அமெரிக்கா உடன் 2-ம் கட்ட பேச்சு இப்போதைக்கு இல்லை என ஈரான் தகவல்

அமெரிக்காவுடன் இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.
தெஹ்ரானில் நேற்று (20.04.2026) செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, “பேச்சுவார்த்தையை, ராஜதந்திர முயற்சிகளை முன்னெடுப்பதில் அமெரிக்கா தீவிரமாக இல்லை. பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறும் அமெரிக்கா, அதற்கான செயல்முறையை முன்னெடுப்பதில் தீவிரம் காட்டுவதில்லை. அதன் நடத்தைகள் இதையே உணர்த்துகின்றன.
ஹார்முஸ் நீரிணையில் ஈரானிய சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியது, ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டிருப்பது, லெபனானில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதை தாமதப்படுத்துவது ஆகிய அனைத்தும் போர் நிறுத்தத்தின் தெளிவான மீறல்கள்.
அதோடு, அச்சுறுத்தும் சொல்லாடல்களை அமெரிக்கா மேற்கொள்கிறது. அமெரிக்கா தனது நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றுவதோடு, அளவுக்கு அதிகமான கோரிக்கைகளை முன்வைக்கிறது.
ஹார்முஸ் நீரிணையில் மற்றவர்களுக்கு தடையற்ற பாதுகாப்பை எதிர்பார்க்கும் அதேவேளையில், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்கா கட்டுப்படுத்துகிறது. எனவே, இப்போதைக்கு புதிய பேச்சுவார்த்தைகளில் ஈரான் ஈடுபடாது” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டிருப்பது அமைதி பேச்சுவார்த்தைக்கு மிகப் பெரிய தடையாக இருப்பதாக பாகிஸ்தான் இராணுவத் தளபதி அசிம் முனிர், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் தொலைபேசியில் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் இஸ்லாமாபாத்தில் நடத்த தங்கள் நாடு தயாராக இருப்பதாகவும் அப்போது அவர் கூறியுள்ளார். இதையடுத்து, அசிம் முனிரின் கவலை குறித்து பரிசீலிப்பதாக ட்ரம்ப் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் நிலைப்பாடு என்ன?
ஹார்முஸ் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரான் சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றியது. அதன் தொடர்ச்சியாக, ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறும்போது, “போர் நிறுத்தம் அமுலானது முதல் அமெரிக்காவின் செயல்பாடுகள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (19.04.2026) இரவு ஈரான் சரக்கு கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தி உள்ளது. இது போர் நிறுத்தத்தை மீறும் செயல் ஆகும். அமெரிக்காவுடன் அடுத்த சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் திட்டம் இல்லை” என்றார்.
ஈரான் இராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “சரக்கு கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் கடற்கொள்ளை தாக்குதல் போன்றது. ஈரான் கப்பல் கடத்தப்பட்டுள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுப்போம். ஈரான் கப்பலில் எங்களது மாலுமிகள், ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் நலன் கருதி அமெரிக்கா மீதான தாக்குதலை தாமதப்படுத்தி வருகிறோம்” என்று தெரிவித்தன.