யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 3 வருடங்களின் பின்னர் இன்று (12.12.2022) மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, இன்று (12.12.2022) காலை சென்னையில் இருந்து பலாலியிலுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் விமானமொன்று சுமார் 3 வருடங்களின் பின்னர் சேவையிட்  ஈடுபட்டது.

Alliance Air விமான சேவை, இந்தியாவில் இருந்து பலாலி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வாரத்தில் நான்கு நாட்களுக்கு சேவையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு வழி விமான சேவைக்கு அண்ணளவாக 90 நிமிடங்களே எடுக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதுள்ள அதன் ஓடுபாதையில் 75 ஆசனங்களைக் கொண்ட விமானங்களே தரையிறங்க முடியும் என்பதோடு, பலாலி, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அபிவிருத்தி பணிகள் 2,250 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பலாலியில் உள்ள விமான நிலையம் 2019 ஒக்டோபரில் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக, யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டதோடு, அதன் முதல் விமானம் சென்னையில் இருந்து முன்னெடுக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளாலும் நிதியளிக்கப்பட்டது.

பலாலியில் இருந்து இந்தியாவுக்கான விமான சேவைகள் கொரோனா தொற்று மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் காரணமாக 2 வருடங்களுக்கு முன்னர் 2020 இல் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதன் மூலம், நாட்டின் சுற்றுலாத் துறைக்கு அது உதவியாக இருக்கும் என்பதோடு, நலிவடைந்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Alliance Air ஆனது, இந்தியாவின் தேசிய விமான சேவையான Air India வின் ஒரு பகுதியாக இருந்ததோடு, இவ்வருடத்தின் ஆரம்பத்தில் அது TATA குழுமத்திடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டக்ளஸ் மகிழ்ச்சி

தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகளின் பலனாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பலாலிக்கான விமான சேவையை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட பலாலிக்கான விமான சேவை இன்று மீண்டும் ஆரம்பமாகியுள்ளமை,  வடக்கு மாகாண மக்களுக்கு மாத்திரமன்றி கிழக்கு மற்றும் அநுராதபுரம் பொலனறுவை போன்ற வட மத்திய மாகாணங்களும் நன்மை பயக்கவுள்ளதாகவும்  கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், “அடிப்படையான வசதிகளுடன் மட்டுப்படுத்தப்பட்டளவு சேவைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிக்கின்றன.

விமான நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை கட்டம் கட்டமாக விஸ்தரிப்பதற்கு தேவையான நகர்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

இதுதொடர்பாக, இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதுடன் அமைச்சரவையிலும் பிரஸ்தாபிக்கவுள்ளேன்.

இந்நிலையில், மக்கள் சரியான முறையில் இதனைப்  பயன்படுத்துவார்களாயின், எதிர்காலத்தில் இந்தியாவிற்கான சேவைகள் விரிவுபடுத்தப்படும் என்பதுடன் ஏனைய நாடுகளில் இருந்தும் சேவையை முனனெடுப்பதற்கும் விமான நிறுவனங்கள் முன்வரும்.

இதன்மூலம், எமது பிரதேசத்தின் சுற்றாலாத்துறை வளர்ச்சியடைவதுடன், ஏற்றுமதி இறக்குமதி செயற்பாடுகளுக்கான நேரடி வாசலாகவும் பலாலி விமான நிலையம் செயற்படும். இது எமது மக்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தும்” என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், காங்கேசன்துறைக்கும் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் போன்றவற்றிற்கு இடையிலான சரக்கு படகு சேவையை ஆரம்பிக்கும் தன்னுடைய முயற்சிகளும் விரைவில் சாத்தியமாகும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: