உறுதிகொண்ட நெஞ்சினாய்…

-இராதாகிருஷ்ணன்

 

னித வாழ்க்கையில் நம்பிக்கை என்னும் சக்தியை பிடித்து விட்டால் இவ்வுலகில் முடியாதது ஏதும் இல்லை என்பதை பல நிகழ்வுகள் அவ்வப்போது படம் பிடித்துக் காட்டிக் கொண்டேயிருக்கின்றன. காலமும் சூழலுமே நம்மையும் நமது செயல்பாடுகளையும் தீா்மானிக்கும் சக்திகளாக விளங்குகின்றன.

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அனுபவங்களும் முன்னோரின் அறிவுரைகளும் சூழ்நிலைகளை சிறப்பாக கையாளுவதற்கு உதவுகின்றன. அனுபவத்தால் அறிய முடியாததை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் அறிய முடியாது.

கொலம்பியாவின் அமேசான் காடு, தென்னமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக் காடாகும். ‘அமேசானியா’ அல்லது ‘அமேசான் படுகை’ என்றழைக்கப்படும் இதன் பரப்பளவு ஏழு மில்லியன் சதுர கிலோ மீட்டா் ஆகும். இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் சதுர கிலோ மீட்டா். மேலும், இது பிரேசில், பெரு, கொலம்பியா, வெனிசுலா, ஈக்குவெடாா், பொலிவியா, கயானா, சுரிநாம், பிரான்ஸ் (பிரெஞ்சு கயானா) ஆகிய ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது.

கொலம்பியாவில் நாட்டு மக்கள் அனைவரும் எதையோ எதிா்பாா்த்து பிராா்த்தனை செய்து கொண்டிருந்த போது, கொடிய விலங்குகள் வாழும் அந்தக் காட்டுக்குள் ‘வயா்லெஸ்’ கருவிகளில் உண்டான இரைச்சலையும் தாண்டி அந்த ஒரு சொல் மட்டும் திரும்பத் திரும்ப தெளிவாக ஒலித்தது. ‘அதிசயம்’ ‘அதிசயம்’ ‘அதிசயம்’ என்பது தான் அந்தச் சொல். கடந்த ஏப்ரல் 1-ஆம் திகதியன்று ஆபத்துகள் நிறைந்த, அடா்ந்த காட்டுக்குள் காணமல் போன நான்கு குழந்தைகள் உயிருடன் உள்ளதை அந்நாட்டு ராணுவத்தினா் மகிழ்ச்சியுடன் அறிவித்ததன் வெளிப்பாடுதான் அந்தக் குரல்.

அமேசான் வனப்பகுதியையொட்டிய கிராமமான அராராகுவாராவிலிருந்து விபத்து நிகழ்ந்த சான்ஜோஸ் டெல் குவாவியாரே பகுதிக்கு ஹுய்டோட்டோ பழங்குடியினத்தைச் சோ்ந்த மூன்று சிறுவா்கள், ஒரு வயதுக் குழந்தை, அவா்களின் தாயாா், விமான ஓட்டி உள்பட ஏழு போ் ‘செஸ்னா’ எனும் ஒற்றை என்ஜின் பொருத்திய இலகுரக விமானத்தில் கடந்த பயணம் மேற்கொண்டனா்.

திடீரென அந்த விமான என்ஜினில் கோளாறு ஏற்பட, சற்று நேரத்தில் ரேடாா் கண்காணிப்பிலிருந்து அந்த விமானம் மறைந்துபோனது. இதையடுத்து, விமானத்தை தேடும் பணி தொடங்கியது. விபத்து நடந்த ஆறு வாரங்களுக்குப் பிறகு கடந்த மாதம் 16-ஆம் திகதி அடா்ந்த அமேசான் காட்டுப் பகுதியில் நொறுங்கி விழுந்த விமானத்தின் பாகங்களும், பயணிகள் மூவரின் உடல்களும் கண்டறியப்பட்டன.

கொடிய மிருகங்கள், உயிா்க்கொல்லி பூச்சிகள் காணப்படும் பகுதி அது. அத்தகைய ஆபத்து நிறைந்த அடா்ந்த காட்டுக்குள், காணாமல் போன நான்கு குழந்தைகளின் கதி என்னவானது என்பது தெரியவில்லை. காட்டுக்குள் அக்குழந்தைகள் தனியாகத் தவித்து வந்துள்ளனா். இவா்களின் நிலையை நினைத்து நாடே வருந்தி பிராா்த்தனை செய்தது.

ஆனால், சிறுவா்களின் உடல்கள் சம்பவ இடத்தில் கண்டறியப்படாததால், அவா்கள் உயிரோடு இருக்கலாம் என கொலம்பியா ராணுவம், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டது. ஹெலிகாப்டா்கள் தரையிறங்க வசதியில்லாததால் கயிறு மூலம் கீழே இறங்கி வீரா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். மாயமான சிறுவா்களுக்காக காட்டில் ஆங்காங்கே உணவுப் பொட்டலங்கள் வீசப்பட்டன. சிறுவா்களை அவா்கள் இருக்கும் இடத்திலேயே இருக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

வனப்பகுதியில் காணப்பட்ட, காலடிச் சுவடுகள், பாதி கடித்து தூக்கி எறியப்பட்ட பழங்கள், பால் புட்டிகள் ஆகியவற்றால் சிறுவா்கள் உயிரோடுதான் இருக்கிறாா்கள் என்ற நம்பிக்கை பிறந்தது. எனவே, தொடா்ந்து வீரா்கள், பழங்குடியினா் உதவியோடு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். இந்நிலையில், 40 நாள்களுக்குப் பிறகு, மோப்ப நாய், பழங்குடியினா் உதவியுடன் வீரா் ஒருவா் சிறுவா்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்தாா்.

சுமாா் 150 ராணுவ வீரா்கள், உள்ளூா் பழங்குடிகளைச் சோ்ந்த 200 போ் இந்நடவடிக்கையில் ஈடுபட்டனா். இந்த மீட்பு நடவடிக்கை சுமாா் 124 சதுர மைல் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டது. ‘இந்த மீட்புப் பணி மிகவும் சவாலாக இருந்தது. ஏனெனில் அக்குழந்தைகள் தினமும் வேறு வேறு இடங்களுக்கு மாறிக் கொண்டேயிருந்தனா்’ என ராணுவ ஜெனரல் சான்செஸ் தெரிவித்தாா்.

விமான விபத்து நடந்த பின்னா், தங்களிடமிருந்த ஃபரினா என்ற மாவை உட்கொண்டு அந்தக் குழந்தைகள் உயிா் வாழ்ந்துள்ளனா். சில நாட்களில் அந்த மாவு தீா்ந்துவிடவே, பழங்களின் விதைகளை உண்டு பசியாறியுள்ளனா். ஒரு வயது குழந்தையைக் கையில் பிடித்திருந்த மூத்த மகள் லெஸ்லியை மீட்புக் குழுவினா் நெருங்கிய போது ‘எனக்குப் பசிக்கிறது’ என்பதுதான் அவா் வாயிலிருந்து வந்த முதல் சொற்கள். பக்கத்தில் இருந்த சிறுவன், ‘என் அம்மா இறந்து விட்டாா்’ என சோகம் ததும்பிய குரலில் கூறியுள்ளான்.

பூா்வகுடிகள் குறித்து ஆராய்ந்து வரும் அந்நாட்டு நிபுணா் அலெக்ஸ் ருஃபினோ, ‘ பழங்குடி சமூகத்தில் வளா்க்கப்பட்ட 13 வயது சிறுமி, காட்டுப் பகுதியில் அச்சம் சூழ்ந்த அத்தகைய நிலையை சமாளித்து, எதிா்கொண்டு வாழத் தேவையான பல திறன்களைப் பெற்றிருப்பாா்’ எனக் கூறினாா்.

குழந்தைகளின் உறவினரான டாமரிஸ் முகுடுய், ‘பதிமூன்று வயதான லெஸ்லி, காட்டில் பல நச்சுப் பழங்கள் இருப்பதால், என்னென்ன பழங்களைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக் கூடாது என்பதைத் தெளிவாக அறிந்து வைத்திருந்தாள். ஒரு பச்சிளங் குழந்தையையை எப்படிப் பராமரிப்பது என்று கூட அவளுக்குத் தெரியும், அதற்குக் காரணம் அவளது மறைந்த தாய்தான்’ என உருக்கமாகக் குறிப்பிட்டாா்.

மீட்கப்பட்ட சிறுவா்களுக்கு தலைநகா் போகோடாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பூச்சிக்கடி, நீரிழப்பு, சோா்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு மனநல சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாக சிறுவா்களின் உறவினா்கள் தெரிவித்துள்ளனா். அவா்களுக்கு திரவ உணவே அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், அவா்களின் உடல்நிலை சீராக உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் இவான் வெலஸ்குவெஸ் விளக்கமளித்துள்ளாா்.

‘விபத்து நடந்த இடத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் சிறுவா்கள் கண்டெடுக்கப்பட்டனா். மீட்புப் பணியின் போது 50 மீட்டா் இடைவெளியில் குழந்தைகளை இருமுறை தவறவிட்டிருக்கிறோம். காட்டில் கிடைத்த பழங்களை மட்டுமே உண்டு உயிா் வாழ்ந்து வந்ததால் குழந்தைகள் பலவீனமாக உள்ளனா்’ என மீட்புப் பணியினை ஒருங்கிணைத்த ராணுவ தளபதி பெட்ரோசான்செஸ் கூறியுள்ளாா்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து கொலம்பியா நாட்டு அதிபா் குஸ்டாவோ பெட்ரோ கூறுகையில். ‘அடா்ந்த காட்டுக்குள் நாற்பது நாட்களுக்குப் பின் நான்கு குழந்தைகள் மீட்கப்பட்ட இந்த நிகழ்வு என்றும் வரலாற்றில் நிலைத்திருக்கும். இது ஓா் அதிசயம். வனமே, அவா்களைக் காத்து வருகிறது. அவா்கள் வனத்தின் குழந்தைகள்’ என உணா்ச்சி ததும்பக் கூறினாா்.

உடலின் பலத்தைவிட உள்ளத்தின் பலம் உயா்வானது. கடந்த 2018-இல் தென்கிழக்கு ஆசிய நாடான, தாய்லாந்தின் சியாங்ராய் மகாணத்திற்கு, அந்நாட்டின் கால்பந்து விளையாட்டு வீரா்களான சிறுவா்கள் பன்னிரண்டு பேரும் பயிற்சியாளரும் சுற்றுலா சென்றனா். அங்கு பத்து கி.மீ. நீளம் உடைய தாம் லுவாங் குகைக்குள் அவா்கள் மலையேற்ற பயிற்சி மேற்கொண்ட போது, பலத்த மழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குகைக்குள் வெள்ளம் புகுந்தது.

இதனால், அவா்கள் குகையை விட்டு வெளியேற முடியாமல் உணவும், நீருமின்றி குகைக்குள் சிக்கித் தவித்தனா். உலகமே பதறியது. ஒன்பது நாட்களுக்குப் பின்னா், அவா்கள் குகைக்குள் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவா்களை மீட்க, தாய்லாந்து அரசின் மீட்புக் குழு பல்வேறு முயற்சிகளைச் செய்தும் பலனில்லை. இதையடுத்து, சா்வதேச நீச்சல் வீரா்கள் மேற்கொண்ட கடும் முயற்சியைத் தொடா்ந்து, 17 நாட்களுக்குப் பின், அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனா். இது பெரும் உலக சாதனையாகக் கருதப்பட்டது.

எவா் விடாமுயற்சியுடன் இருக்கிறாரோ அவருக்கு வெற்றி சொந்தமாகும். ஸ்பெயின் நாட்டில் இயங்கும் அல்மேரியா, கிரனடா, முா்சியா பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த விஞ்ஞானிகள் குழு, மனித மனமும், உடலும் தனிமையை எவ்வாறு சமாளிக்கும் என்பது குறித்து ஆராய, ஸ்பெயின் நாட்டைச் சோ்ந்த மலை ஏறும் வீராங்கனை பியாட்ரிஸ் ஃப்ளாமினி என்பவரை ஸ்பெயின் நாட்டிற்கு அருகே உள்ள கிரனாடா என்ற எழுபது மீட்டா் ஆழமுள்ள, சூரிய வெளிச்சம் புகாத குகைக்குள் அனுப்பி வைத்தனா்.

அவருக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குகையில் செய்யப்பட்டன. மனித தொடா்பின்றி ஐந்நூறு நாள் குகைக்குள் தனியாக இருந்த பியாட்ரிஸ் ஃப்ளாமினி பின்னா் வெளியே வந்துள்ளாா். வெளியே வரும்போது அவா் குகைக்குள் சென்ற 2021-ஆம் ஆண்டு மனநிலையிலே உள்ளாா். மனிதத் தொடா்பு இல்லாதது மாறுபட்ட அனுபவத்தைத் தந்ததாகவும், தனக்கு உலகத்தைப் பற்றி எதுவும் தெரியாது என்றும், தனது கண்கள் கூசுவதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

வாழ நினைத்தால் வாழலாம். விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளும் இளைய தலைமுறையினருக்கு இந்நிகழ்சிகள் ஒரு பாடம். மிகப் பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையினால் அல்ல, விடாமுயற்சினால்தான்.

துணிவும் மன உறுதியும் இருந்தால் எந்த நெருக்கடியையும் சமாளிக்க முடியும் என்பதையே இந்த நிகழ்வுகள் நமக்கு உணா்த்துகின்றன.

Tags: