இந்தியாவில் கிரிக்கெட்டின் ஆதிக்கம்!

-அண்ணாமலை சுகுமாரன் 

காலனி ஆதிக்கத்தின் எச்சமான கிரிக்கெட் இந்திய சமூகத்தில் எவ்வாறு வேரூன்றியது? ஆதிக்க சமூகத்தின் அடையாளமாக எப்படி மாறியது..? ஒரு சாதியினரின் ஆதிக்கம் எப்படி கொடி கட்டிப் பறந்தது..? இன்று எப்படி அது உடைபட்டு வருகிறது! கோர்ப்பரேட் கலாச்சாரத்தின் தூதுவனாக மாறிப் போன வரலாறு குறித்த ஒரு அலசல்;

மழை விட்டும் தூவானம் நிற்காததைப் போல உலகக்கோப்பை கிரிகட்டைப் பற்றிய அதிர்வுகள் சமூக தளத்தில் தொடர்கின்றன! அத்துணை தூரம்  கிரிக்கெட்  கலாச்சார மரபாக நம்மிடையே  ஊறிப் போய்விட்டது .

1947 இல் விடுதலை பெற்றுவிட்டோம் ஆனால், ஆங்கிலேயர்கள்  இருந்து  நமது கலாச்சாரத்தில் ஊறிப் போன சமூக கட்டமைப்பின் புதைந்து போன மனஓட்டத்தின் வினைப்பாடாக இந்த விளையாட்டு விளங்குகிறது!

இந்த விளையாட்டு காலனித்துவ சகாப்தத்தில் ஆங்கிலேயர்களால் இந்திய துணைக் கண்டத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த கட்டுரை இந்தியாவில் பிரிட்டிஷ் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்திய வரலாற்றுச் சூழலை ஆராய்கிறது, மேலும் சிறிய மன்னர்கள் மற்றும் உயர் சாதியினரிடையே, குறிப்பாக பணக்கார பிரபுத்துவத்தினரிடையே அதன் விரைவான ஒருங்கிணைப்புக்கும், பொருளாதார சமூக கட்டமைப்புகளின் உருவாக்கத்திற்கும் உதவியது குறித்து ஆராய்கிறது .

கிரிக்கெட் விளையாட்டு இந்திய கலாச்சாரத்திற்கு ஒத்திசைந்த ஒரே  விளையாட்டாக –  மற்ற இந்திய பண்டைய விளையாட்டுகளை எல்லாம் புறம் தள்ளிவிட்டு – ஒரு அசுரச்செடிபோல் ஒரு விஷ விருக்ஷமாக எங்கும்  பரவி வியாபித்து விட்டது. இது எதைக் காட்டுகிறது ?  இது ஒரு திட்டமிட்ட விளைவா? அல்லது அடிமையாக இருந்த பாமர மக்களுக்கு  ஒரு உயர்வகுப்பில் தானும் சேரும் ஒரு மன கிளர்ச்சியை இது  அடிமனதில் தந்ததால் உருவானதா?

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கொம்பெனி துணைக் கண்டத்தில் தனது இருப்பை நிறுவிய காலனித்துவ காலத்தில்   கிரிக்கெட், அதன் மூலோபாய சிக்கல்கள் மற்றும் போட்டி இயல்புடன், இந்தியாவின் களங்களில் ஒரு காலனித்துவ இறக்குமதியாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டது

இந்தியாவில் கிரிக்கெட்டின் ஆரம்ப பரவல் பிரிட்டிஷ் இராணுவம் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் மூலம் எளிதாக்கப்பட்டது!

அவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் இந்த விளையாட்டை விளையாடினர். உள்ளூர் மக்கள் படிப்படியாக இந்த புதுமையான விளையாட்டுக்கு ஆளாகினர். அதற்கு அதன் எளிய தேவைகள் ஒரு முக்கியகாரணங்கள்  ஒரு பேட், ஒரு பந்து மற்றும் ஒப்பீட்டளவில் தட்டையான மேற்பரப்பு கொண்ட மைதானம்  இது பல்வேறு இந்திய சமூகங்களுக்கு அணுகக் கூடியதாக இருந்தது.

இந்தியாவில் கிரிக்கெட் வேரூன்றியதால், அது சமூக கட்டமைப்பை ஊடுருவிச் செல்லத் தொடங்கியது! சிறிய மன்னர்கள் மற்றும் சமூகத்தின் உயர் மட்டங்கள் உட்பட ஆளும் வர்க்கத்தினரிடையே இது ஆதரவைக் கண்டது. அவர்களுக்கு இதன் மூலம் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களுடனான தொடர்பு  கிடைத்தது!

அது  ஆரம்பத்தில் சலுகை மற்றும் பிரபுத்துவத்தின் அடையாளமாக அதன் கருத்துக்கு வழிவகுத்தது. கிரிக்கெட்டின் நிதானமான ஆடும் தன்மை தன்மை,தனித்துவமானது மற்ற விளையாட்டுகள் போலில்லாமல்  இது ஒன்றே நாள் முழுவதும், இன்னமும் தொடர்ந்து ஐந்து நாட்கள் வரைகூட ஆடும் விளையாட்டாக அமைந்தது!

இத்தகைய வேலை வெட்டி இல்லாது பொழுது போக்கும் வல்லமை அப்போது சிறு மன்னர்களுக்கும், ஜமீன்தார்களுக்கும் , மேல்தட்டு, மேல்சாதி மக்களுக்கும் மட்டுமே அப்போது இருந்தது.

மெல்ல மெல்ல, கிரிக்கெட் வெறும் ஒரு விளையாட்டை விட அதிகசக்தி வாய்ந்ததாக  மாறியது; இது ஒரு சமூக அடையாளமாக மாறியது! இது உயரடுக்கை சாமானிய மக்களிடமிருந்து வேறுபடுத்தியது. உயர் சாதியினரிடையே இந்த விளையாட்டு பிரபலமடைந்தது! சமூக அந்தஸ்தின் குறிகாட்டியாகவும் இருந்தது. அந்தக் காலத்தில் இதில் ஈடுபட சாமான்ய மக்களுக்கு இயலாத ஒன்றான மாறிப் போனது. ஆனாலும் அவர்களின் கவனத்தையும் ஈர்த்து வந்தது. சமஸ்தானங்களின் மகாராஜாக்கள் இதை தங்களுக்குள் நட்புறவை வளர்ப்பதற்கான ஒரு வழிமுறையாகவும் ஏற்றுக்கொண்டனர்..!

இந்தியாவில் கிரிக்கெட்டின் ஆரம்பகால வளர்ந்த வரலாறு கதைகளை வடிவமைப்பதில் சிறிய மன்னர்கள் மற்றும் பிரபுத்துவத்தின் செல்வாக்கு விளையாட்டின் கருத்து மற்றும் முக்கியத்துவத்தில் அழியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளது. வட இந்தியாவில் இப்படி என்றால், தமிழ் நாட்டைப் பொறுத்த அளவில் சுதந்திரத்திற்கு முன்னும், பின்னும் இங்கு பார்ப்பனர்கள் இந்த விளையாட்டில் அதிகம் ஈடுபட்டதோடு, நூற்றுக்கும் மேற்பட்ட கிரிக்கெட் கிளப்புகளை உருவாக்கி நாளும், பொழுதும் வளர்த்தனர்! சி.டி.கோபிநாத், ரங்காச்சாரி, கவாஸ்கர் என ஏகப்பட்ட பார்ப்பன கிரிக்கெட்டர்களே அன்று களத்தில் இருந்தனர். ஆகவே, இதை ‘ஜெண்டில்மேன் விளையாட்டு’ என்ற சொல் வழக்கு பொதுதளத்தில் உருவாக்கப்பட்டது! மாநில மற்றும் தேசிய அளவிலான கிரிக்கெட் விளையாட்டிலும் அவர்களே பங்குபெற்றனர். இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பார்ப்பன ஆதிக்கம் கொடிகட்டி பறந்தது! வீரர்களை தேர்வு செய்யும் போதே பாகுபாடு காட்டப்பட்டதாக பரவலான புகார்கள் உள்ளன!

சில நூறு ஆண்டுகள் வேடிக்கைப் பார்த்து வந்த பாமரமக்கள் தாங்களும் அந்த விளையாட்டில் மிக சிரமப்பட்டு பங்குபெற முயன்றனர்! அப்போது ஏகலைவனுக்கு நிகழ்ந்தது இங்கேயும் நிகழ்ந்தது. எனினும் மிகுந்த முயற்சியும், சிரமமும் மேற்கொண்டு கபில் தேவ், எம். எஸ். தோனி போன்ற சிலர் பங்கேற்க முடிந்தது. மற்ற சாமான்ய பெரும்பான்மை முண்டியடித்து, பெரும் பணம் செலவழித்து பார்த்து மகிழிச்சியடைந்து அமைதியானார்கள்.

அவர்கள் சாமான்யர்கள். அவர்களின் அடிமன வேட்கையை மற்ற வணிக அமைப்புகளும், ஊடகங்களும் வளர்த்து அதன் மூலம் அவர்கள் வணிக இலாபம் அடைந்தார்கள் .

அதே சமயத்தில் நிகழ்ந்த வெகுஜன ஊடகங்களின் வருகை, குறிப்பாக தொலைக்காட்சி, கிரிக்கெட்டை ஒரு தேசிய ஆர்வமாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தது. அரசே கிரிக்கெட் பரவலுக்கு ஊக்கமளித்தது. விடுமுறை அறிவிப்புகள், போக்குவரத்து வசதிகள் செய்தன! போட்டிகளின் ஒளிபரப்பு, வர்க்க எல்லைகளைத் தாண்டி, மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை அறைகளுக்கு விளையாட்டைக் கொண்டு வந்தது.

கிரிக்கெட் வீரர்களை தேசிய ஹீரோக்களாக மாற்றி, அனைத்து தரப்பு மக்களின் கற்பனையையும் கவர்ந்தன. பகிரப்பட்ட ஆர்வத்தின் மூலம் சமூகப் பொருளாதாரத் தடைகளை உடைத்து, கிரிக்கெட் ஒரு ஒருங்கிணைப்பு சக்தியாக மாறியது.

எளிமையான பின்னணியிலிருந்து தோன்றி வந்த கிரிக்கெட் வெற்றியாளர்களின்  தோற்றம் மக்கள் மத்தியில் அதன் புகழை மேலும் அதிகரித்தது. சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கபில் தேவ் மற்றும் எம். எஸ். தோனி போன்ற வீரர்கள், எளிமையான தொடக்கத்திலிருந்து உயர்ந்தவர்கள், அவர்கள் வெகுசன மக்களின் ஆசை மற்றும் உத்வேகத்தின் அடையாளங்களாக மாறினர். அவர்களின் வெற்றிக் கதைகள் பரந்த பார்வையாளர்களுடன் இந்தியாவெங்கும், எல்லைகளைத் தாண்டி எதிரொலித்தன. இது கிரிக்கெட்டின் ஒரே மாதிரியான ஒரு உயரடுக்கு முயற்சியை தன்னையறியாமல் தானே உடைத்தன.  நினைத்ததை விட விளைவுகள் வேறாயின .

இப்போது இந்தியாவில் கிரிக்கெட்டின் புகழ் விளையாட்டு மைதானத்தின் எல்லைகளைத் தாண்டி விரிவடைகிறது; இது இப்போது விளையாட்டை தவிர முக்கியமாக பெருநிறுவன நலன்களுக்கான ஓர் இலாபகரமான அரங்காக மாறியுள்ளது!

இது நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைத்து நுகர்வோர் தயாரிப்பு சந்தைப்படுத்துதலுக்கான விரிவான தளத்தை வழங்குகிறது.

எனவே  கிரிக்கெட், பெருநிறுவன முதலீடுகள் மற்றும் போட்டிகளின் போது நுகர்வோர் தயாரிப்புகளின் சந்தைப்படுத்தல் ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டுறவு உறவையும் சேர்த்தே ஆராய்வது அவசியமாகிறது .

பல செல்வாக்கு மிக்க  பிராண்டிங்ஃ நிறுவனங்கள் இன்-ஸ்டேடியம் பிராண்டிங்கில் அதிகம் முதலீடு செய்கின்றன, போட்டிகளின் போது அவற்றின் லோகோக்கள் மற்றும் விளம்பரங்கள் முக்கியமாக அங்கு காண்பிக்கப்படுவதை உறுதி செய்கின்றன.

கோர்ப்பரேட் நிறுவனங்கள் பெரும்பாலும் கிரிக்கெட் வீரர்களை தங்களின் பிராண்ட் அம்பாசிடர்களாக ஒப்பந்தம் செய்கின்றன, அவர்களின் புகழ் மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்துகின்றன.இத்தகையக்  கூட்டணிகள் கிரிக்கெட் தொடர்பான தயாரிப்புகளுக்கு அப்பால் விரிவடைகின்றன, வீரர்கள் பானங்கள் முதல் ஆடை வரை பல்வேறு வகையான நுகர்வோர் பொருட்களுக்கு ஒப்புதல் அளிக்கிறார்கள்.

முடிவில், இப்போது  கிரிக்கெட் என்பது  பெருநிறுவன நலன்கள் மற்றும் நுகர்வோர் தயாரிப்பு சந்தைப்படுத்தல் ஆகியவற்றுக்கு இடையிலான கலவை விளையாட்டை ஒரு பன்முக பொருளாதார நிறுவனமாக மாற்றியுள்ளது.

இவ்வாறு பல பொருளாதார வரலாறு கிரிக்கட்டுக்கு இருந்த போதிலும் இதுவரை இந்தியாவில் பெருவாரியாக  இருக்கும் சாமான்ய நடுத்தர அடிமட்ட சாதியினர் வெறும் பார்வையாளர்களாக, சந்தைக்குப்பயன் படும் நுகர்வோர் மந்தையாகவே அதிகம் இருப்பது நோக்கத்தக்கதாகவே இருக்கிறது .

வணிகத்திலும் விளையாட்டிலும் பங்குபெற்று பெரு இலாபம் அடைவோர் பெரும்பாலும் உயர் வகுப்பினராக இருக்கின்றனர் .

இந்திய முழுவதும் பரவலாக பாராமல் தமிழகத்தை எடுத்துக் கொண்டாலே இதில் பங்குபெற்று, பெரும் புகழும், பெரும் செல்வமும் படைத்தர்களில் அதிகம் உயர் வகுப்பை சேர்ந்தவர்களே!

உதாரணமாக  கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், டபிள்யூ . வி. இராமன், சிவராமகிருஷ்ணன், சடகோபன் இரமேஷ், லஷ்மிபதி பாலாஜி,  முரளிகார்த்திக், ஹேமங்பதானி, பத்ரிநாத், இரவிச்சந்திரன் அஷ்வின், அபினவ் முகுந்த், முரளி விஜய், தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் மட்டுமின்றி ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா, சுரேஷ் ரெய்னா, மணீஸ் பாண்டே, ஹர்த்திக் பாண்டே, அமித் மிஸ்ரா, என்று  சமூகத்தின் ஒரு பிரிவினரே பெரும்பாலும் தேர்வாகி உள்ளனர்.

மீதம் உள்ள 97 சதவிகிதம் பேர் கைதட்டவும் காசு செலவழிக்கவும் மட்டுமே இருக்கிறார்கள்!

இப்போது கிரிக்கட்டு என்பது பரிணாம வளர்ச்சிபெற்று அது வணிகம் , பொருளாதாரம், அதிகாரம் , செல்வாக்கு, புகழ், வலிமை இவைகள் கொண்டவையாக மாறிவிட்டதால், இதர வகுப்பினரும் இதில் கவனம் செலுத்தி இதன் பிரம்மாண்ட வளர்ச்சியின் பலனை அனுபவிக்க வேண்டும்.

அனைவருக்குமான வளர்ச்சியே அவசியமானது , யாரும் கூப்பிட்டு வெற்றியை அழைத்துத் தரமாட்டார்கள் .அவர்களால் கோடு போட  முடிந்தால் பெருமான்மை சமூகம் ரோடு போடமுடியும்  சாமான்யர்கள் முயன்று ஏகலைவன் போல் வித்தைகள் கற்று  இதில் வெற்றிகொள்ள வாழ்த்துகிறேன்.

Tags: