2023 உலக வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டு

லக வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2023 அறியப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உலக வானிலை ஆய்வு மையம் (WMO – World Metorological Organisation) தெரிவித்துள்ளது. அதனால், புவி வெப்பமயமாதலைத் தடுக்க அவசரமாக உரிய நீடித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் ஐ.நா. காலநிலை பாதுகாப்பு இயக்கங்கள், சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் வலுத்துள்ளன.

ஐநா.வின் உலக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2023 அறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச வானிலை ஆய்வு மையத்தின் அந்த அறிக்கையில் 2023 ஆம் ஆண்டில் மிகவும் கடுமையான பல்வேறு வானிலை நிகழ்வுகளால் உலகம் முழுவதும் பரவலாக பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. பசுமைக்குடில் வாயுக்கள் உமிழ்தல் கொஞ்சமும் குறையாமல் வரலாற்று உச்சம் தொட்டுள்ளது. கடல் நீர்மட்டம் உயர்வும் வரலாற்றிலேயே புதிய உச்சத்தில் உள்ளது.

அண்டார்ட்டிக் பெருங்கடலில் பனிக்கட்டிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. வெப்ப நிலையில் முந்தைய பதிவுகளை உடைத்த இந்தப் புதிய பதிவு செவியைப் பிளக்கும் அளவுக்கு எச்சரிக்கையை ஒலிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையானது ஐநாவின் கொப்-28 (COP28) உச்சி மாநாடு நடைபெறும் சூழலில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கை குறித்து ஐ.நா தலைவர் அண்டோனியோ குத்ரேஸ், ”இந்த புதிய புள்ளிவிவரங்கள் உண்மையில் உலகத் தலைவர்களை நடுங்கச் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த அறிக்கையைப் பற்றி விஞ்ஞானிகள் கூறும்போது, ”2023 ஆம் ஆண்டுதான் வெப்பமான ஆண்டு என்ற தகவல் இந்த மனிதகுலத்தின் கைகளில் இன்னும் புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பிருப்பதை நழுவிச் செல்ல செய்யும்” என்று எச்சரிக்கின்றனர்.

பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தம்: காலநிலை மாற்றம் தொடர்பாகப் பேசப்படும் போதெல்லாம் பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தம் பற்றி குறிப்பிடப்படுவது வழக்கம். பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் என்பது கடந்த 2015 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டு, 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்தானது. பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட 175 நாடுகள் கையெழுத்திட்டன. உலக வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பாரீஸ் ஒப்பந்தத்தின் முக்கிய இலக்காக வரையறுக்கப்பட்டது. ஆனால், அக்டோபர் 2023 இன் முடிவடைந்த காலத்தில் எடுக்கப்பட்ட கணக்கின்படி சர்வதேச சராசரி வெப்பம் 1.4 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.

சர்வதேச காலநிலை அறிக்கை 2023 வரும் 2024 ஆண்டு முதல் பாதியில் முழுமையாக வெளியிட்டப்படும். அதற்குள் நவம்பருடன் முடிந்த காலத்துகான அறிக்கையே உலக வரலாற்றின் வெப்பம் மிகுந்த ஆண்டாக 2023-ஐ அடையாளப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது நவீன காலத்துக்கான வெப்பநிலை தொடர்பாக புதிய தரவுகள் பதிவு செய்யப்பட ஆரம்பிக்கப்படதில் இருந்து கடந்த 9 ஆண்டுகள் மிகவும் வெப்பமான ஆண்டுகளாக இருந்துள்ளன என்பதும் தெரியவந்துள்ளது.

20 ஆம் நூற்றாண்டு காலநிலைக்கு நாம் திரும்ப முடியாது. அதனால் வரும் நூற்றாண்டுகளில் வாழவே தகுதியற்ற காலநிலை உருவாகாமல் நாம் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று விஞ்ஞானிகளும், சூழலியல் ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர். இதற்கிடையில், வரும் எல் நினோ காரணியால் 2024-ல் உலக வெப்பநிலை இன்னுமே அதிகரிக்கும் எனக் கூறுகின்றனர்.

2022 இல் கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகிய பசுமைக் குடில் வாயுக்கள் வெளியேற்றம் வரலாறு காணாத அளவு அதிகமாக இருந்தது. அது அப்படியே 2023 இல் மேலும் அதிகரித்துள்ளது. தொழில் புரட்சி காலத்துக்கு முந்தைய அளவைவிட 50 சதவீதம் அதிகமாக கரியமில வாயு வெளியேற்றம் தற்போது உள்ளது. வட அமெரிக்கா, ஐரோப்பாவின் பனிப் பாறைகள் உருகுதலும் அதிகரித்துள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி நிலபரப்பை சேர்த்தால் எவ்வளவோ அதைவிட அதிகளவிலான பனிப் பாறைகள் உருகியுள்ளன. இத்தகைய மோசமான காலநிலையால் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரிக்கும், பெரியளவில் மக்கள் இடம் பெயர்தலும் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.

இந்த ஆண்டு உலகளவில் அதிகமான காட்டுத் தீ, வெள்ளம், வெப்பம் ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகள் பல நெருக்கடிகளை சந்தித்துவிட்டன. அதனால், உலகத் தலைவர்கள் துபாய் மாநாட்டில், காலநிலை மாற்றத்தைத் தடுக்க பெரிய வீச்சு கொண்ட நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட வேண்டும். உலக சராசரி வெப்பம் அதிகரித்தல் 1.5 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அண்டோனியோ குத்ரேஸ் வலியுறுத்தியுள்ளார்.

-இந்து தமிழ்
2023.12.01

Tags: