உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 2

-அப்துல்

அமெரிக்காவின் உலக மேலாதிக்க வளர்ச்சியும் அது எதிர்கொள்ளும் சவால்களும்

1. கச்சா எண்ணெய்

1970-கள் முதல் உலக கச்சா எண்ணெய் வளங்கள் மீதான ஆதிக்கமும், டொலரை அச்சாகக் கொண்ட உலகளாவிய நிதித்துறை கட்டமைப்பும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்துக்கான அச்சாணிகளாக உள்ளன. நேரடி அரசியல், இராணுவ ஆதிக்கத்தின் மூலமான காலனிகள் இல்லாமலேயே உலகெங்கும் உள்ள நாடுகளில் உழைப்பாளர்களின் உழைப்பைச் சுரண்டி உபரி-மதிப்பைக் கைப்பற்றுவதற்கான அடிப்படையாக இவை உள்ளன.

கச்சா எண்ணெய் நவீன முதலாளித்துவப் பொருளாதாரத்தின் ஒரு இன்றியமையாத அடிப்படை வளமாக உள்ளது. வாகனங்களில் எரிசக்தியாக பயன்படும் பெட்ரோல், டீசல், விமானங்களுக்கான எரிபொருள், பிளாஸ்டிக் பொருட்கள், செயற்கை உரங்கள், இன்னும் பிற செயற்கை வேதிப் பொருட்கள் என நவீன வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் கச்சா எண்ணெய் ஆதிக்கம் செலுத்துகிறது.

கச்சா எண்ணெய் வழங்கலையும் அதன் மூலம் உலகச் சந்தையில் அதன் விலையையும் கட்டுப்படுத்துவதன் மூலம், உலகநாடுகள் மீதான தனது சுரண்டல் உறவை அமெரிக்கா தொடர்ந்து உறுதிப்படுத்தி வந்தது.

சவுதி அரேபியா, குவைத், கத்தார் போன்ற கச்சா எண்ணெய் வளம் கொண்ட வளைகுடா நாடுகளை ஆதரித்து நெருக்கமான உறவை பராமரித்தது, அமெரிக்கா. வளைகுடா பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள அடுத்தடுத்த போர்களை நடத்தி வந்தது.

  • 1980-களில், ஈரானுக்கு எதிராக போர் நடத்த ஈராக்குக்கு உதவியது.
  • 1990-களில் ஈராக்குக்கு எதிராக முதல் ஈராக் போரை நடத்தியது.
  • 2000-களில் இரண்டாம் ஈராக் போரை நடத்தி ஈராக் அதிபர் சதாம் உசைனை வீழ்த்தியது.
  • 2011-ம் ஆண்டில் லிபியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தி லிபிய அதிபர் முகமது கடாஃபியை படுகொலை செய்தது.
  • 2011-க்குப் பிறகு சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் அரசுக்கு எதிராக போர் தொடுத்தது.
சர்வதேச கச்சா எண்ணெய் அரசியல்

இவ்வாறு, உலக கச்சா எண்ணெய் வளங்கள் மீதான தனது பிடியை உறுதிப்படுத்திக் கொண்டு வந்தது, அமெரிக்கா. அதன் மூலம் தனது உலக மேலாதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டிக் கொண்டது.

அதே நேரம், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை பெருமளவு கொண்டுள்ள நாடுகளான ஈரான், வெனிசுலா, ரசியா போன்றவற்றில் அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்க்கும் அரசுகளைக் கவிழ்த்து அமெரிக்க ஆதரவு அரசுகளை உருவாக்க முயற்சிக்கிறது, அமெரிக்கா. உக்ரைனில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வரும் அரசியல் குழப்பங்களை இதனோடு பொருத்திப் புரிந்து கொள்ளலாம்.

ஆட்சி மாற்றம் சாத்தியமில்லாமல் போகும் போது அந்த நாடுகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது, அமெரிக்கா. அந்தப் பொருளாதாரத் தடையை அமல்படுத்துவதற்கு ஒரு வலுவான ஆதாரமாக சர்வதேச பணவியல் கட்டமைப்பில் அமெரிக்கா கொண்டுள்ள ஆதிக்கம் உள்ளது.

2. டொலரை அச்சாகக் கொண்ட சர்வதேச பணவியல் கட்டமைப்பு

அமெரிக்க உலக மேலாதிக்கத்தின் அடிப்படையாக, கச்சா எண்ணெய் வளத்தை கட்டுப்படுத்துவதற்கு இணையாக அமெரிக்க டொலரை அச்சாகக் கொண்ட சர்வதேச பணவியல் கட்டமைப்பு உள்ளது. அமெரிக்கா கச்சா எண்ணெய் வளங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை உறுதி செய்வதாகவும் டொலரை மையமாகக் கொண்ட சர்வதேச பணவியல் கட்டமைப்பு உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கச்சா எண்ணெயை விற்பதையும் வாங்குவதையும் டொலர் மூலமாக செய்வதன் மூலம் இந்த டொலரை அச்சாகக் கொண்ட சர்வதேச பணவியல் கட்டமைப்பு மேலும் வலுப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள நாடுகள், கச்சா எண்ணெய் வர்த்தகத்தை மட்டுமின்றி, தமது பெரும்பாலான சர்வதேச வர்த்தகத்தையும், கொடுக்கல் வாங்கல்களையும் அமெரிக்க நாணயமான டொலரில் நடத்துகின்றன. தமது சர்வதேச சேமிப்புகளை அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. அதாவது, அமெரிக்க டொலரில் சேமித்து வைக்கின்றன.

டொலர் என்ற சர்வதேச நாணயத்தை ஒழுங்குபடுத்தி வெளியிடும் நாடு என்ற வகையில் அமெரிக்கா, நாணயமடிக்கும் அரசுக்கான ஆதாயத்தைப் பெற்றுள்ளது. அதாவது, உற்பத்தி எதையும் செய்யாமலேயே டொலர்களை உருவாக்கி பிற நாடுகளின் சரக்குகளை அமெரிக்கா வாங்கிக் கொள்ள முடியும், பிற நாடுகளில் முதலீடு செய்வதற்கான நிதியை உருவாக்கிக் கொள்ள முடியும்.

டொலர் மேலாதிக்கம்

ஆனால், இந்த நாணயமடிக்கும் வலிமை வரம்புக்குட்பட்டது, அதை வரம்பு மீறி பயன்படுத்தினால் டொலர் மீதான நம்பகத்தன்மை குறைந்து விடும். நீண்ட கால நோக்கில் அதன் சர்வதேச நாணயம் என்ற தகுதி பாதிக்கப்படும். ஆனால், குறுகிய கால நோக்கில் இந்த நாணயமடிக்கும் வலிமையை அமெரிக்க தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும், அவ்வாறு பயன்படுத்தவும் செய்கிறது.

அது மட்டுமில்லை. சர்வதேச பணப் பரிவர்த்தனைகளை நடத்தும் உலகளாவிய நிதித்துறைக் கட்டமைப்பு அமெரிக்காவின் நியூயார்க்கையும், பிரிட்டனின் லண்டனையும் மையமாகக் கொண்டுள்ளது. இந்தக் கட்டமைப்பில் இணைவதன் மூலம்தான் பிற நாடுகளின் வங்கிகளும் சர்வதேச நிதி பரிவர்த்தனைகளை நிகழ்த்த முடியும். உதாரணமாக, சர்வதேச அளவில் வங்கிகளுக்கு இடையே பரிவர்த்தனைகளை நடத்துவதற்கான “ஸ்விஃப்ட்” (SWIFT)என்ற வசதி இந்தக் கட்டமைப்புக்கு உள்ளே மட்டுமே செயல்படுகிறது.

எல்லா நாடுகளும் இந்தக் கட்டமைப்புக்குள் இருப்பதால், ஒவ்வொரு நாடும் இதற்குள் இணைய வேண்டியுள்ளது. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் (Facebook) எல்லோரும் இணைந்திருப்பதால், ஒவ்வொருவரும் அதில் இணைந்துதான் தமது நண்பர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதற்கு நிகரானது இது.

எனவே, அமெரிக்காவின் கொள்கைகளை எதிர்க்கும் நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம். உதாரணமாக, ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இப்போது ஈரான் நிதித்துறை வங்கிக் கட்டமைப்பில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அமெரிக்காவுடன் மட்டுமின்றி உலகின் வேறு எந்த நாட்டுடனும் வர்த்தகம் செய்வது ஈரானுக்கு சாத்தியமின்றி போகிறது. ஏனென்றால், அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உள்ள வங்கிகள் ஈரானுடனான பரிவர்த்தனைகளை கையாளுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.

வேறு எந்த நாடாவது, உதாரணமாக இந்தியா, அமெரிக்கத் தடையை மீறி ஈரானுடன் வர்த்தகம் செய்தால் இந்தியாவும் அமெரிக்கத் தடையை எதிர்கொள்ளும். எனவே, எல்லா நாடுகளும் அமெரிக்காவின் கட்டளைகளை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. அதாவது, நாட்டாமையின் தீர்ப்பினால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் நிலைமைக்கு அமெரிக்காவிற்கு அடிபணியாத நாடுகள் தள்ளப்படுகின்றன. அல்லது, ஃபேஸ்புக் நிர்வாகத்தால் ஃபேஸ்புக் (Facebook) கணக்கு முடக்கப்பட்ட ஒருவரின் நிலைமைதான் அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ஒரு நாட்டின் நிலை.

உற்பத்தி உலகமயமாதல்

3. அமெரிக்க மேலாதிக்கமும் சர்வதேச உழைப்புச் சுரண்டலும்

உலக மேலாதிக்கத்துக்கான இத்தகைய கட்டமைப்பின் மூலம், உலகெங்கிலும் உள்ள இயற்கை வளங்களை அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகளின் ஏகபோக நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. நுகர்வுச் சந்தைகளிலும் மூலப்பொருள் சந்தைகளிலும் ஏகபோகத்தை நிலைநாட்டியுள்ளன.

இந்த ஏகபோக நிறுவனங்கள் உலக அளவில் தமது ஏகபோக ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கு அமெரிக்காவின் இராணுவ, நிதித்துறை ஆதிக்கம் அடித்தளமாக உள்ளது. ஏகபோக நிறுவனங்கள் சர்வதேச ரீதியில் தடையின்றி வர்த்தகம் செய்வதையும், நாடுகளின் சந்தைகளில் தடையின்றி செயல்படுவதையும் உலக வர்த்தகக் கழகம் (WTO) மூலம் போடப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் உறுதி செய்கின்றன. ஐ.எம்.எஃப் (IMF), உலக வங்கி மூலம் ஏகாதிபத்திய மூலதனம் நாடுகளின் எல்லை தாண்டி பாய்வதற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு, அமெரிக்காவையும் பிற ஏகாதிபத்திய நாடுகளையும் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் மூலப் பொருட்கள் மீதான கட்டுப்பாடு, சந்தைகளில் ஏகபோகம், தொழில்நுட்பங்கள் மீது அறிவுசார் சொத்துரிமை போன்ற நடவடிக்கைகள் மூலம் உலகப் பொருளாதாரத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான ஏகாதிபத்தியக் கட்டமைப்பு உருவாக்கி பராமரிக்கப்படுகிறது.

எனவே, ஒரு நாட்டில் உழைப்பையும் இயற்கை வளங்களையும் சுரண்டுவதற்கு அந்த நாட்டை இராணுவ ரீதியாக கைப்பற்ற வேண்டும். அரசியல் ரீதியாக காலனியாக்க வேண்டும் என்ற தேவை இல்லாமல் போகிறது. மேலே சொன்ன சர்வதேச வர்த்தகக் கட்டமைப்பு, நிதித்துறை கட்டமைப்பு, அமெரிக்காவின் உலகளாவிய இராணுவ ஆதிக்கம் இவற்றின் பின்னணியில் ஏகாதிபத்திய நாடுகளின் ஏகபோக நிறுவனங்கள் உலகின் எந்தப் பகுதியிலும் உழைப்பைச் சுரண்டவும், அவ்வாறு சுரண்டிய உபரி-மதிப்பைக் கைப்பற்றி இலாபம் ஈட்டவும் முடிகிறது. அவ்வாறு குவிக்கும் இலாபத்தை மூலதனமாகத் திரட்டவும் முடிகிறது.

இந்நிலையில், அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களும், ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களும் பொருள் உற்பத்தித் துறையிலிருந்து வெளியேற ஆரம்பித்தன. தாம் விற்கும் பொருட்களை சீனா போன்ற பிற நாடுகளின் நிறுவனங்களில் செய்து வாங்கும் முறையை பின்பற்றின. இந்த நாடுகளின் குறை-கூலி தொழிலாளர்களை கொடூரமாக சுரண்டி இந்தப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன. அவ்வாறு செய்து வாங்கிய பொருட்களை அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் ஏகபோக விலைகளில் விற்று ஏகபோக நிறுவனங்கள் கொள்ளை இலாபம் ஈட்டின.

இவ்வாறு, 1970-களிலும் 1980-களிலும் அமெரிக்காவிலிருந்து உற்பத்தித் துறை ஆலைகள் பெருமளவில் வெளியேறின.

முதலில் மெக்சிகோ, தென் அமெரிக்க நாடுகள், ஜப்பான், தென் கொரியா, தாய்வான் போன்ற நாடுகளுக்கு ஆலை உற்பத்தி இடம் மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 1980-களிலும் 1990-களிலும் இன்னும் பெரிய அளவில் சீனா, வியட்நாம், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கும் அமெரிக்காவின் ஆலை உற்பத்தி மாற்றப்பட்டது. இந்த நாடுகளில், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் குறைந்த கூலி கொடுத்து கொடூரமாக சுரண்டப்படுகின்றனர்.

இந்தத் தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் ஆயத்த ஆடைகள், மின்னணு பொருட்கள், முதலான சரக்குகள் ஏகாதிபத்திய நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்களால் விற்கப்படுகின்றன. அதன் மூலம், மூன்றாம் உலக நாடுகளின் உழைப்பைச் சுரண்டி அவை கொள்ளை இலாபம் ஈட்டுகின்றன. தமது மூலதனத்தை மேலும் மேலும் பெருக்கிக் கொள்கின்றன.

சர்வதேச வர்த்தகமும் சேவைத்துறையின் வளர்ச்சியும்

4. அமெரிக்காவின் நிதித்துறை சூதாட்டமும் சீனாவின் பொருளாதார எழுச்சியும்

இந்த சர்வதேச உழைப்புச் சுரண்டலுக்கும் மூலதனத் திரட்டலுக்கும் அமெரிக்காவின் சர்வதேச நிதித்துறை மேலாதிக்கமும், இராணுவ மேலாதிக்கமும் அடிப்படையாக உள்ளது. ஆனால், அமெரிக்காவில் இருந்து உற்பத்தித் ஆலைகளை பன்னாட்டு நிறுவனங்கள் வெளியே கொண்டு சென்றதன் விளைவாக, அமெரிக்க பொருளாதாரத்தின் உற்பத்தி அடித்தளம் பலவீனமானது. அமெரிக்கத் தொழிலாளர்களின் உண்மைக் கூலி தேக்கம் அடைந்தது. அதே நேரம் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யும் பொருட்களின் மலிவான விலை உண்மைக் கூலியின் வீழ்ச்சியின் விளைவுகளை பகுதியளவு ஈடுகட்டியது.

உண்மைக் கூலி தேங்கிய நிலையில் கடன் மூலம் பொருட்களை வாங்கும் கடன் பொருளாதாரம் அமெரிக்க வங்கிகளால் ஊக்குவிக்கப்பட்டது. இந்தக் கடன் பொருளாதாரத்துக்கு அடித்தளமாக வெளிநாடுகளில் இருந்து வந்து அமெரிக்க வங்கிகளில் குவியும் டொலர் சேமிப்புகள் இருந்தன. வீட்டுக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன், கடன் அட்டைக் கடன் என அமெரிக்கக் குடும்பங்கள் மீது பெரும் கடன் சுமை ஏற்றப்பட்டது. அந்தக் கடன் சுமை மூலம் அமெரிக்காவின் நுகர்வுச் சந்தை ஊதிப் பெருக்கப்பட்டது.

இவ்வாறு, அமெரிக்க பொருளாதாரம் வெளிநாடுகளில் இருந்து வரும் இலாபத்தை மறுசுழற்சி செய்யும் மையமாக மாறியது. இந்த இலாப மறுசுழற்சியை அடிப்படையாகக் கொண்ட நிதித்துறையும், நிதித்துறை நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் துறைகளும், ரியல் எஸ்டேட் ஊக வணிகமும், பிற சேவைத் துறைகளும் வளர்ச்சியடைந்தன. அமெரிக்க வேலை வாய்ப்புகளில் பெருமளவு நிதித்துறை, ரியல் எஸ்டேட் போன்ற சேவைத் துறைகளுக்கு மாறின. தொழில்துறை வேலை வாய்ப்புகள் குறைந்தன.

இந்த சேவைத்துறை வேலைகளிலும், தகவல் தொழில்நுட்ப சேவைகளில் கணிசமான பகுதி வெளிநிறுவனப் பணி முறையில் இந்தியா போன்ற நாடுகளில் செய்து வாங்கப்படுகிறது. இதுவும் அமெரிக்க தொழிலாளர்களின் உண்மைக் கூலிகள் குறைந்து செல்வதை துரிதப்படுத்தியது.

அமெரிக்கா உலகெங்கிலும் மேலாதிக்க போர்களிலும், நிதித்துறை ஊக வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்த அதே நேரத்தில், சீனா ஆலை உற்பத்தித் துறையில் பெரும் வளர்ச்சி பெற்று அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் பெருமளவு பொருள் ஏற்றுமதி செய்தது. பொருளாதார ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் தன்னை வலுப்படுத்திக் கொண்டது.

சீனாவின் உற்பத்தி அடித்தளமும் பொருளாதார பலமும் வளர்ச்சியடைந்தன. சீனாவின் டொலர் கையிருப்புகளும் அமெரிக்கக் அரசுக் கடன் பத்திர கையிருப்புகளும் அதிகரித்தன. இவை அனைத்தும் இரண்டு தலைமுறை சீனத் தொழிலாளர்களின் கடும் உழைப்பின் மூலமும், அவர்கள் மீதான கடும் சுரண்டல் மூலமும் சாத்தியமாயின.

உலகளாவிய உற்பத்தி மூலம் மூலதனத் திரட்டல், உலகளாவிய நிதித் துறையில் ஊக வணிகம், உலகளாவிய இராணுவ ஆதிக்கம் என்ற அமெரிக்க மேலாதிக்கக் கட்டுமானத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகள் மேலும் மேலும் தீவிரமடைந்தன.

அமெரிக்க நிதித்துறை சூதாட்டம் 2007-08 ஆண்டுகளில் சரிவடைந்தது. அமெரிக்க வங்கிகளின் கடன் பொருளாதார அடிப்படை தகர்ந்தது. கோடிக்கணக்கான அமெரிக்கக் குடும்பங்கள் தமது சேமிப்புகளை இழந்தன. அமெரிக்க அரசும் அமெரிக்க ஒன்றிய ரிசர்வ் வங்கியும், உலக அளவிலான தமது நிதித்துறை ஆதிக்கத்தைப் பயன்படுத்தி அமெரிக்க வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் மீட்டன.

அமெரிக்க பொருளாதார நெருக்கடி

ஆனால், அமெரிக்காவில் உள்நாட்டு பொருளாதார நெருக்கடி தீரவில்லை. அமெரிக்க தொழிலாளர்கள் மீது பொருளாதார அழுத்தம் அதிகரித்தது. வேலை வாய்ப்புகள் குறைந்தன. கடன் பொருளாதாரமும், ரியல் எஸ்டேட் ஊக வணிகமும் பலவீனமடைந்தது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்தன.

அதே நேரத்தில் சீனா உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு பெருமளவு முதலீடு செய்தது. தனது பொருளாதார வலிமையை பயன்படுத்தி கச்சா எண்ணெய் தேவைகளை உறுதி செய்து கொண்டது.

கடல்வழி போக்குவரத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் விதமாகவும், நில வழியாக மாற்றுப் பாதையை உருவாக்கும் வகையிலும் “பெல்ட் ரோட் முன்னெடுப்பு” (belt road initiative) என்ற திட்டத்தை அமல்படுத்தியது. பெல்ட் ரோட் முன்னெடுப்பு” திட்டத்தின் கீழ் ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும், பல்வேறு நாடுகளில் துறைமுகங்கள், சாலைகள், ரயில் பாதைகள் அமைப்பதற்கு முதலீடு செய்தது.

மேலும், சூரிய மின்தகடு உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, 5ஜி தொலை தொடர்பு, அதிவேக ரயில் போன்ற உயர் தொழில்நுட்ப துறைகளிலும் அமெரிக்காவுடன் உலகச் சந்தையில் போட்டியிட ஆரம்பித்தது.

இவ்வாறாக, உலக உற்பத்திப் பொருளாதாரத்தின் குவிமையம் சீனாவுக்கு நகர்ந்து விட்டிருந்தது.

மேலும், எரிசக்தித் துறையில் ரசியா சுயேச்சையான சக்தியாக வளர்ந்தது. ரசியா உலகத்திலேயே அதிக இயற்கை எரிவாயு வளத்தைப் பெற்றுள்ளது. கச்சா எண்ணெய் வளத்தில் உலக நாடுகளில் 8-வது இடத்தில் உள்ளது.

ரசியா இயற்கை எரிவாயுவை எடுத்து, குழாய் மூலமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் உக்ரைன் முதலான முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கும் வழங்குகிறது. ஐரோப்பாவுக்கு இயற்கை எரிவாயுவை வழங்கும் குழாய் உக்ரைன் வழியாக செல்கிறது. இதற்காக உக்ரைன் நிலப்பரப்பை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை உக்ரைன் அரசு பெறுகிறது.

2011-ம் ஆண்டு வாக்கில், பால்டிக் கடலுக்கு அடியில் ஜெர்மனிக்கு இயற்கை எரிவாயுவை அனுப்பும் நார்ட் ஸ்ட்ரீம் 1 (Nord Stream1) குழாயை ரசியா தொடங்கி வைத்தது. நார்ட் ஸ்ட்ரீம் 2 (Nord Stream2) கடல்வழி இயற்கை எரிவாயு பாதை 2018-ல் தொடங்கி 2021-ல் முடிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஜெர்மனி முதலான ஐரோப்பிய நாடுகள் தமது எரிசக்தி தேவைகளுக்கு ரசியாவை சார்ந்திருக்கின்றன. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள வளைகுடா நாடுகள் மீதான சார்பை குறைத்துக் கொண்டுள்ளன.

5. “அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்குவதா”, “உலகை இன்னும் சிறப்பாக கட்டியமைப்பதா”

இவ்வாறாக, அமெரிக்காவின் நிதித்துறை ஆதிக்கத்தையும், எரிசக்தித்துறை கட்டுப்பாட்டையும் அடிப்படையாகக் கொண்ட பொருளாதார மேலாதிக்கம் பலவீனமடைய ஆரம்பித்தது. வெளிநாடுகளில் குறை-கூலி உழைப்பைச் சுரண்டி மூலதனத்தைத் திரட்டும் பாதையில் தடைகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினரின் மத்தியில் காப்புவாதப் போக்கு தோன்றியது.

அவர்களின் பிரதிநிதியாக “அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்குவோம்” (Make America Great Again) என்ற முழக்கத்துடன் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் 2016-ல் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். நிதித்துறை, எரிசக்தித் துறை, சர்வதேச மூலதனம், இராணுவ மேலாதிக்கம் ஆகியவற்றின் மூலம் ஆதிக்கம் செலுத்தும் ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளின்டன் போட்டியிட்டார். தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றியடைந்தார்.

டொனால்ட் டிரம்ப் அதிபர் ஆன பிறகு அமெரிக்காவின் தொழில்துறை அடித்தளத்தை மீட்கப் போவதாக அறிவித்தார்.

“சீனா அமெரிக்க வேலைகளை திருடி விட்டது. உற்பத்தித் துறை வேலைகள் அமெரிக்காவுக்குத் திரும்ப வேண்டும். சீனாவின் மீது வர்த்தகத் தடைகளை விதிக்க வேண்டும்.” என்று சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது இறக்குமதி வரிகளை விதித்து டொனால்ட் டிரம்ப் அரசு.

“சீனா அமெரிக்க தொழில்நுட்பங்களை திருடுகிறது” என்று சீனாவுக்கு அமெரிக்க தொழில்நுட்ப ஏற்றுமதிகளை தடை செய்தது. ஹுவாவெய் (Huawei) போன்ற சீன நிறுவனங்களின் கருவிகளை பயன்படுத்துவதை தடை செய்தது.

100 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி வலுவடைந்த அமெரிக்க மேலாதிக்கத்தின் அடிப்படை அதன் தொழில்துறை அடித்தளத்திலும் தொழில்நுட்ப வல்லமையிலும் உள்ளது. எனவே, அமெரிக்காவின் பொருளாதார அடித்தளத்தை வலுவாக்கி சீனாவை எதிர்கொள்வது என்ற பாதை டொனால்ட் டிரம்ப் பிரதிநிதித்துவப்படுத்தும் போக்கு.

அதே நேரம், “அமெரிக்கா நேட்டோ படைகளுக்கு நிதி ஒதுக்குவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்கா வெளிநாடுகளில் போர்களில் ஈடுபடக் கூடாது, ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் செலவில் ஓசியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. நேட்டோ படைகளுக்கான செலவுகளை பிற நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று அமெரிக்காவின் சர்வதேச இராணுவக் கட்டமைப்பை பலவீனப்படுத்தினார், டொனால்ட் டிரம்ப்.

பசிபிக் பெருங்கடல் நாடுகளின் கூட்டு (Trans-Pacific Partnership – TPP) போன்ற சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றினார். புவிவெப்பமயமாதலை குறைப்பதற்கான ஐ.நா உடன்பாடு அமெரிக்காவுக்கு எதிரானது என்று குற்றம் சாட்டி அதன் பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்காவை வெளியேற்றினார்.

இவ்வாறு, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தொடங்கி, 1970-களில் வலுவடைந்து, 1990-களுக்குப் பிறகு முற்றாதிக்கம் செலுத்தி, 2008-க்குப் பிறகு பலவீனமடைந்து வந்த அமெரிக்காவின் சர்வதேச ஏகாதிபத்திய கட்டமைப்பை மேலும் பலவீனமடையச் செய்யும் நடவடிக்கைகளை எடுத்தார்.

அதற்கு மாற்றாக, அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி அடித்தளத்தை வலுவாக்கி, சீனாவுடன் போட்டி போடுவதாக கொள்கைகளை வகுத்தார். அவரது கொள்கைகளுக்கு அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியிலும் ஆதரவு இருந்தது.

எனவே, டொனால்ட் டிரம்பின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை சீனாவை மையமாகக் கொண்டு செயல்பட்டது. ரசியாவின் மீதான அழுத்தம் குறைந்தது. ஐரோப்பாவில் ரசியா தனது நிலைமையை வலுப்படுத்திக் கொள்ள முடிந்தது.

ஆனால், அமெரிக்க உலக மேலாதிக்கத்தின் முகவர்களான நிதித்துறை முதலாளிகளும் எரிசக்தித் துறை ஏகபோக நிறுவனங்களும் தமது மேலாதிக்கத்தைத் தக்க வைக்க முயற்சித்தனர். பலவீனமாகிச் செல்லும் எரிசக்தி மேலாதிக்க அரசியல், டொலரை சர்வதேச நாணயமாகக் கொண்ட நிதித்துறை மேலாதிக்கம் இரண்டையும் மீட்டெடுப்பது என்ற பாதையை அவர்கள் பின்பற்றி வந்தனர். அதே பாதையை தொடர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

எரிசக்தித் துறையில் அமெரிக்காவின் முற்றாதிக்கத்துக்கு விடப்பட்ட சவாலை முறியடித்து மீண்டும் பழைய மாதிரியை தொடர்வது இந்தப் பிரிவினரின் தேவையாக இருந்தது. அதன் ஒரு வெளிப்பாடுதான் 2014-ல் உக்ரைனில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பும் ஜோ பைடன் அதில் ஆற்றிய பங்கும்.

இதன் மூலம், இயற்கை எரிவாயு துறையில் ரசியாவின் வலிமையைக் குறைத்து அமெரிக்க ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்தது அமெரிக்கா.

ஜோ பைடன் பிரநிதித்துவப்படுத்தும் அமெரிக்க ஆளும் வர்க்கப் பிரிவினர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற தேர்தலில் ரசிய தலையீடு இருந்தது என்று குற்றம் சாட்டினர். டொனால்ட் டிரம்ப் ரசிய கைக்கூலி என்று பிரச்சாரம் செய்தனர்.

இந்த அடிப்படையில் ஜோ பைடன் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளிகளின் தரப்பு, “உலகை இன்னும் சிறப்பாக கட்டியமைப்போம்” (Build Back Better World) என்ற முழக்கத்தின் கீழ் அமெரிக்க பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் சர்வதேச ரீதியில் அமெரிக்காவின் கூட்டணிகளை வலுப்படுத்தும் முயற்சியிலும் தொடங்கியுள்ளது.

டொனால்ட் டிரம்ப் பிரதிநிதித்துவப்படுத்தும் காப்புவாத பாதைக்கும், ஜோ பைடன் பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவ, எரிசக்தி வள மேலாதிக்கம், நிதித்துறை மேலாதிக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பாதைக்கும் இடையேயான மோதல் அமெரிக்க அரசியல் பொருளாதாரத்தின் மையமாக உள்ளது.

2021-ம் ஆண்டில் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது இரண்டாவது போக்கை வலுப்படுத்தியுள்ளது, சீனாவுடனான வர்த்தகப் பகைமையை தொடரும் அதே நேரத்தில், உக்ரைனில் போர் நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது.

தொடரும்…

பகுதி 1 – பகடைக்காயாகிய உக்ரைன்.

Tags: