சீன சூழலுக்கேற்ப மார்க்சியத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்போம்!

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டு நிறைவு விழாவில் தோழர் ஷி ஜின் பிங் (Xi Jinping) ஆற்றிய உரை (ஜூலை 1, 2021)

தோழர்களே! நண்பர்களே!

இன்று ஜூலை முதல் நாள். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றிலும் சீன தேசத்தின் வரலாற்றிலும் இது மிகச் சிறப்பான, முக்கியமான நாள். கட்சியின் நூறாம் ஆண்டு நிறைவை அனைத்து கட்சி உறுப்பினர்களோடும் நாடு முழுவதும் உள்ள அனைத்து இன மக்களுடனும் இணைந்து கொண்டாட நாம் கூடியிருக்கிறோம். கட்சியின் கடந்த நூறு ஆண்டு போராட்டப் பயணத்தின் சிறப்புகளை பின் நோக்கி பார்க்கிறோம். சீன தேசத்தின் மறுமலர்ச்சிக்கான ஒளிமிக்க வாய்ப்புகளை எதிர்நோக்குகிறோம்.

தொடக்கத்தில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு சார்பாக அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

இந்தச் சிறப்பான தருணத்தில் கட்சியின் சார்பாகவும் மக்கள் சார்பாகவும் ஒரு பிரகடனம் செய்வதில் பெருமை கொள்கிறேன். தேசம் முழுமையும், ஒட்டுமொத்த கட்சியும் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் விளைவாக நமது முதல் நூறாண்டு இலக்கான ‘எல்லா வகைகளிலும் மித அளவிலான வசதிபடைத்த சமூகத்தை கட்டுவது’ (Build a moderately prosperous society) என்பதை நிறைவு செய்துள்ளோம். இதன் பொருள் வரலாற்று சிறப்பு மிக்க வகையில் வறுமை பிரச்சினை சீனாவில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்பதாகும். இப்பொழுது நாம் அனைத்து வகைகளிலும் சிறப்பான, நவீன, சோசலிச நாடாக சீனாவை ஆக்குவது என்ற இரண்டாம் நூறாண்டு இலக்கை நோக்கி நம்பிக்கையுடன் பீடுநடை போடுகிறோம். இது சீன தேசம், சீன மக்கள் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு மகத்தான சாதனையாகும்!

தோழர்களே! நண்பர்களே!

சீன தேசம் ஒரு மகத்தான தேசம். 5000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உள்ள நாடு. மானுட நாகரீக வளர்ச்சிக்கு சீனா அழிக்க இயலாத பங்களிப்புகளை செய்துள்ளது. எனினும், 1840 ஆம் ஆண்டு கஞ்சா யுத்தத்திற்குப் பிறகு சீனா படிப்படியாக அரை-காலனி, அரை நிலப்பிரபுத்துவ சமூகமாக சிறுமைப்பட்டது. முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு பெரும் பாதிப்புகளுக்கு ஆளானது. நாடு கடும் அவமானத்திற்கு உள்ளாகியது. மக்கள் பெரும் துயரத்தை சந்தித்தனர். சீன நாகரீகம் இருளில் மூழ்கியது. அப்பொழுதில் இருந்து தேசீய மறுமலர்ச்சி என்பது சீன தேசத்தின், சீன மக்களின் ஆகப்பெரிய கனவாக இருந்து வந்தது.

தேசத்தை ஆபத்திலிருந்து காப்பாற்ற சீன மக்கள் தைரியத்துடன் போராடினார்கள். உயர்சிந்தனை கொண்ட தேசபக்தர்கள் தேசத்தை ஒன்றுபடுத்த முயற்சித்தனர். ஒன்றன் பின் ஒன்றாக தைபிங் சுவர்க்க அரசு இயக்கம், சீர்திருத்தத்திற்கான 1898 இயக்கம், யிஹெதுவான் இயக்கம், 1911 ஆம் ஆண்டு புரட்சி என்று எழுச்சிகள் நிகழ்ந்தன. நாட்டைக் காப்பதற்கு பல திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. நாட்டை பாதுகாப்பதற்கான இயக்கத்திற்கு புதிய சிந்தனைகளும், புரட்சிகர சக்திகளை திரட்ட புதிய அமைப்பும் அவசர தேவையாக இருந்தன.

1917 இல் ரஷ்ய அக்டோபர் புரட்சி வெடித்தபின் மார்க்சிசம்-லெனினிச தத்துவம் சீனாவை வந்தடைந்தது. பின்னர், 1921இல் சீன மக்களும் தேசமும் பெரும் விழிப்புணர்வு பெற்ற நிலையில், சீன தொழிலாளி வர்க்க இயக்கத்துடன் மார்க்சிசம் லெனினிசம் நெருக்கமாக இணைந்து கொண்டிருந்த நேரத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி பிறந்தது. சீனாவில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்படுவது என்பது ஒரு சகாப்த நிகழ்வாகும். இந்நிகழ்வு நவீன கால சீன வரலாற்றை ஆழமான வகையில் மாற்றியது. உலக வளர்ச்சியின் வரைபடத்தையே மாற்றியது.

துவக்கப்பட்ட நாளில் இருந்து கட்சி சீன மக்களின் மகிழ்ச்சியை, சீன தேசத்தின் மறுமலர்ச்சியை தனது இலக்காகவும் ஆகர்ஷ சக்தியாகவும் கொண்டிருந்தது. கடந்த நூறு ஆண்டுகளில் கட்சி சீன மக்களை ஒன்றுபடுத்தி, தலைமை தாங்கி நடத்தியுள்ள போராட்டங்கள், செய்துள்ள தியாகங்கள், ஆக்கப் பணிகள் அனைத்தும் ஒரு அடிப்படையான கருத்தால் ஒன்றிணைக்கப்பட்டிருந்தன. அதுதான் சீன தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சி என்பதாகும்.

தேசீய மறுமலர்ச்சியை சாதிக்க அசைக்கமுடியாத உறுதியுடன், மக்களை ஒற்றுமைப்படுத்தி, சீன மக்களின் ரத்தம் சிந்திய போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியது. புதிய-ஜனநாயகப் புரட்சியின் மூலம் மகத்தான வெற்றியும் பெற்றது.

வட பகுதி போர் ,விவசாய புரட்சிப் போர், ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்த போர், விடுதலைக்கான போர் ஆகிய பெரும் யுத்தங்கள் வாயிலாக, ஆயுதமேந்திய எதிர்ப்புரட்சி சக்திகளை ஆயுதமேந்திய புரட்சி மூலம் முறியடித்தோம். ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் மற்றும் அதிகாரவர்க்க-முதலாளித்துவம் ஆகிய முப்பெரும் மலைகளை தகர்த்தோம். மக்கள் சீன குடியரசை நிறுவினோம். இதன் மூலம் மக்களே நாட்டின் எஜமானர்களாயினர். இவ்வாறு நமது நாட்டின் விடுதலையை சாதித்தோம். மக்களை விடுவித்தோம்.

ஏகாதிபத்திய வல்லரசுகள் சீனாவில் அனுபவித்த சலுகைகள், நமது நாட்டின் மீது அந்நிய அரசுகள் திணித்த ஏற்றத்தாழ்வான ஒப்பந்தங்கள், பழைய சீனத்தில் நிலவிய ஒற்றுமையற்ற நிலைமை, அரைக் காலனி, அரை நிலப்பிரபுத்துவ நாடு என்ற சீன நாட்டின் நிலைமை – இவை அனைத்திற்கும் புதிய ஜனநாயக புரட்சியின் வெற்றி முற்றுப்புள்ளி வைத்தது. தேசீய மறுமலர்ச்சியை சாதிப்பதற்கான அடிப்படை சமூக நிலைமைகளை ஏற்படுத்தியது.

விடாப்பிடியான போராட்டத்தின் மூலம் கட்சியும் சீன மக்களும் சீன மக்கள் எழுந்துவிட்டார்கள் என்று உலகிற்குக் காட்டினர். இனி என்றுமே பிறரால் சீன தேசத்தை அவமதிப்பதோ, மிரட்டுவதோ சாத்தியமில்லை என்று காட்டினர்.

தேச மறுமலர்ச்சியை அடைய, வலுவான சீனத்தை தற்சார்பு உணர்வுடன் கட்டிட, கட்சி சீன மக்களை ஒன்றுபடுத்தி, அவர்களுக்குத் தலைமை தாங்கியது. சோசலிச புரட்சி மற்றும் நிர்மாணத்தில் பெரும் வெற்றி பெற்றது.

சோசலிச புரட்சியை நிகழ்த்தியதன் மூலம் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சீனாவில் நிலைத்திருந்த, சுரண்டலும் அடக்குமுறையும் நிலவிய நிலப்பிரபுத்துவ அமைப்பை அழித்தொழித்தோம். சோசலிசத்தை நமது அடிப்படை அமைப்பாக ஆக்கினோம். சோசலிச கட்டுமான செயலாக்கத்தில் ஏகாதிபத்திய, மேலாதிக்க சக்திகளின் அழிப்பு முயற்சிகள், சதிச் செயல்கள், ஆயுதம் தாங்கிய தாக்குதல்கள் உட்பட அனைத்தையும் முறியடித்து சீன தேசத்தின் வரலாற்றில் மிகவும் விரிவானதும் ஆழமானதுமான சமூக மாற்றங்களை ஏற்படுத்தினோம். உலகின் கிழக்கு பகுதியில் அதிக மக்கள் தொகை கொண்ட, ஏழ்மையான, பின்தங்கிய நாடாக இருந்த சீனாவை சோசலிச நாடாக மாற்றியது. தேசீய மறுமலர்ச்சியை அடைவதற்கு அவசியமான அடிப்படை அரசியல் தளத்தையும் நிறுவன அஸ்திவாரங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

விடாப்பிடியான போராட்டங்கள் மூலம் கட்சியும் சீன மக்களும் அவர்கள் பழைய உலகை தகர்ப்பவர்கள் என்பது மட்டுமின்றி, புதிய உலகை நிர்மாணிப்பவர்கள் என்பதையும், சோசலிசம் மட்டுமே சீனத்தை காப்பாற்றும் என்பதையும், அதுதான் சீன வளர்ச்சியை சாத்தியமாக்கும் என்பதையும் உலகிற்கு காட்டினர்.

தேசீய மறுமலர்ச்சியை அடைய, கட்சி சீன மக்களை ஒற்றுமைப்படுத்தி, தலைமை தாங்கி, சிந்தனைகளை மனச்சிறைகளில் இருந்து விடுவித்தது. இதனால் வேகமாக முன்னேறியது. சீர்திருத்தங்கள், சீன தேசத்தின் கதவுகளை விரிவாக திறப்பதில், சோசலிச நவீன மயமாக்கலில் வெற்றி பெற்றது.

சோசலிசத்தின் துவக்க கட்டத்திற்கான கட்சியின் நிலைப்பாட்டை நாம் உருவாக்கினோம். சீர்திருத்தம் மற்றும் பொருளாதாரத்தை திறந்து விடுதல் என்பதை உறுதியுடன் செய்தோம். நாலா பக்கங்களிலும் இருந்து வந்த அபாயங்களையும் சவால்களையும் முறியடித்தோம். சீன குணாம்சங்களைக்கொண்ட சோசலிசத்தை நிறுவி, அதை உயர்த்திப் பிடித்து, பாதுகாத்து, வளர்த்தோம். இதன் மூலம், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின்பான காலத்தில் கட்சி வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் கொண்ட பெரியதொரு திருப்பத்தை சாதித்தோம். அதிக அளவில் மையப்படுத்தப்பட்ட, திட்டமிடுதல் கொண்ட, பொருளாதாரம் என்ற தன்மையில் இருந்து உயிர்ப்பு மிக்க சோசலிச சந்தை பொருளாதாரம் என்ற தன்மைக்கு சீனப் பொருளாதாரம் மாறியது. மேலும் பெரும்பாலும் தனித்தே இருந்த நாடு என்ற நிலையில் இருந்து, வெளி உலகம் முழுமைக்கும் திறந்துவிடப்பட்ட நாடாக சீனா மாறியது. இத்திருப்பம் ஒப்பீட்டளவில் பின்தங்கிய உற்பத்தி சக்திகளைக் கொண்ட நாடு என்ற நிலையில் இருந்து, உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் என்ற இடத்திற்கு சீனாவால் தாவ முடிந்தது. மேலும் சீனா தனது மக்களின் வாழ்க்கை தரத்தை குறைந்த மட்டத்தில் இருந்து ஒட்டுமொத்த அளவில் ஓரளவு வசதியான வாழ்க்கை என்ற நிலைக்கும், அதன்பின் அனைத்து அம்சங்களிலும் ஓரளவு வசதியான வாழ்க்கை என்ற நிலைக்கும் உயர்த்தியுள்ளது. வேகமான வளர்ச்சிக்கான பொருளாதார அடித்தளத்தையும் ஆற்றல் தரும் நிறுவன உத்தரவாதங்களையும் உருவாக்கி, தேசீய மறுமலர்ச்சியை நோக்கி செல்லும் வாய்ப்புகளையும் இச்சாதனைகள் ஏற்படுத்தியுள்ளன.

விடாப்பிடியான போராட்டங்கள் மூலம் கட்சியும் சீன மக்களும் சீர்திருத்தங்கள் மூலமும் சீனாவின் கதவுகளை விரிவாக திறந்ததன் மூலமும் (இவை இன்றைய சீனத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளன) சமகாலத்திற்கு சீனா மிக வேகமாக முன்னேறியுள்ளது என்று காட்டியுள்ளனர்.

தேசீய மறுமலர்ச்சி என்ற இலக்கை அடைய கட்சி சீன மக்களை ஒற்றுமைப்படுத்தி, தலைமை தாங்கி,மாபெரும் போராட்டத்தை, மாபெரும் திட்டத்தை, மாபெரும் கனவை தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளது. இதனை தன்னம்பிக்கை, தற்சார்பு,புதுமை காணல் ஆகியவற்றின் மூலம் செய்துள்ளது. புதிய சகாப்தத்தில் சீன குணாம்சங்களுடனான சோசலிசத்தை அடைவதில் பெரும் வெற்றி கண்டுள்ளது.

கட்சியின் பதினெட்டாவது தேசீய மாநாட்டை தொடர்ந்து, சீன குணாம்சங்களுடனான சோசலிசம் ஒரு புதிய சகாப்தத்திற்குள் நுழைந்துள்ளது. இந்த கட்டத்தில் நாம் கட்சியின் ஒட்டு மொத்த தலைமையை வலுப்படுத்தியுள்ளோம்.ஐந்து கள ஒன்றிணைக்கப்பட்ட திட்டம் மற்றும் நான்கு முனை முழுமையான உத்தி ஆகியவை ஒருங்கிணைந்து அமலாக்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளோம். சீன குணாம்சங்களுடனான சோசலிச அமைப்பை மேம்படுத்தியுள்ளோம். சீனாவின் ஆட்சி சார் அமைப்புகளை நவீனப்படுத்தி அவற்றின் ஆளும் திறனை மேம்படுத்தியுள்ளோம். கட்சி விதிகளின் அடிப்படையில் கட்சி ஆளப்படுவதை உறுதி செய்துள்ளோம். சரியான உட்கட்சி நெறிமுறைகளை உருவாக்கியுள்ளோம். பல அபாயங்களையும் சவால்களையும் வென்று, முதல் நூறு ஆண்டுகளின் இலக்கை நிறைவு செய்து, இரண்டாம் நூறு ஆண்டுகளின் இலக்கை அடைவதற்கான உத்திகளை முன்வைத்துள்ளோம். கட்சி மற்றும் நாட்டிற்கான நமது சாதனைகளும் மாற்றங்களும் தேசீய மறுமலர்ச்சியை அடைய வலுவான நிறுவன அமைப்புகளை நமக்கு அளித்துள்ளன. வலுமிக்க அடித்தளத்தை தந்துள்ளன. கூடுதலாக முன்முயற்சிகளை எடுக்க நமக்கு உந்து சக்தியாகவும் அவை அமைந்துள்ளன.

விடாப்பிடியான போராட்டத்தின்மூலம் கட்சியும் சீன மக்களும் சீனா நிமிர்ந்து நின்று மகத்தான மாற்றங்களை சாதித்துள்ளது, வசதிபடைத்த நாடாக மட்டுமின்றி வலுவான நாடாகவும் மாறியுள்ளது, சீனாவின் தேசீய மறுமலர்ச்சி வரலாற்றின் தவிர்க்க இயலாத பகுதியாகிவிட்டது என்பதையும் உலகுக்கு காட்டியுள்ளனர்.

மாவோ கூறினார்: “தியாகிகளின் தியாகங்கள் நமது மனங்களை மேலும் வலுப்படுத்துகின்றன. நாம் உருவாக்கும் புதிய வானத்தில் சூரியனையும் சந்திரனையும் ஒளி வீசச் செய்ய முனையும் தைரியம் நம்மிடம் உள்ளது.” இந்த அச்சமற்ற உணர்வைத்தான் பல ஆயிரம் ஆண்டுகள் கொண்ட சீன தேச வரலாற்றின் மிக அற்புதமான அத்தியாயத்தை கடந்த நூறு ஆண்டுகளில் சாதிக்கும் பணியில் கட்சி சீன மக்களை ஒற்றுமைப்படுத்தி தலைமை தாங்கி வெற்றி பெற்றுள்ளது. சீன தேசத்தின், மனித குலத்தின் வளர்ச்சி வரலாற்றில் நாம் பதித்துள்ள புதிய பாதை, நாம் மேற்கொண்டுள்ள இலக்கு, கடந்த நூறு ஆண்டுகளில் நாம் படைத்துள்ள சாதனைகள் நிச்சயம் இடம் பெறும்.

தோழர்களே, நண்பர்களே,

நூறு ஆண்டுகளுக்கு முன் சீனாவின் கம்யூனிஸ்ட் முன்னோடிகள் சீன கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவினர். அதன் மாபெரும் துவக்க உணர்வை வளர்த்தெடுத்தனர். அதன் அடிப்படை கோட்பாடுகள் வருமாறு: லட்சியங்களையும் உண்மையையும் உயர்த்திப்பிடித்தல்; நமது துவக்க வேட்கைக்கும் இலக்கிற்கும் உண்மையாக இருத்தல்; இழப்பு பற்றி கவலையின்றி தைரியமாக போராடுதல்; கட்சிக்கும் மக்களுக்கும் விசுவாசமாக இருத்தல். இந்த உணர்வு கட்சியின் வலிமைக்கான ஊற்றுக்கண்.

கடந்த நூறு ஆண்டுகளில் கட்சி இந்த துவக்க உணர்வை முன்னெடுத்து சென்றுள்ளது. அதன் நெடிய போராட்டங்கள் மூலம் சீன கம்யூனிஸ்டுகளுக்கு உத்வேகம் அளிக்கும் பல கோட்பாடுகளை உருவாக்கியுள்ளது. தனித்தன்மை வாய்ந்த அரசியல் குணத்தை ஏற்படுத்தியுள்ளது. வரலாறு முன்னேறுகையில் கட்சியின் உணர்வு தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது. கட்சியின் மகத்தான துவக்க உணர்வு எப்பொழுதும் உயிர்ப்புடன் இருக்கும் வகையில், முன்னெடுத்து செல்லப்படும் வகையில் நமது மகத்தான புரட்சிகர பாரம்பர்யத்தை உயர்த்தி பிடிப்போம்.

தோழர்களே! நண்பர்களே!

நமது கடந்த நூறு ஆண்டு சாதனைகள் அனைத்தும் சீன கம்யூனிஸ்டுகளின், சீன மக்களின், சீன தேசத்தின் தீவிர முயற்சிகளால் நிகழ்ந்துள்ளன. இதன் பிரதான பிரதிநிதிகள் தோழர்கள் மாவோ, டெங், ஜியாங் ஜெமின் மற்றும் ஹூ ஜின் டாவ் ஆவர். சீன தேசத்தின் மறுமலர்ச்சிக்கு அவர்கள் மாபெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பங்களிப்பை செய்துள்ளனர். அவர்களுக்கு நமது மிக உயர்ந்த மரியாதையை செலுத்துகிறோம்.

இத்தருணத்தில் சீன புரட்சிக்கும், நிர்மாணத்திற்கும் சீர்திருத்தத்திற்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சியை துவக்கி, வலுப்படுத்தி வளர்த்ததற்கும் தோழர்கள் மாவோ, ஜூ என் லாய், லியு ஷா சி, சு டே, டெங் சியாவ் பிங், சென் யுன் மற்றும் இதர முதுபெரும் புரட்சியாளர்களை நெகிழ்வுடன் நினைவு கூறுவோம். மக்கள் குடியரசை நிறுவி, பாதுகாத்து வளர்க்கும் பணிகளில் மனஉறுதியுடன் தங்கள் உயிரையும் ஈந்த புரட்சியாளர்களை இத்தருணத்தில் நெகிழ்வுடன் நினைவு கூறுவோம். சீர்திருத்தம், சீனாவின் கதவுகளை விரிவாக திறந்துவிடல், சோசலிச நவீனமாக்கல் ஆகிய பணிகளுக்கு தங்கள் வாழ்வை அர்ப்பணித்த தோழர்களுக்கு இத்தருணத்தில் நெகிழ்வுடன் நினைவு கூறுவோம். நவீன காலங்களில் தேசங்களின் சுதந்திரத்திற்கும் மக்கள் விடுதலைக்கும் உறுதிபடப்போராடிய அனைத்து பெண்களையும் ஆண்களையும் நெகிழ்வுடன் நினைவு கூறுவோம். நமது தாய் நாட்டிற்கும் தேசத்திற்குமான அவர்களின் சிறப்பான பங்களிப்பு வரலாற்றில் நிரந்தர இடம் பெறும். சீன மக்களின் இதயங்களில் அவர்களது உன்னதமான உணர்வுகள் என்றும் இருக்கும்.

மக்கள் தான் உண்மையான கதாநாயகர்கள். ஏனெனில் அவர்கள் தான் வரலாற்றை படைக்கின்றனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு சார்பாக நாடுமுழுவதும் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள், அறிவுஜீவிகள் அனைவருக்கும் உயர்ந்த மரியாதையை செலுத்துகிறேன். இதர அரசியல் கட்சிகள், கட்சி சார்பற்ற பொது வாழ்வு பிரமுகர்கள், மக்கள் அமைப்புகள், சமூகத்தின் அனைத்து துறைகளை சார்ந்த தேச பக்தர்கள்; மக்கள் விடுதலைப்படை, மக்களின் ஆயுத போலீஸ் படை, தீயணைப்பு மற்றும் மீட்சி சேவைத்துறை ஆகிய அனைத்து அமைப்புகளின் உறுப்பினர்களுக்கும்; அனைத்து சோசலிச உழைக்கும் மக்களுக்கும்; ஐக்கிய முன்னணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள். ஹாங்காங், மக்காவ் சிறப்பு நிர்வாக பகுதி சீன மக்களுக்கும் தைவான் மற்றும் உலகின் இதர பகுதிகளில் வாழும் சீன மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். சீன மக்களுடன் நட்பும் புரிதலும் கொண்ட, புரட்சி, வளர்ச்சி மற்றும் சீர்திருத்தத்தில் சீனா எடுத்துவரும் முயற்சிகளை ஆதரிக்கும் உலகெங்கும் உள்ள மக்களுக்கும் நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.

தோழர்களே! நண்பர்களே!

நமது கட்சியின் துவக்க இலக்கை வரையறை செய்வது எளிது என்றாலும், அந்த இலக்கிற்கு நாம் விசுவாசமாக இருப்பதை உறுதி செய்வது அதைவிட கடினமான பணி. வரலாற்றைக் கற்பதன் மூலம் வல்லரசுகள் எழுவதும் வீழ்வதும் ஏன் என்று புரிந்துகொள்ளலாம். வரலாறு எனும் கண்ணாடி மூலம் நாம் தற்பொழுது எங்கு உள்ளோம் என்பதை அறியலாம். எதிர்காலம் பற்றிய வெளிச்சம் பெறலாம். கட்சியின் கடந்த நூறு ஆண்டு வரலாற்றை உற்றுநோக்கி கடந்த காலத்தில் நம்மால் எவ்வாறு வெற்றிபெற முடிந்தது என்று அறியலாம். எதிர்காலத்தில் தொடர்ந்து வெற்றி பெறுவது எப்படி என்றும் அறியலாம். இவ்வாறு செய்வதன் மூலம் கூடுதல் உறுதியுடன் நமது துவக்க இலக்கிற்கு உண்மையாக இருந்து மேலும் சிறந்த எதிர்காலத்தை நோக்கி நம் முன்னே உள்ள புதிய பயணத்தினை தொடரலாம்.

ஓய்வின்றி ஒரு மேம்பட்ட வாழ்க்கையை சாத்தியமாக்கிட நாம் சீன மக்களை ஒற்றுமைப்படுத்தி அவர்களுக்கு தலைமை தாங்க வேண்டும்.

இந்த நாடு என்பது இந்த நாட்டின் மக்களே. மக்கள் தான் நாடு. நாட்டின் மீதான நமது தலைமை பாத்திரத்தை நிலைநாட்டி உறுதிப்படுத்த நாம் போராடி வந்துள்ளோம். அதன் பகுதியாக மக்களின் ஆதரவை வென்றெடுத்து தக்க வைக்கவும் நாம் போராடி வருகிறோம். கட்சியின் வேர்கள் மக்கள் தான். அவர்கள் தான் கட்சியின் உயிர்நாடி, கட்சியின் வலிமைக்கான ஆதார வளம். எல்லாக் காலங்களிலும் கட்சி அனைத்து சீன மக்களின் அடிப்படை நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தியே வந்துள்ளது. எப்பொழுதும் கட்சி மக்களுடன் நிற்கிறது. தனக்கென்று கட்சிக்கு பிரத்யேக நலன் எதுவும் இல்லை. எந்த தனி நபர் நலனையோ, அதிகார குழுக்களின் நலனையோ, உயர் நிலை குழுக்களையோ கட்சி ஒருபோதும் பிரதிநிதித்துவப்படுத்தியதில்லை. சீன மக்களிடமிருந்து கட்சியை பிரிக்கவோ, மக்களை கட்சிக்கு எதிராக திருப்பவோ செய்யப்படும் முயற்சிகள் கட்டாயம் தோல்வியுறும். இத்தகைய நிலை ஏற்பட 9 கோடியே ஐம்பது லட்சம் கட்சி உறுப்பினர்களோ 140 கோடிக்கும் அதிகமான சீன மக்களோ இடம் அளிக்க மாட்டார்கள்.

நம் முன் உள்ள பயணத்தில் மக்களை நெருக்கமாக சார்ந்து நின்று வரலாறு படைக்க வேண்டும். மக்களுக்கு சேவை செய்வது என்ற கட்சியின் அடிப்படை நோக்கத்தை உயர்த்தி பிடிப்போம். மக்களுடன் உறுதியாக நிற்போம். கட்சியின் வெகு மக்கள் நிலைபாட்டை (mass line) அமலாக்குவோம். மக்களின் ஆக்க திறனை மதிப்போம். மக்களை மையப்படுத்தும் வளர்ச்சி என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவோம். முழுமையான மக்கள் ஜனநாயகத்தை அமலாக்குவோம். சமூக நீதி மற்றும் நியாயத்தை பாதுகாப்போம். வளர்ச்சியில் உள்ள சமநிலையை பாதிக்கும் அம்சங்களை, குறைபாடுகளை களைவோம். மக்களுக்கு மிகுந்த கவலை தரும் அவசர நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்போம். இதன்மூலம் முழுமையான மானுட வளர்ச்சி மற்றும் அனைவருக்கும் பொது வளம்ஆகிய இலக்குகளை அடைவதில் கூடுதலான, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண்போம்..

சீன சூழலுக்கேற்ப மார்க்சியத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்போம்

நமது கட்சியும் நாடும், மார்க்சியத்தை வழிகாட்டும் அடிப்படைத் தத்துவமாகக் கொண்டு கட்டப்பட்டவை; அது நமது கட்சியின், நாம் தூக்கிப்பிடிக்கும் பதாகையின் ஆன்மாவாகும். சீன கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும், நிரூபிக்கப்பட்ட உண்மைகளிலிருந்து நிதர்சனத்தைத் தேடிக் கண்டடையும் கொள்கையையும் உயர்த்திப் பிடித்து இயங்குகிறது.

சீன நிலைமையின் யதார்த்தத்தில் இன்றைய போக்குகளைக் கூர்ந்து நோக்கி, வரலாற்றில் ஒரு முக்கிய முன்முயற்சி எடுத்து அதனைக் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளோம். அதன்மூலம், தொடர்ந்து மார்க்சியத்தை இன்றைய காலகட்டத்தில் சீனாவின் தேவைகளுக்கேற்பப் பொருத்தி, சமூகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் சீன மக்களுக்கு வழிகாட்டியாக இருக்க நம்மால் முடிந்துள்ளது. அடிப்படையில், சீன சூழலுக்கு பொருத்துவதற்கான சோசலிசத்தின் வலிமையும், அதை செயல்படுத்துவதற்கான கட்சியின் திறமையும், மார்க்சியம் நடைமுறைப்படுத்தப்படக்கூடியது என்ற உண்மையினால் சாத்தியமாகியுள்ளன.

தொடரும் நமது பயணத்தில் மார்க்சிய-லெனினிய தத்துவம், மாவோவின் சிந்தனைகள், டெங் ஜியோபிங்கின் கோட்பாடுகள், சீன கம்யூனிஸ்ட் கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட மேம்பட்ட உற்பத்தித்திறன், மேம்பட்ட கலாச்சாரம் மற்றும் மக்களின் அடிப்படை நலன்கள் ஆகியவற்றிற்கான ‘மூன்று கொள்கைகள்’, வளர்ச்சிக்கான அறிவியல் அணுகுமுறை ஆகியவற்றைத் தொடர்ந்து உயர்த்திப் பிடிக்க வேண்டும். புதிய சகாப்தத்திற்கான சீனப் பண்புகளுக்கு ஏற்ப சோசலிசம் பற்றிய சிந்தனையை நடைமுறைப்படுத்த வேண்டும். சீனாவின் திட்டவட்டமான நிலைமைகள் மற்றும் அதன் பாரம்பர்ய பண்பாட்டின் சிறப்பு அம்சங்களுக்கு ஏற்ப, மார்க்சிய தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நாம் தொடர்ந்து கையாளவேண்டும். சமகாலப் போக்குகளை கவனித்து, புரிந்துகொண்டு, காலத்திற்கேற்ப வழிநடத்தவும் மார்க்சியத்தைப் பயன்படுத்தி, சமகால சீனாவிற்கும் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிற்குமான மார்க்சியத்தை மேலும் வளர்த்தெடுப்போம்.

பல சமகாலப் பண்புகளுடனான பெரிய போராட்டத்தை நடத்திட வேண்டும்.

போராடும் மனவுறுதியும், வெற்றிக்கான துணிவும், நம் கட்சியை வெல்லற்கரியதாக ஆக்கியுள்ளது. நம் உயரிய கனவை நனவாக்க, கடின உழைப்பும், விடாமுயற்சியும் தேவை. தேசிய மறுமலர்ச்சி என்ற நமது இலக்கை சாத்தியமாக்கிட, இன்று நாம் முன்னெப்போதையும் விட ஒற்றுமையுடனும், திறமையுடனும், நம்பிக்கையுடனும் உள்ளோம். ஆனால், அதை அடைய மேலும் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது.

நம் முன்னேற்றப் பாதையில், அமைதியான காலங்களில் கூட, மறைந்திருக்கக் கூடிய ஆபத்தினையும் எதிர்நோக்கும் கூரிய விழிப்புணர்வு தேவை. தேசப் பாதுகாப்புக்கு, அமைதி மற்றும் பாதுகாப்புக்கான வழிமுறைகளை சமநிலைப்படுத்தும் ஒரு முழுமையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். நூறாண்டுக்கு ஒரு முறை நிகழும் மாற்றங்கள் தற்போது உலகில் ஏற்பட்டுவரும் சூழலில், நம் தேசத்தின் மறுமலர்ச்சிக்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இம்மாற்றத்தினால் எழும் புதிய அம்சங்கள் மற்றும் தேவைகள், சீன சமுதாயத்தில் ஏற்படும் முக்கியமான முரண்பாடுகள், சிக்கலான உலகச் சூழலிலிருந்து எழும் புதிய பிரச்சனைகள் மற்றும் சவால்கள் ஆகியவற்றைப் பற்றிய முழுமையான புரிதல் தேவை. நம் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல, புதிய பாதைகளை உருவாக்குவதிலும், சவால்களையும், இடர்பாடுகளையும் தாண்டிச் செல்லத் தேவையான பாலங்களை அமைப்பதிலும் நாம் தைரியமாகவும் திறமையாகவும் செயல்பட வேண்டும்.

சீன மக்களின் மகத்தான ஒற்றுமையை பலப்படுத்த வேண்டும்

கடந்த ஒரு நூற்றாண்டு கால போராட்ட வரலாற்றில், ஐக்கிய முன்னணியை முன்னிலைப்படுத்தி வந்துள்ளோம். எல்லாக் காலங்களிலும் ஒற்றுமைப்படுத்தக்கூடிய அனைத்து சக்திகளையும் ஒற்றுமைப்படுத்தியுள்ளோம். திரட்டவாய்ப்புள்ள அனைத்து சாதகமான காரணிகளையும் திரட்டியுள்ளோம். மிகவும் விரிவான ஐக்கிய முன்னணியை உருவாக்கியுள்ளோம். கூட்டு முயற்சிக்கான அனைத்து வலுவையும் இணைத்துள்ளோம். தேச மறுமலர்ச்சி எனும் நோக்கத்திற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் ஒவ்வொரு சீனரையும் அணிதிரட்ட இந்த தேச பக்த ஐக்கிய முன்னணி ஒரு முக்கியமான கருவியாக உள்ளது.

நாம் பயணிக்கும் இந்தப் பாதையில், நம்மிடையே உள்ள பொதுவான தன்மைகள் மற்றும் பன்முகத் தன்மைகளுக்கிடையே சமநிலையைப் பேணிக் காத்து, ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும். நம் கோட்பாடு மற்றும் அரசியல் வழிகாட்டுதலை வலுப்படுத்தி, பரந்த அளவில் ஒத்த கருத்தை உருவாக்கி, அறிவுத்திறன் மிகுந்தவர்களை ஒன்றிணைத்து, ஒருமித்த செயல்பாட்டுக்கான களத்தை விரிவுபடுத்தி, அனைவரின் நலன்களும் ஒன்றிணைவதை நோக்கி பயணிக்க வேண்டும். இதன் மூலமே நாம் அனைத்து சீன மக்களின் திறமைகளையும் ஆற்றலையும் ஒரே இலக்கை நோக்கி செலுத்த இயலும். தேச மறுமலர்ச்சி என்ற இலக்கை அடைவதற்கு மாபெரும் சக்தியாக இணைய முடியும்.

கட்சி கட்டும் புதிய பெரிய திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்

சீன கம்யூனிஸ்ட் கட்சியை மற்ற அரசியல் கட்சிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் தனிச்சிறப்பு என்னவெனில், தன்னை தானே சுய சீர்திருத்தம் செய்துகொள்ளும் அதன் துணிவே ஆகும். பல சோதனைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளான போதிலும் கட்சி துடிப்புடன் செயலாற்றக் காரணம் இந்த கடுமையான சுய பரிசோதனையும், திறமையான சுய நிர்வாக ஒழுங்குமே ஆகும். வரலாற்றில் பல்வேறு ஆழமான மாற்றங்களையும் அபாயங்களையும் சந்தித்தபோதும், உலகளாவிய ஆழமான மாற்றங்கள் நிகழும் பொழுதும், நாட்டிலும் பன்னாட்டு களத்திலும் பல சவால்களை எதிர்கொண்டு தேசத்தின் முதுகெலும்பாக எப்போதும் முன்னணியில் நிற்க முடிந்தது.

நம் முன்னேற்றப் பாதையில் ‘நல்ல எஃகு செய்ய நல்ல கொல்லன் தேவை’ என்ற பழமொழியை நினைவில் கொள்ள வேண்டும். சுய பரிசோதனையும், திறமையான சுய நிர்வாக ஒழுங்கும் முடிவற்றுத் தொடர வேண்டும் என்ற அரசியல் விழிப்புணர்வு நமக்குத் தேவை. கட்சியை அரசியல் ரீதியாக பலப்படுத்துவதை நம் முக்கியக் கொள்கையாக செயல்படுத்த வேண்டும். கட்சியின் அமைப்பு முறையை மேலும் கறார்த்தன்மை கொண்டதாக ஆக்க வேண்டும். நேர்மையான, திறமை வாய்ந்த கட்சி அலுவலர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். கட்சியின் கட்டுப்பாட்டு ஒழுக்க நெறிகளை மேம்படுத்தவும், நாணயத்துடன் செயலாற்றவும், ஊழலுக்கு எதிராகப் போராடவும், கட்சியின் தரத்தைக் குலைக்கும் எந்தத் தீங்கினையும் களையவும் உறுதியுடன் செயல்பட வேண்டும். புதிய யுகத்தில், சீனப் பண்புகளுடனான சோசலிசத்தை நிலை நாட்ட, கட்சி தனது உயர் பண்பையும், தன்மையையும் சாராம்சத்தையும் பாதுகாத்து நாட்டின் அரசியல் மையத்தில், முக்கிய தலைமை இடத்தில் இருந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

தோழர்களே, நண்பர்களே,

சிறப்பு நிர்வாகப் பகுதிகளான ஹாங்காங் மற்றும் மக்காவ் ஆகியவற்றைப் பொறுத்தவரை, ஒரு நாடு- இரு நிர்வாக அமைப்புகள் என்ற கொள்கையின் உள்ளடக்கத்திற்கு உண்மையாக செயல்படுவோம். அம்மக்கள் பெருமளவு தன்னாட்சி அதிகாரம் பெற்று தங்களது பகுதிகளைத் தாங்களே நிர்வகிப்பர். தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சட்டம் மற்றும் அமலாக்க அமைப்புகள் மத்திய அரசின் ஒட்டுமொத்த அதிகார வரம்பிற்குள் இருக்கும். சீனாவின் இறையாண்மை, பாதுகாப்பு, மேம்பாட்டு நலன்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், இவ்விரண்டு சிறப்புப் பகுதிகளிலும் நீடித்த வளர்ச்சியையும் சமூக நிலைத்தன்மையையும் உறுதி செய்வோம்.

தைவான் பிரச்சனையைத் தீர்த்து ஒருங்கிணந்த சீனாவை மீட்டுருவாக்கம் செய்வது என்ற வரலாற்றுப் பணியில் சீன கம்யூனிஸ்ட் கட்சி அசைக்க முடியாத உறுதிப்பாட்டுடன் உள்ளது. இது ஒவ்வொரு சீனக் குடிமக்களின் கனவாகவும் உள்ளது. ஒரே சீனம் என்ற 1992இல் எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவை உயர்த்திப் பிடித்து அமைதியான வழியில் தேசிய ஒருங்கிணைப்பை முன்னெடுப்போம். தைவான் ஜலசந்தியின் இருபுறமும் வாழும் தோழர்களாகிய நாம் இவ்விஷயத்தில் இணைந்து ஒற்றுமையாக முன்னேற வேண்டும். “சுதந்திரத் தைவான்” முயற்சியை உறுதியாகத் தோற்கடித்து, ஒரே சீனத்திற்கான பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான சீனமக்களின் மனஉறுதியையும் திறனையும் யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

தோழர்களே! நண்பர்களே!

எதிர்காலம் இளைஞர்களின் கைளில் உள்ளது. நாம் அவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். நூறாண்டுகளுக்கு முன் சீனா இருளில் மூழ்கியிருந்த ஆண்டுகளில் முன்னேற்ற சிந்தனையுடைய இளைஞர்கள் குழு ஒன்று மார்க்சியம் எனும் ஒளிவிளக்கை உயர்த்திப் பிடித்து, அந்த ஒளியில் சீன தேசத்தின் மறுமலர்ச்சிக்கான வழியைத் தேடியது. அன்றிலிருந்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பதாகையின் கீழ், தலைமுறை தலைமுறையாக இளைஞர்கள் கட்சிக்காகவும் மக்களுக்காகவும் தங்கள் இளமை பருவத்தை அர்ப்பணித்து வருகின்றனர். நாட்டின் மறுமலர்ச்சிக்கான இயக்கத்தில் முன்னணியில் இருந்து வருகிறார்கள்.

இப்புதிய யுகத்தில் நம் இளைஞர்கள், அவர்கள் சீன மக்கள் என்பதில் மேலும் பெருமையும் நம்பிக்கையும் கொண்டு நாட்டின் மறுமலர்ச்சிக்கு பங்களிப்பதை தமது குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும். அப்பொழுதுதான், இளைஞர்கள் மீதான நம் காலத்தின், கட்சியின், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும்.

தோழர்களே, நண்பர்களே,

நூறாண்டுகளுக்கு முன், சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டபோது, வெறும் 50 பேர்களுக்கு சிறிது அதிக அளவிலேயே உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. இன்று 140 கோடிக்கு மேற்பட்ட மக்கள் வாழும் சீனத்தில், 9.5 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டு உலகின் மிகப்பெரிய ஆளும் கட்சியாகவும் சர்வதேச அளவில் மிகுந்த செல்வாக்குடையதாகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சி விளங்குகிறது.

ஒரு நூற்றாண்டுக்கு முன், சீனா உலகின் கண்களில் வீழ்ச்சியடைந்து உதிர்ந்து கொண்டிருந்த ஒரு நாடாக இருந்தது. இன்று, அது தடுக்கமுடியாத வேகத்தில் மறுமலர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நாடாக காட்சியளிக்கிறது. கடந்த நூற்றாண்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சி, நம் மக்களின் சார்பாக பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. இன்று அது அடுத்த நூற்றாண்டுக்கான இலக்கை அடையும் புதிய பயணத்தில், மக்களை அணிதிரட்டி தலைமையேற்று வழிநடத்துகிறது.

கட்சி உறுப்பினர்களே,

நம் கட்சியின் ஸ்தாபன இலக்கிற்கு உண்மையாக இருந்து, உங்கள் லட்சியங்கள் மற்றும் நம்பிக்கைகளில் உறுதியாக நிற்கவும் உங்கள் ஒவ்வொருவரையும் மத்தியக் கமிட்டி கேட்டுக் கொள்கிறது. இன்பத்திலும் துன்பத்திலும் மக்களை விட்டு விலகாது, அவர்கள் மீதான பரிவுடன், தொடர்ந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அவர்களுடன் இணைந்து நின்று அயராது பணிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு கட்சியின் நோக்கத்திற்காக செயல்படுவதன் மூலம் நீங்கள் கட்சிக்கும் மக்களுக்கும் மேலும் பெருமை சேர்க்க முடியும்.

தோழர்களே, நண்பர்களே,

சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டு நூறாண்டுகளான நிலையில், இன்றும் கட்சி அதே துடிப்புடன் செயல்படுகிறது. சீன தேசத்திற்கு நீடித்த பெருமை சேர்க்க, அதே உறுதியுடன் திகழ்கிறது. நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து, முன்னால் நாம் செல்லவேண்டிய பயணத்தைக் கண்ணுறும் போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான தலைமையின் கீழ், அனைத்து இனக்குழு மக்களின் ஒற்றுமை காத்து, நாம் மேலும் பல உயரங்களைத் தொடுவது உறுதி. நாம் அனைத்து வகையிலும் உன்னதமான நவீன சோசலிச தேசத்தைக் கட்டியெழுப்பி, சீன மக்களின் பெரும் கனவான தேச மறுமலர்ச்சி என்ற இலக்கை அடைவோம்.

வாழ்க நமது உயர்ந்த, போற்றத்தக்க, சரியான கட்சி!

வாழ்க நமது உயர்ந்த, போற்றத்தக்க, வீரமிக்க மக்கள்!

உரையின் ஆங்கில வடிவம்: Speech by Xi Jinping at a ceremony marking the centenary of the CPC
தமிழில்: பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

Tags: