கலை இலக்கியத்தில் மாவை நித்தியானந்தனின் வகிபாகம்

-முருகபூபதி

(கலைஞரும் மெல்பன் பாரதி பள்ளியின் நிறுவனரும், சமூகச்செயற்பாட்டாளரும் தன்னார்வத் தொண்டருமான மாவை நித்தியானந்தனின் பவளவிழா நவம்பர் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பன் ஸ்பிரிங்வேல் மாநகர மண்டபத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவை மெல்பன் பாரதி பள்ளி பெற்றோர் – ஆசிரியர்கள் இணைந்து கொண்டாடினர்.

மாவை நித்தியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ஆவணப்படத் தொகுப்பு காட்சியும் காண்பிக்கப்பட்டது. அத்துடன் மாவை நித்தியின் சிறப்பியல்புகளை கூறும் நித்தியம் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. மலரில் இடம்பெற்ற எழுத்தாளர் முருகபூபதியின் ஆக்கம் இங்கே வெளியிடப்படுகின்றது)

னிதர்களின் கலை, இலக்கிய ஆர்வம் இயல்பிலேயே ஊற்றெடுப்பது. அந்த ஊற்றை நேர்த்தியாக சமூகத்திற்கு பயன்படும் விதத்தில் நதியாக்குவதில்தான் அவர்களின் ஆளுமைப்பண்பு வெளிப்படுகிறது. அத்தகைய வற்றாத ஓடும் நதிதான் எங்கள் மாவை நித்தியானந்தன்.

தனது ஆரம்ப பாடசாலைக் காலத்திலிருந்தும் யாழ். தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வாழ்க்கை முதல், கொழும்பு கட்டுப்பெத்தை பல்கலைக்கழக வளாகத்தின் தொழில் சார் பயிற்சிக் காலத்திலும் தன்னிடம் சுரந்துகொண்டிருந்த கலை, இலக்கிய தாகத்தை சமூகத்தை நோக்கி பயன்படுத்தியவர்தான் எழுத்தாளரும் நாடகக் கலைஞரும், சமூகச் செயற்பாட்டாளருமான மாவை நித்தியானந்தன்.

இவரை கடந்த ஐம்பது வருடகாலமாக அவதானித்து வருகின்றேன். 1970 காலப்பகுதியில் மாவை நித்தி, மேற்சொன்ன கட்டுப்பெத்தை பல்கலைக் கழகத்தில் மேற்கல்வியை தொடர்ந்து கொண்டிருந்தவேளையில் அங்கு நீண்ட காலம் இயங்கி வந்த தமிழ்ச்சங்கம் வருடாந்தம் நடத்தி வந்த கலைவிழாவில்தான் முதல் முதலில் சந்தித்தேன்.

அந்தச்சங்கம் நுட்பம் என்ற சிறந்த கலை, இலக்கிய, விஞ்ஞான ஆய்வு மலரையும் வெளியிட்டு வந்தது. அதிலும் மாவை நித்தியின் ஆக்கங்கள் வெளிவந்தன.

நித்தி, தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய ஈழத்தின் மூத்த கவிஞர் அம்பி என பரவலாக அறியப்பட்ட அம்பிகை பாகரின் மாணாக்கர்.

பாட நேரங்களையடுத்து வரும் இடைவேளையின்போது, தான் எழுதிய கவிதைகளை அம்பி மாஸ்டருக்கு காண்பித்து, அவரது செம்மைப்படுத்தலின் பின்னர் இதழ்களுக்கு அனுப்பினார். அதனால், அம்பி மாஸ்டரின் அபிமானத்திற்குரிய மாணவராகவும் பின்னாளில் நல்ல நண்பராகவும் திகழ்ந்தார்.

சுமார் கால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் மெல்பனில் மாவை நித்தி, பாரதி பள்ளியின் வளாகத்தை தொடக்கியபோது சிட்னியில் வதியும் அம்பி அவர்களை அழைத்து பாரதி பள்ளியை அங்குரார்ப்பணம் செய்ய வைத்தார்.

மாவை நித்தி கவிஞராகவும் நாடக எழுத்தாளராகவும் இயக்குநராகவும் நன்கு அறியப்பட்டிருந்தாலும், சிறுகதைகளும், புனைவு சாரா பத்தி எழுத்துக்களும் எழுதி வந்திருப்பவர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியன மல்லிகை இதழில் ஒரு சில சிறுகதைகளையும் எழுதியிருப்பவர். அதில் லண்டன்காரன் என்ற சிறுகதை அக்காலப்பகுதியில் சிலாகித்து பேசப்பட்டது. அதேசமயம் இலங்கையில் புகழ்பூத்த சிங்கள திரைப்பட இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசை நேரில் சந்தித்து நித்தி எழுதிய நேர்காணல் கட்டுரை மல்லிகையில் வெளிவந்தது. அந்த சந்திப்புக்கு இவருடன் சென்றவர்தான் மெல்பனில் வதியும் இவரது பல்கலைக்கழக நண்பர் தில்லைக்கூத்தன் என்ற புனைபெயரில் அறியப்பட்ட சிவசுப்பிரமணியம்.

மாவை நித்தி, கொழும்பில் கலை , இலக்கிய நண்பர்கள் கழகம் என்ற அமைப்பிலும் இணைந்திருந்தவர். அதன் ஸ்தாபக உறுப்பினருமாவார். இக்கழகம், கொழும்பு தமிழ்ச்சங்கம் மற்றும் நண்பர்களின் இல்லங்களில் பல கலை, இலக்கிய சந்திப்பு கலந்துரையாடல்களையும் நடத்தியிருக்கிறது.

நித்தி, கவிதை, சிறுகதை எழுதியவாறே நாடகப்பிரதிகளும் எழுதினார். அவற்றுள் ஐயா லெக்சன் கேட்கிறார் என்ற அங்கதச்சுவை கொண்ட நாடகம் இன்றளவும் பேசப்படுகிறது. இந்த நாடகப் பிரதி யாழ். பல்கலைக்கழகம் வெளியிட்ட ஒரு நாடக நூலிலும் இடம்பெற்றுள்ளது.

1970 களில் கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்தின் வருடாந்த கலைவிழாவில் முதல் தடவையாக இந்நாடகம் மேடையேறியது. இதன் உறைபொருளும் மறைபொருளும் சமகால அரசியலையும் சித்திரிக்கின்றமையால், காலத்தையும் வென்று வாழும் நாடகப் பிரதியாகவும் பேசப்படுகிறது. இந்த நாடகம் மீண்டும் மெல்பனில் 1990 களில் இரண்டு தடவைகள் மேடையேற்றப்பட்டது.

அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் வதியும் கலைஞர்களினாலும் மேடையேற்றப்பட்டது. நித்தியின் மற்றும் ஒரு அரசியல் அங்கதச் சுவையுள்ள தாளலய இசை நாடகம்தான் திருவிழா. இதனை வவுனியா வாரிக்குட்டியூர் கிராமத்தில் 1980 காலப்பகுதியில் நடந்த பாரதி விழாவில் பார்த்து ரசித்திருக்கின்றேன்.

இந்த நாடகம் தமிழ் அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் அங்கதச்சுவையுடன் சித்திரித்தது.

மாவை நித்தி மெல்பனுக்கு வருகை தந்தபின்னரும் நாடகப்பிரதிகளும், இசை நாடகங்களும் எழுதினார். அத்துடன் புனைவு சாரா பத்தி எழுத்துக்களிலும் ஈடுபட்டார்.

மெல்பனில் 1989 காலப்பகுதியில் வெளிவரத் தொடங்கிய மரபு இதழில், அதன் ஆசிரியர் விமல். அரவிந்தனின் வேண்டுகோளை ஏற்று தொடர்ச்சியாக சில பத்திகளை எழுதிவந்தார்.

அவையும் மெல்பனில் எம்மவரின் வாழ்வுக் கோலங்களை நகைச்சுவையுணர்வுடன் சித்திரித்தது. அவற்றில் மெல்வே, கராஜ் சேல் முதலான பதிவுகள் வாசிக்கும்போதே சிரிப்பை வரவழைக்கும்.

நித்தி, மெல்பனில் எழுதித் தயாரித்து இயக்கி மேடையேற்றிய கொழும்பு மெயில், இசை நிகழ்ச்சி மற்றும் அம்மா அம்மா நாடகம் என்பனவும் குறிப்பிடத்தகுந்தவை.

அம்மா அம்மா, அக்காலப்பகுதியில் இலங்கையில் வடக்கு – கிழக்கில் நீடித்திருந்த போர்ச் சூழலை சித்திரித்திருந்தது. கொழும்பு மெயில், காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு நோக்கி வரும் இரவு மெயில் வண்டியினுள் நடக்கும் காட்சிகளை யதார்த்தம் குன்றாமல் பதிவுசெய்திருந்தது.

அதனைப்பார்த்து ரசித்தவர்களின் வாழ்வோடு கொழும்பு நோக்கி வரும் தபால் ரயில் வண்டி நெருங்கியிருந்தமையால், அந்த நிகழ்ச்சியும் மாவை நித்தியின் வெற்றிகரமான படைப்பு எனச்சொல்லலாம்.

மாவை நித்தியிடம் மொழிபெயர்க்கும் ஆற்றல் இருக்கிறது. படைப்பு இலக்கியத்தில் ஈடுபட்டவாறே இந்தத் துறையிலும் அவ்வப்போது ஈடுபட்டு வந்திருப்பவர். அதனால், இவரது சேவைகளை மெல்பனில் முன்னர் வெளிவந்த உதயம் பத்திரிகையும் உள்வாங்கியிருக்கிறது.

“தமிழ்க்குழந்தைகளை மகிழவைக்கக்கூடியதான காட்சி ஊடகத்தின் வளர்ச்சி தமிழர் புலம்பெயர்ந்த சூழலில் மட்டுமல்ல, தாயகச்சூழலிலும் மிக அவசியமான ஒன்றாக உள்ளது. இத்தேவையை நிறைவுசெய்வது எப்படி என்பதைப்பற்றி எமது சமூகம் சிந்தித்தல் அவசியம்.” என்று ஒரு சந்தர்ப்பத்தில்தெரிவித்திருக்கும் நித்தி,அவ்வாறு சொன்னவாறே தனது கருத்தையும் முன்னின்று செயல்படுத்தியுமிருக்கிறார்.

அதற்கு அவர் தான் ஸ்தாபித்த பாரதி பள்ளி ஊடாக நடத்திவரும் நாடக விழாக்கள் மட்டுமன்றி, எழுதிய சிறுவர் நாடக நூல்களும் சான்றாதாரமாக விளங்குகின்றன.

அத்துடன், பாப்பா பாரதி என்ற மூன்று பாகங்களில் வெளிவந்திருக்கும் இறுவட்டு மாவை நித்தியின் அயராத பணிகளுக்கு மற்றும் ஒரு எடுத்துக்காட்டு,

தனது 75 வருடகால வாழ்க்கையில் மாவை நித்தி தமிழ், கலை, இலக்கியத்திற்காகவும் சமூகம் சார்ந்தும் மேற்கொண்ட பணிகள் முன்னுதாரணமானவை.

மாவை நித்தியானந்தனை அவரது பவளவிழாக் காலத்தில் மனம் திறந்து வாழ்த்துகின்றோம்.

பவளவிழாக்காணும் கலைஞர் மாவை நித்தியானந்தன்!

-முருகபூபதி

மிழ்க்குழந்தைகளை மகிழவைக்கக்கூடியதான காட்சி ஊடகத்தின் வளர்ச்சி தமிழர் புலம்பெயர்ந்த சூழலில் மட்டுமல்ல, தாயகச் சூழலிலும் மிக அவசியமான ஒன்றாக உள்ளது. இத்தேவையை நிறைவுசெய்வது எப்படி என்பதைப்பற்றி எமது சமூகம் சிந்தித்தல் அவசியம்.”

என்று பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எழுதியும் பேசியும் வந்திருக்கும் கலைஞரும் எழுத்தாளருமான மாவை நித்தியானந்தன் இந்த ஆண்டு தனது 75 வயதினை அடைந்து பவள விழாக் காண்கின்றார்.

மாவை நித்தியானந்தன், சிறுவர்களுக்காக நாடகம் எழுதி இயக்கியவர் மாத்திரமல்ல, கல்வி, விவசாயம், தொடர்பாக சமூக அக்கறை கொண்ட அயராத செயற்பாட்டாளருமாவார்.

பிறந்த ஊருக்குப்பெருமை சேர்ப்பித்த கலைஞர்கள், எழுத்தாளர்கள் வரிசையில் நித்தியானந்தனும் தாம் பிறந்த மாவிட்டபுரம் ஊருக்கு தனது வாழ்வும் பணிகளும் ஊடாக புகழைச் சேர்ப்பித்தவர்.

அரைநூற்றாண்டுக்கு முன்பிருந்தே எழுத்து, நாடகம் முதலான துறைகளில் ஈடுபட்டு வந்திருக்கும் மாவை நித்தியானந்தன், தென்னிலங்கை கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியாகவும், பின்னர் பிரிட்டிஸ் கவுன்ஸிலால் தெரிவாகி லண்டன் சென்று படித்தும் மேலதிக பட்டம் பெற்றவர். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் முன்னாள் மாணவரான நித்தியானந்தன், அக்கல்லூரியில் பயின்ற காலத்திலேயே கவிதை, நாடகம் முதலான துறைகளில் எழுதத் தொடங்கினார்.

கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்தில் இணைந்த காலப்பகுதியில் கொழும்பில் கலை, இலக்கிய நண்பர் கழகம், மற்றும் தேசிய கலை இலக்கியப் பேரவை முதலான அமைப்புகளிலும் அங்கம் வகித்து மல்லிகை முதலான இதழ்களிலும் இலக்கியப்பிரதிகள் எழுதியவர்.

இலங்கையின் முன்னணி திரைப்பட இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசை சந்தித்து, அவர் பற்றிய அறிமுகக் கட்டுரையை அக்காலப்பகுதியில் மல்லிகையில் எழுதி தமிழ் வாசகர்களுக்கும் அந்தத் திரையுலக மேதையை அறிமுகப்படுத்தியவர்.

கட்டுப்பெத்தை மாணவர்களின் தமிழ்ச்சங்கத்தின் வெளியீடான நுட்பம் மலரிலும் எழுதியதுடன், அச்சங்கத்தின் ஆண்டு விழாவில் தனது ஐயா லெச்சன் கேட்கிறார் என்ற நாடகத்தையும் எழுதி, இயக்கி மேடையேற்றினார். இந்நாடகம் பல வருடங்களுக்குப்பின்னர் அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் மேடையேற்றம் கண்டது.

மாவை நித்தியின் மற்றும் ஒரு நாடகம் திருவிழா. பாடலும் வசனமும் இசையும் கலந்த அரசியல் அங்கத நிகழ்வு. யாழ்ப்பாணம் குடாநாடெங்கும் மேடையேறிய இந்நாடகம், வவுனியாவிலும் ஒரு பாரதி விழாவில் இடம்பெற்றது.

இவ்வாறு நாடத்துறைக்கும் வளம் சேர்த்துள்ள மாவை நித்தியானந்தன், சிறுவர் நாடகத்திலும் தனது கவனத்தை தீவிரமாக்கியவர்.

ஆஸ்திரேலியாவுக்கு 1989 இல் புலம்பெயர்ந்த பின்னர், இங்கு வளரும் தமிழ்க்குழந்தைகளின் தேவை கருதி மெல்பன் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் “ பெற்றோர் பிள்ளைகள் உறவு “ என்ற தொனிப்பொருளில் முழுநாள் கருத்தரங்கையும் 1992 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடத்தினார். புகலிட நாடுகளில் தலைமுறை இடைவெளியினால் தோன்றும் முரண்பாட்டுச் சிக்கல்களுக்கு அர்த்தமுள்ள தீர்வு காணும் நோக்கில் நடத்தப்பட்ட அக்கருத்தரங்கின் தொடர்ச்சியாக மெல்பனில் தமிழ்க் குழந்தைகளுக்காக பாரதி பள்ளி என்ற பாடசாலையை ஆரம்பித்தார்.

தனது கல்லூரி ஆசானும் ஈழத்தின் மூத்த கவிஞருமான அம்பி அவர்களை அழைத்து இந்த தமிழ்ப் பாடசாலையை ஆரம்பித்தார். பாரதி பள்ளி விக்ரோரியா மாநிலத்தில் சில பிரதேசங்களில் வளாகங்கள் அமைத்து தங்கு தடையின்றி சீராக இயங்கி வருகின்றது.

வெள்ளிவிழாவையும் கண்டுவிட்ட பாரதி பள்ளி மாணவர்களை பயிற்றுவித்து பாப்பா பாரதி என்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை தொகுத்து காணொளி இறுவட்டினையும் மூன்று பாகங்களில் வெளியிட்டார்.

அத்துடன் மெல்பன் கலைவட்டம் என்ற கலை, இலக்கிய அமைப்பினையும் உருவாக்கி, இலக்கிய கருத்தரங்குகளும் நடத்தி நாடகங்களையும் எழுதி மேடையேற்றினார்.

அவற்றுள் கண்டம் மாறியவர்கள், அம்மா அம்மா என்பன முக்கியமானவை. கொழும்பு மெயில் என்ற பாடலும் இசையும் இணைந்த நிகழ்ச்சியையும் மாவை நித்தி தயாரித்து மேடையேற்றினார். இந்த நிகழ்ச்சியும் பல மேடைகளைக் கண்டிருக்கிறது. பாரதி பள்ளியில் தமது குழந்தைப்பருவத்தில் பயின்ற மாணவர்கள், பின்னாளில் பல்கலைக்கழகம் பிரவேசித்து பட்டதாரியானதன் பின்னர், அவர்களில் சிலரும் இதே பாரதி பள்ளியில் ஆசிரியர்களாக நியமனம் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தகுந்த செய்தி.

பாரதி பள்ளியின் ஆண்டுவிழாக்களிலும் மாவை நித்தியின் சிறுவர் நாடகங்களுக்கு குறைவிருக்காது. அவுஸ்திரேலியாவில் பல்கலைக்கழகங்களில் பிரவேசிப்பதற்காக தோற்றும் மாணவர்கள் தமிழையும் ஒரு பாடமாக கற்று, தமிழ் மொழிப்பரீட்சையை எழுத முடியும். இந்த ஏற்பாட்டை முன்னின்று செய்தவர்களில் மாவை நித்தியும் ஒருவர்.

தமிழ் ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகளை நடத்துவதிலும் தமது நேரத்தை தொடர்ச்சியாக செலவிட்டு வந்திருக்கும் மாவை நித்தியானந்தன், கல்வி, கலை, இலக்கியத்துடன் மாத்திரம் தனது சமூக அக்கறையை வரையறுத்துக்கொள்ளாமல் அகலக்கால் பதித்து, எமது தாயகத்தில் வடக்கில் மாவிட்ட புரத்தில் தனது தந்தையின் நினைவாக திருநாவுக்கரசு விவசாயப்பண்ணை பயிற்சி முகாம் ஒன்றையும் பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்தார்.

அதற்காகவும் அவர் வருடந்தோறும் அடிக்கடி இலங்கை சென்று வருபவர்.

இரவு பகல் என்று பாராமல் ஓய்வு ஒழிச்சலின்றி இயங்கி வரும் மாவை நித்தியானந்தன் பன்முக ஆளுமையாக எம்மத்தியில் திகழுகின்றார்.

சிறிது காலம் மெல்பனில் எழுத்தாளர் நடேசன் வெளியிட்ட உதயம் இருமொழி மாத இதழிலும் மாவை நித்தியானந்தன் துணை ஆசிரியராக பணியாற்றியவர். அத்துடன் இங்கு விமல் அரவிந்தன் வெளியிட்டு வந்த மரபு இதழிலும் இலக்கியப்பிரதிகள் எழுதினார்.

சமகாலத்தில் இலங்கை எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளுர் உணவு உற்பத்தியின் மூலமும் ஓரளவு தீர்வு காணமுடியும். இத்தகைய நெருக்கடி எதிர்காலத்தில் தோன்றக்கூடும்

என தீர்க்கதரிசனமாக மாவை நித்தியும் சிந்தித்திருப்பாரோ என்றும் அந்த மாதிரி விவசாய பண்ணையை பார்க்கும்போது எவருக்கும் தோன்றலாம்.

அங்கே பல விவசாய ஆராய்ச்சி மாணவர்களும் பயிற்சி பெற்றுவருகின்றனர். பல்கலைக்கழகங்களில் விவசாய பீடத்தில் பயிலும் மாணவர்களும் அங்கே சென்று மேலதிக அனுபவங்களை பெற்றுவருகின்றனர்.

மாவை நித்தியின் ஆளுமைப்பண்பில் துலக்கமாகியிருப்பது அவரது தீர்க்கதரிசன இயல்புகளே.

பவள விழாக்காணும் மாவை நித்தியானந்தன், நல்லாரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம்.

மாவை நித்தியின் நூல்கள் பற்றிய எமது மதிப்பீடு:

மாவை நித்தி வெளியிட்டுள்ள நான்கு நூல்கள் தமிழ் இலக்கிய உலகில், குறிப்பாக சிறுவர் இலக்கியவரிசையில் மிகுந்த கவனிப்புக்குரியவை.

சின்னச்சின்ன நாடகங்கள், நாய்க்குட்டி ஊர்வலம், சட்டியும் குட்டியும், சின்னச்சின்ன கதைகள்.

இந்நான்கு நூல்களில் சின்னச்சின்ன கதைகள் நூல் தவிர்ந்த ஏனைய மூன்றும் சிறுவர் நாடகங்கள்.

Tags: