக்கிய அமைப்பு ‘அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’ என்ற நூலுக்கு வழங்கியது.
  • உள்ளுராட்சித் திணைக்களம் நடத்திய ‘தமிழின்பக் கண்காட்சி’ யில் ‘அயல்கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’ நூலுக்கு முதற்பரிசு வழங்கியது.
  • இவரது இலக்கியப் பங்களிப்புக்காக 2011 இல் கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது கிடைத்தது.
    2015 கொடகே வாழ்நாள் சாதனையாளர் விருது.
  • வடமாகாண சிறந்த நூல் பரிசு, 2012 – நெல்லிமரப்பள்ளிக்கூடம் (சிறுகதைத் தொகுதி)
  • சாகித்திய மண்டலப் பரிசு, 2012 – நெல்லிமரப் பள்ளிக்கூடம் (சிறுகதைத் தொகுதி)
  • கிழக்குமாகாண சிறந்த நூல் பரிசு (பல்துறை) – நந்தினி சேவியர் படைப்புகள்
  • கலாபூஷணம் விருது – 2013
  • பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் 2014-2015 ஆம் ஆண்டுக்கான “சங்கச் சான்றோர் விருது” வழங்கிக் கெளரவித்தது.
Tags: