உயிர்வாழ முடியாத பகுதியானது காஸா!

காஸா பகுதி வாழத் தகுதியற்ற இட மாக மாறியுள்ளது; பொது சுகாதார பேரழிவு உருவாகியுள்ளது; மனிதத்துவத்தின் மிக மோசமான நிலையை காஸா சந்தித்து வருகிறது” என்று ஐக்கிய நாடுகள் அவையின் மனிதநேய தலைவர் மார்டின் கிரிபித்ஸ் (Martin Griffiths) இன்று (06.01.2024) கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை ஒன்றில்  மேலும் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: “ஹமாஸ் – இஸ்ரேல் மோதல்  தொடங்கி மூன்று மாதங்கள் முடிந்து விட்டன, 90 நரக நாட்கள் கடந்துவிட்டன. காஸா தற்போது மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாத இடமாக மாறிவிட்டது. அங்குள்ள மக்கள் அன்றாடம்  உயிருக்கு ஆபத்தான சூழலில் வாழ்கின்றனர்.

உணவுக்காகவும் குடிநீருக்காகவும் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத பஞ்சத்தை பலஸ்தீனர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேர் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். திறந்தவெளியில் மாறுபாடுகளுடனான வெப்பநிலையில் மக்கள் தங்கியுள்ளனர். குறைவான மருத்துவமனைகளே செயல்பாட்டில் உள்ளன. தொற்று வியாதிகள் பரவியுள்ளன.

மருந்துப் பொருட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. உயிர் பிழைப்போமா என்ற கேள்விக்குறியுடனேயே நாள்  தோறும் 180 குழந்தைகள் பிறக்கின் றன. மனிதத்துவத்தின் மிக மோசமான நிலையை காஸா சந்தித்து வருகிறது. ஆனால் இந்த உலகம் அதனை  வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளைச் செய்வதற்காக செல்வோருக்கும், 20 இலட்சம் மக்களுக்கு உதவுவது என்பது பெரும் சவாலாக உள்ளது. இதுவரை ஐ.நா உதவிக் குழுவைச் சேர்ந்த 142 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போர் தொடங்கியிருக்கவே கூடாது.

இப்போது இதனை முடிக்கும் காலம் நெருங்கிவிட்டது. உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும். காஸா மக்களுக்காக மட்டுமல்ல இனிவரும் சந்ததிகளை மனதில் கொண்டும் போரை நிறுத்த முற்பட வேண்டும்.

இந்த 90 நாட்களும் நரக  நாட்களே. நடந்தவை எல்லாமே மனிதாபிமானத்தின் மீதான தாக்குதல்கள் மட்டுமே. அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்து சர்வதேச சட்டத்தின்  கீழ் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். அப்பாவி பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அனைத்து பிணைக் கைதிகளும் நிபந்தனைகளின்றி விடுவிக்கப்பட வேண்டும்.” இவ்வாறு கிரிபித்ஸ் கூறியுள்ளார்.

Tags: