ஈரான் பதிலடியால் தொடர்ந்து பின் வாங்கும் ட்ரம்ப்

ரானின் எரிசக்தி நிலையங்கள் மீது திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானின் எண்ணெய் வயல் இஸ்ரேலால் தாக்கப்பட்ட நிலையில், ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக திறக்கவில்லை என்றால் ஈரானின் எரிசக்தி நிலையங்கள் தாக்கப்படும் என ட்ரம்ப் மிரட்டியிருந்தார்.

ஆனால், கத்தாரில் உள்ள மிகப் பெரிய எரிவாயு உற்பத்தி நிலையத்தை தாக்கி, அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஈரான், தனது யுரேனியம் செரிவூட்டல் மையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலின் அணு சக்தி நிலையத்திற்கு அருகே தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால் மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகள், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரான் எச்சரித்தது.

இதனிடையே, ஈரான் எரிசக்தி  நிலையங்கள் மீதான தாக்குதலை 5 நாட்களுக்குத் தள்ளிவைப்பதாக அறிவித்த ட்ரம்ப், ‘ஈரான் தோல்வியை ஏற்க வேண்டும்’ என்று கெஞ்சிக் கேட்டார். அதே நேரம் ஊடகங்கள் முன்பு பேசுகையில், ஈரான் தான் போர் நிறுத்தத்திற்கு கெஞ்சுவதாகவும், தன்னை ஈரானின் உச்சதலைவராகவே  (காமேனியின் இடத்திற்கு) பதவியேற்க வருமாறு ஈரான் அழைத்ததாகவும் ஜம்பம் அடித்தார். அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக, பாகிஸ்தான் மூலமாக 15 அம்ச திட்டத்தை முன்வைத்தார். ஆனால்,  இந்த திட்டத்தை ஈரான் நிராகரித்ததுடன் அமெரிக்காவுக்கு 5 நிபந்தனைகளை விதித்தது.  

இந்நிலையில் தான் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில், ஈரான் கோரிக்கையின்படி, அந்நாட்டின் எரிசக்தி நிலையங்களை அழிக்கும் காலக்கெடுவை 10 நாட்களுக்கு ஒத்திவைக்கிறேன். இதன்படி, வரும் ஏப்ரல் 6, 2026, திங்கள்கிழமை இரவு 8 மணி வரை தாக்குதல்கள் நிறுத்தப்படும் என தாமாகவே ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை “மிகவும் சிறப்பாக” நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.  

வழக்கம்போல ட்ரம்ப்பின் இந்த தகவலையும் ஈரான் மறுத்துள்ளது. அமெரிக்காவுடன் நேரடியாக எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும், நட்பு நாடுகள் வழியாக செய்திகள் மட்டுமே பகிரப்படுவதாகவும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ்  அராக்சி கூறியுள்ளார். அமெரிக்கா எதிர்பார்த்த வகையில் போர் செல்லாத நிலையில் இப்போரில் இருந்து பின்வாங்குவதற்கு ட்ரம்ப் தொடர்ந்து முயன்று வருகிறார். தனது தோல்வியை ஒப்புக்கொள்ள தயாராக இல்லாத ட்ரம்ப், ‘ஈரான் தோற்று விட்டது, அவர்கள் போர் நிறுத்துமாறு என்னிடம் கெஞ்சுகிறார்கள்’ என ட்ரம்ப் அவராகவே ஒரு கதையை ஜோடித்து, உண்மையாக மாற்ற  நினைக்கிறார் என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Tags: