சோசலிச இலட்சியத்துக்காக அர்ப்பணித்துக் கொண்ட பகத்சிங்!

ஹர் கிஷன் சிங் சுர்ஜித் (Harkishan Singh Surjeet)

மாவீரன் பகத்சிங்கின் சோசலிசக் கனவுகளை நெஞ்சில் ஏந்தி விடுதலைத் தியாக தழும்புகளைப் பெற்ற – பாஞ்சாலத்துச் சிங்கம் என்று போற்றப்பட்ட – இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், 1995 நவம்பர் 14  அன்று எழுதிய கட்டுரை இது.

நவஜவான் பாரத் சபாவில் சேர்ந்த போது எனக்கு வயது 14. நாட்டில் போராட்டங்கள் உக்கிரமாக நடை பெற்றுக் கொண்டிருந்த சமயம் அது. நாட்டுக்குப் பூரண சுதந்திரம் மற்றும் அதனை அடைவதற்கு ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றை மேற்கொள்வது தொடர்பாக, லாகூர் காங்கிரஸ் அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு அடுத்த ஆண்டு பகத்சிங் புரிந்த தியாகம், எனக்குத் தனிப்பட்ட முறையில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. பகத்சிங்கின் உச்சபட்ச தியாகத்தால் உத்வேகமடைந்து, நான் கல்வி கற்பதை விட்டு விட்டு, சுதந்திரப் போராட்டத்தில் முழுமையாகக் குதித்துவிட்டேன்.  பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் தூக்குமேடையில் வெளிப்படுத்திய வீராவேசம் மட்டுமல்ல, அவர்கள் புதிதாகப் பின் பற்றத் தொடங்கிய விஞ்ஞான சோசலிசக் கருத்துக்களும் இதற்குக் காரணமாகும். விஞ்ஞான சோசலிசச் சிந்தனைகள் அந்த சமயத்தில் அனைவரையும் வேகமாக ஈர்த்து  வந்தன. ஒக்டோபர் புரட்சி மற்றும் அதன் சிந்தனைகள் 1922இல் லாகூரிலிருந்து வெளி வந்த “இன்குலாப்”, 1923இல் ஜலந்தரிலிருந்து வெளிவந்த “தேஷ் சேவக்”, 1926இல் அமிர்த சரசில் இருந்து வெளிவந்த “கிர்த்தி” (தொழிலாளி) போன்ற வெளியீடுகளில் அவை தெளிவுபடுத்தப்பட்டன. இந்த இதழ்களில் வெளிப் படுத்தப்பட்ட கருத்துக்கள், பகத்சிங் மீது அழிக்கமுடியாத அளவிற்கு ஈர்ப்பை ஏற்படுத்தின.’

பகத்சிங், டெல்லி நாடாளுமன்றத்தில் வெடிகுண்டை வீசியபோது, “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்ட தன் மூலமாக, அம்முழக்கத்தை மிகக்குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் கொண்டு சென்று விட்டார். “நான் எந்தத் தனிப்பட்ட நபரையும் குறி வைத்து இந்த வெடிகுண்டை வீசவில்லை. மாறாக, 1919 மாண்ட்போர்டு சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த நாடாளுமன்றத்திற்கு எதிராகவே இதனைப் பயன்படுத்துகிறேன்” என்று மிகத் தெளிவாகப் பிரகடனம் செய்தார். 

குரல்வளையை  நெரிக்கும் சின்னம் 

ஒரு ஜனநாயகமுறையில் செயல்படும் நாடாளுமன்றம் என்று பகட்டான முறையில் பிரிட்டிஷார் சொல்லிக் கொண்டிருந்தாலும், உண்மையில் அது “சுரண்டப்படுபவர்களின் குரல்வளையை நெரிக்கும் அடையாளச் சின்னம்” என்று பகத்சிங்கும் படுகேஸ்வர் தத்தும் தங்களுடைய அறிக்கையில் கூறினார்கள். தொழிற்சங்க இயக்கத்தின் தலைவர்கள் ஒட்டுமொத்தமாகக் கைது செய்யப்பட்டதற்கு (மீரட் சதி வழக்கு தொடர்பாக கம்யூனிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்டதற்கு) எதிராகவும், தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைச் சட்டவிரோதமாக்கிடும் ‘தொழில் தகராறு சட்டமுன்வடிவிற்கு’ எதிராகவும் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த நடவடிக்கையில் இறங்கினோம் என்று தங்கள் அறிக்கையில் அவர்கள் மேலும் பிரகடனம் செய்தார்கள். 

இந்த இளம் புரட்சியாளர்களின் மனதில் ஏற்பட்ட மாற்றம் இவர்களது அறிக்கையிலிருந்து மிகத் தெளிவாக உலகுக்குத் தெரிய வந்தது. “ஒரு புரட்சிகர மாற்றம் அத்தியாவசியம். சோசலிசத்தின் அடிப்படையில் சமூக அமைப்பை மாற்ற விரும்பும் அனைவரும் இதனைத் தங்கள் கடமையாகக் கொள்ள வேண்டும்…. புரட்சி என்பதன் பொருள், தொழிலாளர் வர்க்கத்தின் இறையாண்மை அங்கீகரிக்கப்படுவதன் அடிப்படையில் ஓர் உன்னதமான சமூக அமைப்பு இறுதியாக நிறுவப்படுவதேயாகும்,” என்று அந்த  அறிக்கையில் அவர்கள் மேலும் தெளிவுபடுத்தி இருந்தார்கள். 

நாட்டுப்பற்றுக் குடும்பம்

பகத்சிங், நாட்டுப்பற்றும் தேச விடுதலைப் போராட்ட வீரர்களும் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர். அவர் மாமா அஜீத்சிங், 1900-களின்  துவக்கத்தில் காலனிமயச் சட்டத்திற்கு (Colonisation Act) எதிராகப் போராடிய முன்னோடி. இதன் காரணமாக நாடு சுதந்திரம் அடையும் வரையில் அவர் நாடு கடத்தப்பட்டிருந்தார். அப்போதும் அவர், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடுவதைத் தொடர்ந்து நடத்தி  வந்தார். பகத்சிங்கின் தந்தையும், தேச விடுதலைக்கான போராட்டத்தில் தன்னையும் முழுமையாக இணைத்துக் கொண்டவர் தான். இத்தகைய பாரம்பரியம்தான் இயற்கையாகவே பகத்சிங்கிடமும் வீரத்தை விளைவித்திருந்தது. மாணவப் பருவத்திலேயே அவர் புரட்சியாளர்களின் செல்வாக்கிற்கு ஆட்பட்டார். அக்டோபர் புரட்சி அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக வங்காளம், பஞ்சாப், பம்பாய், உத்தரப்பிர தேசம், சென்னை மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் பல கம்யூனிஸ்ட் குழுக்கள் அமைக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருந்தன. 

நான் முன்பே குறிப்பிட்டிருப்பதுபோல, சோசலிசக் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு பரப்பிடும் வகையில் ஏராளமான இதழ்கள் வெளிவரத் தொடங்கி இருந்தன. பகத்சிங், ‘‘கிர்த்தி’’ (தொழிலாளி) இதழுடன் தன்னைப் பிணைத்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். இந்த இதழ் கதார் கட்சி சார்பாக அமிர்தசரசில் இருந்து வெளியாகிக் கொண்டிருந்தது. அவர்கள் கம்யூனிஸ்ட் அகிலத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். 

பத்திரிகைத் தொடர்பு

பகத்சிங், இம்மாத இதழின் பஞ்சாபி மற்றும் உருது மொழிகளின் ஆசிரியர்களான சோஹன் சிங் ஜோஷ் மற்றும் ஃபெரோசி தீன் மன்சூர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். இதன் வாயிலாக மார்க்சிசம்-லெனினிசத்தை மேலும் ஆழமாகக் கற்றிட பகத்சிங்கிற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் காரணமாக, இந்தியப் புரட்சியின் பாதை மார்க்சிச – லெனினிச வழியிலேயே அமைந்திட வேண்டும் என்றும் பகத்சிங் முடிவுக்கு வந்தார். 

சித்தாந்தத் தெளிவு

இன்றுள்ள தோழர்களுக்குக் கிடைத்திருக்கக்கூடிய அளவிற்கு, அபரிமிதமான அளவில் கம்யூனிச நூல்கள் கிடைக்காத அந்தக் காலத்தில், பகத்சிங்கும் அவரது தோழர்களும் இப்போதுள்ள கம்யூனிஸ்ட்டுகள் அளவிற்கு மார்க்சிச- லெனினிச அறிவியல் மற்றும் சித்தாந்தம் குறித்து ஞானம் பெற்றிருப்பார்கள் என்று ஒருவர் எதிர்பார்க்க  முடியாது, எதிர்பார்க்கவும் கூடாது. ஆயினும் அவர்களுக்குக் கிடைத்த குறைந்த அளவிலான நூல்களைக் கற்றே அவர்கள், தாங்கள் செல்ல வேண்டிய பாதையை மிகத் தெளிவாக, அஞ்சா நெஞ்சுடனும் அளப்பரிய அர்ப்பணிப்பு உணர்வுடனும் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள். இதுதான் மற்ற புரட்சியாளர்களிலிருந்து பகத்சிங் மற்றும் அவரது தோழர்களைத் தனியே நிறுத்தி வைக்கிறது. இது தான், அவர்கள் வீரமரணத்திற்குப் பின்னரும் அவர்களைப் புகழடைய வைத்திருக்கிறது. அதனால்தான் நாம் அவர்களது நினைவுகளை இன்றும் போற்றிப் பாராட்டுகிறோம். 

அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்ட சமயத்தில், நாடு முழுவதும் மிகப் பிரம்மாண்டமான வகையில் வெடித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அவர்களுக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை வெளிப்படுத்தின. மக்கள் மத்தியில் வெளிப்பட்ட இத்தகைய ஆவேச உணர்ச்சி அலை காரணமாகத்தான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் உடல்களைத் திருட்டுத்தனமாக அப்புறப்படுத்தி எரியூட்டினர். 

அவர்களது வீரச் செயல்கள் நாடு முழுவதும் அலை அலையாகப் பிரதிபலித்தது. வீரத்தியாகிகளின் இலட்சியத்தின் மீது மக்கள் மத்தியில் பற்று ஏற்பட்டது. சோசலிசம் குறித்து மேலும் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல் அதிகரித்தது. மக்களின் உணர்வு வெளிப்பாடு காங்கிரஸ் கட்சிக்குள்ளும் வெளிப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் விவாதங்களின்போது, கட்சியில் கணிசமான பகுதியினர் பகத்சிங் மற்றும் தோழர்கள் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்தனர். அவர்களது வீரமரணமும், அவர்கள் நீதி மன்றத்தில் ஆற்றிய வீரஞ்செறிந்த பிரச்சாரமும் சுதந்திரப் போராட்டம் மற்றும் சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதியாக மாறின. 

ஹர் கிஷன் சிங் சுர்ஜித்: (மார்ச் 23, 1916 – ஓகஸ்ட் 1, 2008) இந்தியாவின் கம்யூனிசத் தலைவர்களில் ஒருவர். மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சியின் பொதுச் செயலாளராக 1992 முதல் 2005 வரை பதவியில் இருந்தார். 1964 ஆம் ஆண்டில் இருந்து கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருந்தார்.

தமிழில்: ச.வீரமணி
2022.03.23, தீக்கதிர்

Tags: