மறைந்தும் மறவா எழுத்தாளுமை தெளிவத்தை ஜோசப்

மா. உஷாநந்தினி

லைசிறந்த இலக்கியப் பொதுவுடமை ஆளுமையாக, முற்போக்குவாதியாக மின்னிய தெளிவத்தை ஜோசப் அவர்களின் பேனைகளை பிடித்தே பழகிப்போன கரங்கள், பிடி தளர்ந்து, அவர் தனது எழுத்துப்பணிக்கு ஓய்வு கொடுத்த நாள் இன்று.
சாகித்திய ரத்னா எனும் வாழ்நாள் கெளரவப் புகழை தாங்கிய இவர், 60களில் எழுதத் தொடங்கி சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள், ஆய்வுக் கட்டுரைகள் வாயிலாக மாறுபட்ட பல சமூகங்களின் எல்லைகளை தொட்டுவந்தவர்.

குறிப்பாக, தான் பிறந்து, வாழ்ந்த மலையகத்தினதும், அந்த மக்களின் வாழ்நிலைகளையும் சற்றே அதிகமாக உரிமையோடு பேசியும் எழுதியும் வந்ததால், பலர் இவரை மலையக எழுத்தாளராக கொண்டாடிய போதும், ஈழத்து இலக்கியப் படைப்பாளி என்ற பெரும் வட்டத்துக்குள் வியாபித்து நிலைபெற்று விளங்கினார், தெளிவத்தை ஜோசப்.

தெளிவத்தை ஜோசப்…

பதுளை மாவட்டம், ஹாலி எல நகருக்கு அருகில் உள்ள ஊவாக்கட்டவளை என்ற ஊரில் 1934 பெப்ரவரி 16 அன்று பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சந்தனசாமி ஜோசப்.

தமிழகத்தின் கும்பகோணம் லிட்டில் ஃப்ளவர் உயர்நிலைப் பள்ளியில் 3 வருடங்கள் படித்துவிட்டு, இலங்கை திரும்பிய ஜோசப் பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் தனது கல்வியை தொடர்ந்தார்.

பள்ளிக் கல்வியை நிறைவு செய்த பின்னர், தெளிவத்தை எனும் தோட்டப் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றினார். அதனாலேயே இவரது பெயர் ‘தெளிவத்தை ஜோசப்’ என்றானது.

ஆசிரியப் பணிக்கு மத்தியில் கணக்கியலும் கற்றார். தொடர்ந்து மலையகத்தை விட்டு வெளியேறி, கொழும்புக்கு வந்தார். கொழும்பில் இனிப்பு பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் இணைந்து வேலை செய்த போதும், இவருக்கும் மலையகத்துக்குமான நெருக்கம் விலகவில்லை.

மலையக இயற்கை வளம், சுற்றுச்சூழல், லயத்து வாழ் உறவுகள், அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் விதம் பற்றிய சிந்தனை அவருக்கு ஏதோ ஒரு கடமையை உணர்த்தியபடி இருந்திருக்க வேண்டும். அந்த கடனை, மனக்கிடக்கை எழுத்தை கொண்டு நிறைவேற்ற துணிந்தார்.

1960இல் எழுத ஆரம்பித்தார். இவர் எழுதிய சிறுகதையொன்று தமிழ்நாட்டில் அப்போது ஜி. உமாபதிக்கு சொந்தமான ‘உமா’ இதழில் பிரசுரமானது.

தொடர்ந்து தெளிவத்தை ஜோசப் எழுதி வந்த பல சிறுகதைகள், ஆக்கங்கள் வெவ்வேறு பத்திரிகைகளில் வெளியாகின.

முதல் முதலாக அவர் எழுதிய ‘காலங்கள் சாவதில்லை’ நாவல் நூலுருவானது 1974இல் ஆகும். அந்த நாவலை வீரகேசரி பிரசுரம் வெளியிட்டமை அவரது இலக்கியப் பயணத்தின் மறக்க முடியாத நிகழ்வானது.
பின்னர், வைகறை வெளியீட்டினூடாக 1979இல் ‘நாமிருக்கும் நாடே’ சிறுகதை தொகுப்பு உதயமானது.

தொடர்ந்து 1997இல் ‘பாலாயி’ (மூன்று குறுநாவல்களின் தொகுப்பு), 2000இல் ‘மலையக சிறுகதை வரலாறு’, ‘இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும்’, 2010இல் ‘குடை நிழல்’ (புதினம்) ஆகிய நூல்களை வெளியிட்டார்.
60க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். ஒவ்வொரு கதையும் இவரது எழுத்தாற்றலுக்கும் இவர் சந்தித்துவந்த துளித்துளி சம்பவங்களுக்கும் சான்றாகிறது.

குறிப்பாக, இவரது ‘மீன்கள்’ கதை லயத்து வாழ் மக்களுக்கான கதையாகி, வாசிக்கும் நம்மையும் லயத்து வாசலில் நிறுத்துகிறது.

‘நாமிருக்கும் நாடே’ சிறுகதைத் தொகுப்புக்காக இவர் இலங்கை சாகித்திய விருதினை பெற்றதோடு, இவரது ‘குடை நிழல்’ நூல் 2010இல் யாழ்ப்பாண இலக்கிய வட்டம் – இலங்கை இலக்கிய பேரவையின் விருதை பெற்றுக்கொண்டது.
தவிர, இவர் 2013இல் எழுத்தாளர் ஜெயமோகன் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட விஷ்ணுபுரம் இலக்கிய விருதையும், 2014இல் இலக்கியத்துக்கான உயர் விருதாக கருதப்படும் சாகித்திய ரத்னா விருதையும் பெற்றார்.

மேலும், தனது இலக்கிய தேடலுக்காக இந்தியா, இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் என பல நாடுகளுக்கும் சென்று, பல்வேறு அமைப்புகளின் மூலம் பாராட்டுகளை பெற்றுள்ளார். குறிப்பாக, 2003இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற தமிழினி மகாநாட்டிலும் கலந்துகொண்டிருந்தார்.

சிறுகதை, விமர்சனம், நாவல், பத்தி எழுத்துக்கள், ஆய்வுத் தொடர்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நாடக எழுத்தாக்கத்தோடு பயணித்தது மட்டுமன்றி, திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதிலும் தனது பங்களிப்பினை வழங்கினார்.
முக்கியமாக, மலையக தோட்டப்புற அவலத்தை காட்டும் விதமாக 1975ஆம் ஆண்டு ‘புதிய காற்று’ என்றொரு திரைப்படம் வெளியானது. அந்தப் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் தெளிவத்தை ஜோசப் அவர்களே.

மலையக எழுத்தாளர் மன்றத்தின் தலைவராக மலையக இலக்கியத்துறை வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய பணிகள் அளப்பரியன.

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வந்தேறிய குடியினரின் வழிவந்து, தோட்டத்து வாழ்க்கையின் கசந்துபோன பக்கங்களை கண்ணெதிரிலேயே கண்டு, பொறுக்க மாட்டாமல் எழுதி எழுதியே தன் மனக்காயங்களை ஆற்றிக்கொண்ட இந்த மலையக மைந்தனின் பெயரை இனி அவரது எழுத்துக்கள் உச்சரிக்கும், சுவாசிப்போமாக!

ஒரு மகா விருட்சத்தின் மறைவு…..

-இரா. சடகோபன்,
செயலாளர் ,
மலைநாட்டு எழுத்தாளர் மன்றம்.

லையகத்தின் எழுத்து இமயமும் மலையகத்தின் தேசிய அடையாளமுமான தெளிவத்தை ஜோசப் என்ற மகாவிருட்சம் மறைந்தது 1980 களில் நாவலப்பிட்டி என்ற சிறு நகரத்திலிருந்து தன்னந்தனியாக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு வந்த எனக்கு முதல் முதலில் அறிமுகமானவர் அந்தனி ஜீவா. அவர் மூலமாக சிறுகதை எழுத்தாளர் சுபையர் இளங்கீரன் அறிமுகமானார். அதன்பின் எனக்கு படிப்படியாக தெளிவத்த ஜோசப், பிரேம்ஜி ஞானசுந்தரம், ராஜஸ்ரீ காந்தன், சோமகாந்தன் போன்றவர்கள் அறிமுகமானவர்கள். இவர்கள் அனைவரையும் விடவும் என்னில் மிகவும் ஒட்டிக் கொண்டவர் தெளிவத்தை ஜோசப் அவர்கள் தான். அதற்கு காரணம் அவர் மலையகத்தார் என்பதும் அவருக்கும் எனக்கும் இருந்த கருத்து ஒற்றுமைகள்தான் என்று கூற வேண்டும். அதன்பின் நாங்கள் மேற்கொண்ட அனைத்து இலக்கிய பயணங்களிலும் நாங்கள் ஒன்றே பயணித்தோம். எங்களுடன் பேராசிரியர் சந்திரசேகரன் அவர்களையும் சேர்த்துக் கொண்டோம்.

அவை வெறுமனே இலக்கிய பயணங்கள் அல்ல. சிறுகதை தொடர்பான பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள், இளம் மாணவர்கள் மத்தியில் எவ்வாறு படைப்பாற்றலிலை வளர்த்தெடுப்பது, மலையக மக்கள் தொடர்பான ஆய்வரங்கங்கள், இப்படி எங்கள் வழியில் பல பெரும்பணிகள் வந்தன. இவற்றில் கலந்து கொண்டதற்கு அப்பால் நாங்கள் மேற்கொண்ட கொண்டாட்டங்கள் சொல்லும் தரம் அன்று. அவை மனதிருக்கும் வரை நினைவில் இருக்கும்.

ஒரு சிறு வயது இளைஞன் தெளிவத்தை ஜோசப் மலையகத்திற்கு அப்படி என்ன செய்துவிட்டார் என்ற ஒரு கேள்வியை எழுப்பி இருந்தான்.

அவனுக்கு நான் அளித்த பதிலின் ஒரு பகுதி பின்வருமாறு:-

1) “தோட்டக்காட்டான்” என்ற கேவலமான பெயரை சுமந்துகொண்டு “காட்டான்” பரம்பரையில் இருந்து வந்த காடுவெட்டி களனி அமைத்த பெருமை கொண்டவர்கள் நாம் . இன்று “மலையக தமிழன்” என்று வீறு கொண்டு எழுந்து நிற்கிறோமே அதற்கு பாதை அமைத்துக் கொடுத்தவர்கள் யார்…..?

2 ) 1960 களுக்கு முன் உங்களுக்கு இலக்கியமே இருந்ததில்லை என்று கேவலமாக சொன்னவர்களுக்கு தமிழகத்தின் 3000 ஆண்டு கால இலக்கிய வரலாற்றின் தொடர்ச்சி நாங்கள் என்று பதில் அளித்தவர்கள் நாங்கள்….. இலங்கையில் கடந்த 200 ஆண்டுகளாக வாய்மொழி இலக்கியமான நாட்டார் பாடல்களையும், கூத்துக்களையும், நாடகங்களையும் சுமந்து வந்தவர்கள் நாங்கள். உங்கள் கண்கள் திமிர்த்தனத்தால் குருடாகிப் போனதால் அவைகள் உங்களுக்கு தென்படுவதில்லை……?

3 ) அந்தளவுக்கு செழுமையான இலக்கியங்களை தூசி துடைத்து…. தோள்மீது சுமந்து கொண்டு வந்து உங்களிடம் ஒப்படைத்து இருக்கிறோமே…

இதனை வேறு யார் செய்திருக்க கூடும்….?

4 ) மலையக சிறுகதை வரலாற்றை எழுதினால் அதில் 90 சதவீதம் தெளிவத்தைக்கு சொந்தமானது… நாவல்களுக்கும் வேறு இலக்கிய வடிவங்களுக்கும் எந்தக் குறையையும் வைக்கவில்லை….

5 ) 1963 ஆம் ஆண்டு மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் நிறுவப்பட்டது முதல் இன்றுவரை எத்தனை பயிற்சிப் பட்டறைகள், பாசறைகள், சிறுகதை கவிதை போட்டிகள், ஞாபகார்த்த நிகழ்வுகள், எவ்வளவு இளம் எழுத்தாளர்களுக்கு விருதுகளும் பரிசுகளும் வழங்கி இருப்போம்….. மலை நாட்டு எழுத்தாளர் மன்றம் என்ற பதாகையின் கீழ் எத்தனை எழுத்தாளர்கள் உருவாகி இருக்கிறார்கள்….? நான் உள்ளடங்கலாக…..

6 ) மலையக கதைக்கனிகள், கலையொளி முத்தையா பிள்ளை வெளியீடுகள், வீரகேசரி வெளியீட்டகம், துரை விஸ்வநாதனின் துரைவி பதிப்பகம், மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் வருடாந்த சிறுகதை கவிதை போட்டிகள், எழுத்தாளர் ஞாபகார்த்த நிகழ்வுகள் இப்படி எம் இலக்கிய வரலாற்றில் வந்த மைல் கல்கள்…. ? எத்தனை ….. எத்தனை…..?

7 ) ஆதலால்……. நாம் கடந்து வந்த பாதையில் எத்தனை பள்ளங்களையும் மேடுகளையும் சிகரங்களையும் கடந்து வந்திருக்கிறோம் என்பதை திரும்பிப்பார்த்து, இன்னும் எத்தனை உச்சிகளையும் உயரங்களைத் தொட வேண்டும் என்று சிந்திப்பவனால் மட்டுமே வானத்தில் ஏற முடியும். வரலாற்றை தேடிப் படித்து தெரிந்து கொள்ளாதவனால் புதிய வரலாற்றை படைக்க முடியாது…..

தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு என் சிரம் தாழ்த்திய வணக்கங்கள்……

Tags: