காங்கிரஸ் ஆட்சியின் தொழில் – பொருளாதாரக் கொள்கைகளும் கம்யூனிஸ்ட்டுகளின் எதிர்வினையும்
-பி.சம்பத்

காங்கிரஸ் ஆட்சியின் தொழில் – பொருளாதாரக் கொள்கைகளும் கம்யூனிஸ்ட்டுகளின் எதிர்வினையும் – பி.சம்பத்
நாடு (இந்தியா) விடுதலை அடைந்த பிறகு கம்யூனிஸ்ட் இயக்கம் சந்தித்த பிரதான பிரச்சனைகள் குறித்தும் அதில் கட்சி மேற்கொண்ட நிலைபாடுகள் குறித்தும் ஏற்கனவே விவரித்துள்ளோம். இந்திய அரசின் வர்க்கத் தன்மை குறித்து நீண்ட விவாதத்திற்கு பிறகு கட்சி ஒரு சரியான நிர்ணயிப்பிற்கு வந்தது. இந்திய அரசு ஒரு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசு என்றும் அது பெருமுதலாளிகளால் தலைமை தாங்கப்படுகிறது என்பதுமே அந்த நிர்ணயிப்பு. இந்த மதிப்பீடு சரியானதே என்பதை இன்றைய அனுபவங்களும் எடுத்துக்காட்டுகின்றன. ஜவஹர்லால் நேருவின் உரைகளிலும் எழுத்துக்களிலும் பல முற்போக்கான அம்சங்கள் இருக்கவே செய்தன. ஆனால், கொள்கை சார்ந்த பிரச்சனைகளில் அவரால் பெரிதாக எதுவும் செய்ய முடிய வில்லை. ஆளும் வர்க்கங்கள் மற்றும் அவைகளின் நலன்கள் சார்ந்த நிர்ப்பந்தங்கள் இதற்கு காரணம்.
ஐந்தாண்டு திட்டங்கள்
ஐந்தாண்டு திட்டங்களின் மூலம் சோவியத் யூனியன் மிகக் குறுகிய பத்தாண்டு காலத்திற்குள் பெரும் தொழில், பொருளாதார, இராணுவ வல்லரசாக மாறியது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது நாஜிகளின் தாக்குதலால் சோவியத் யூனியன் பெரும் சேதங்களை சந்தித்த நிலையில் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் அரசு கண்ட முன்னேற்றம் இது. இதனை நன்கு அறிந்த ஜவஹர்லால் நேரு இந்தியாவிலும் இதேபோல ஐந்தாண்டு திட்டங்களை உருவாக்கி இந்தியாவை பலம் பொருந்திய தொழில், பொருளாதார வல்லரசாக மாற்ற விரும்பினார். ஆனால், சோவியத் யூனியன் அடைந்த முன்னேற்றத்தை போல இந்தியா வளர்ச்சியடைய முடியவில்லை. இதற்கு காரணம் சோவியத் அரசு லெனின் காலத்திலேயே நிலப்பிரபுக்களிடமிருந்து நிலங்களை பறித்து ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்கியிருந்தது.
அதன்பிறகு ஸ்டாலின் தலைமையிலான அரசு கூட்டுப் பண்ணை விவசாயத்தின் மூலம் விவசாயிகள் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர்களின் பொருளாதாரமும் வாழ்நிலையும் பெரிதும் உயர்ந்தன. அங்கு ஏற்பட்ட தொழில் மற்றும் உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றதாக கிராமப்புற, நகர்ப்புற சந்தைகள் அமைந்திருந்தன. ஆனால், இந்தியாவில் நிலைமையே வேறு. இங்கு நிலச் சீர்த்திருத்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும் மேற்குவங்கம், கேரளா, திரிபுரா தவிர பிற மாநிலங்களில் இவை அநேகமாக அமுலாக வில்லை. இதனால், கிராமப்புற வறுமை நீடித்தது. விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகளின் நிலைமை சொல்லி மாளாது. இந்நிலையில், இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட ஐந்தாண்டு திட்டங்களால் உருவான தொழில் மற்றும் உற்பத்தி வளர்ச்சி அதற்கான சந்தை இல்லாததால் நெருக்கடியைச் சந்தித்தது.

அரசின் தொழில் கொள்கை
இந்திய அரசின் துவக்க கால தொழில் கொள்கையில் கனரக இயந்திர தொழிற்சாலைகள், சுரங்கங்கள், பெரும் மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்கிட முதலில் அமெரிக்கா, பிரிட்டனின் உதவியை நாடியது. இந்தியாவிற்கு இந்த உதவிகளைச் செய்தால் தங்கள் நாட்டில் உள்ள ஆளும் வர்க்கங்களுக்கு அது ஆபத்தாக மாறிவிடும் என்பதால் அந் நாட்டு அரசுகள் மறுத்தன. உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடான இந்தியாவை தங்கள் நாட்டின் உற்பத்திக்கான பெரும் சந்தையாக மாற்றிடவே இந்நாடுகள் விரும்பின. ஆயினும், இந்திய அரசு இந்திய ஆளும் வர்க்க நலனில் உறுதியாக இருந்தது. எனவே, அமெரிக்கா, பிரிட்டன் கைவிட்ட நிலையில் இந்த உதவியைச் செய்ய தயாராக இருந்த சோவியத் யூனியன் மற்றும் சில சோசலிச நாடுகளை அணுகியது. சோவியத் அரசு புதிதாக விடுதலை அடைந்த நாடுகளுக்கு தொழில் நுட்ப உதவிகளை செய்வதை தனது பிரதான வெளியுறவுக் கொள்கையாகக் கொண்டிருந்தது.
பொதுத்துறை நிறுவனங்கள்
சோவியத் மற்றும் சோசலிச நாடுகளின் உதவிகளை அரசுத்துறை நிறுவனங்களின் மூலமே பெற முடியும். இந்தியாவில் தொழில் வளர்ச்சிக்கு தேவை யான கனரக இயந்திரங்கள், எரிபொருள் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களை உருவாக்க பல்லாயிரம் கோடி மூலதனம் தேவை. மேலும், இவை நிர்மாணிக்கப்படுவதற்கு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இந்தியாவில் அன்றைய பெருமுதலாளிகளுக்கு இது சாத்தியமானதாக இல்லை. இந்தியாவில் துர்க்காபூர், பிலாய், ரூர்கேலா, பி.எச்.இ.எல். போன்ற இயந்திர தொழிற்சாலைகளும், நிலக்கரிச் சுரங்கங்களும், நெய்வேலி சுரங்கம் மற்றும் மிகப்பெரிய அனல்மின் நிலையமும் சோவியத் யூனியன் மற்றும் சோசலிச நாடுகளின் உதவியின் மூலம் நிறுவப்பட்டவையே. அதுமட்டுமல்ல, பிற்காலத்தில் அரசின் பெரும் முதலீடுகளோடு பல வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. மிகப்பெரிய வங்கிகளும், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் தேசியமயமாக்கப்பட்டன.
சோசலிசத்தை நோக்கிய பயணமா?
இந்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்குவதை முற்போக்கான நடவடிக்கை என்றும் இப்பாதையை பலப்படுத்துவதன் மூலம் சோசலிசத்தை நோக்கி இந்தியா அமைதியான முறையில் பயணிக்க முடியும் என்றும் அக்காலத்தில் கட்சிக்குள்ளும், வெளியேயும் வாதாடியவர்கள் உண்டு. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவர்கள் இந்த கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தியாவில் இத்தகைய பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்படுவதானது முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையின் ஒரு பகுதியே என்றும் இதனை அரசு முதலாளித்துவம் என்றும் இவர்கள் தெளிவு படுத்தினார்கள். அரசு முதலாளித்துவம் குறித்து லெனின் கூறிய ஏராளமான கருத்துக்களை இவர்கள் மேற்கோள் காட்டவும் செய்தார்கள். அரசு பொதுத்துறை நிறுவனங்கள் குறித்து இத்தகைய தெளிவான பார்வை மார்க்சிஸ்ட்டுகளுக்கு இருந்ததால்தான், இந்நிறுவனங்களின் தொழிலாளர்களை அணிதிரட்டுவதிலும் அவர்களை வர்க்கப் போராட்டங்களில் ஈடுபடுத்துவதிலும் மார்க்சிஸ்ட்டுகள் வலுவான கவனம் செலுத்தினார்கள்.

தனியார் வளர்ச்சி – பொதுத்துறை கபளீகரம்
எந்த ஆளும் வர்க்க அரசு தனது வர்க்க நலன் கருதி பிரம்மாண்டமான பொதுத்துறை நிறுவனங்கள் – வங்கிகளை உருவாக்கினவோ அவை இன்று அதே அரசால் – அதே ஆளும் வர்க்க நலன் கருதி பொதுத்துறை நிறுவனங்களையும், நிதி நிறுவனங்களையும் தனியார்மயமாக்கி வருகின்றன. அவற்றை அடிமாட்டு விலையில் பெரும் கோர்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருவதையும் காண்கிறோம். அன்று பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்க பல்லாயிரம் கோடி முதலீடு செய்ய முடியாத நிலையில் இருந்த பெருமுதலாளிகள், கடந்த கால மத்திய அரசின் கொள்கைகளால் ஆதாயம் அடைந்து இக்காலத்தில் பகாசுர முதலாளிகளாக மாறிவிட்ட னர். இதன் வளர்ச்சியாக பெரும் கோர்ப்பரேட் நிறுவனங்கள் உருவாகிவிட்டன. இந்நிலையில், இன்று ஆளும் வர்க்கங்களால் பொதுத்துறை நிறுவனங்களை வாங்க முடியும். இந்த இரு நடவடிக்கைகளுமே தங்கள் வர்க்க நலன் கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமேது?
பொதுத்துறையின் மறுபக்கம்
இருந்தாலும், நேரு மாடல் பொதுத்துறை நிறுவனத் திட்டம் முற்றிலும் தீமை வாய்ந்த ஒன்றே என்று நாம் வாதாடுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதில் தேசத்திற்கு நன்மையான, ஆக்கப்பூர்வமான சில அம்சங்களும் இருந்தன. குறிப்பாக, அக்காலத்தில் பொதுத்துறைக்கு வழங்கப்பட்ட தலையாய பாத்திரமும் அதன் வளர்ச்சியின் மீது அரசு நிர்வாகத்திற்கு இருந்த கட்டுப்பாடும் உண்மையானதாகும்.
பொதுத்துறையை பாதுகாப்போம்
இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பது – பலப்படுத்துவது என்ற நிலைபாட்டை கம்யூனிஸ்ட்டுகளும், இடதுசாரிகளும் மேற்கொண்டு உறுதியாகப் போராடி வருகிறார்கள். இன்றளவும் இதில் தீவிரம் காட்டுபவர்கள் இவர்களே. இந்நிலைபாட்டை பொதுத்துறை நிறுவனங்களை கபளீகரம் செய்யும் ஆளும் வர்க்க நிலைபாடுகளுக்கு எதிரானது இந்த செயல்பாடு என்ற வர்க்கப் பார்வையோடு இப்பிரச்சனையை புரிந்து கொள்ள வேண்டும்.

தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக
இன்று உலகளாவிய அளவில் பெரும் கோர்ப்பரேட் நிறுவனங்களால் முன்வைக்கப்படும் தாராளமயக் கொள்கைகளை இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதான பகுதியினரான பெருமுதலாளிகள் மிகுந்த ஆர்வத்தோடு அமுல்படுத்துகிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களை சூறையாடி இந்தியாவின் அனைத்துத் துறைகள் மற்றும் வாய்ப்புகளையும் தனியார் துறைக்கு உட்படுத்துவது என்பதே தாராளமயக் கொள்கையின் அடிப்படை அம்சமாகும். இந்த தாராளமயக் கொள்கை அமுலாக்கத்தால் இந்திய ஆளும் வர்க்கத்திற்குள்ளேயே ஒரு மேல்தட்டு பிரிவினர் உருவாகி உள்ளனர். இவர்கள் பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவின் சுதேசி தொழில் நிறுவனங்களையும் ஏராளமான சிறு தொழில் நிறுவனங்களையும் அழித்து தங்கள் மேலாதிக்கத்தை கொண்டுவர தீவிரமாக முயல்கிறார்கள். அதானி – அம்பானி கும்பலின் இன்றைய நடவடிக்கைகளும், அவர்களுக்கு ஆதரவான மோடி அரசின் செயல்பாடுகளையும் இக்கோணத்தில் நாம் சரிவர புரிந்து கொள்ள வேண்டும்.
இடதுசாரிகளால் மட்டுமே முடியும்
இந்த நாசகர தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் இந்திய அரசு இதுகாறும் அமுல்படுத்தி வந்த குறைந்தபட்ச நலத்திட்டங்களான பொது விநியோகம், குறைந்த கட்டணத்தில் பொது போக்கு வரத்து – மின்சாரம் – கல்வி – சுகாதாரம் போன்ற அனைத்து அம்சங்களையும் கபளீகரம் செய்கின்றன. முதலாளித்துவ கொள்ளை இலாபச் சுரண்டல் வேட்டைக்கு துணைபோகும் தாராளமய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக பெருங்கொண்ட வர்க்கப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை எக்காலத்திலும் இல்லாத அளவு இக்காலத்தில் முன்னுக்கு வந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தாராளமய, தனியார்மயக் கொள்கைகளுக்கு எதிராக சமரசமற்ற போராட்டங்களை நடத்துபவர்களாக கம்யூனிஸ்ட்டுகளும், இடதுசாரிகளும் விளங்குகின்றனர். இக்கடமைகளை வேறு எவரையும் விட கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் இடதுசாரிகளே உறுதியுடன் நிறைவேற்ற முடியும்.