சண்முகா வித்தியாலய அதிபர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்!

-ஜிப்ரி கரீம்
(ஓட்டமாவடி, மட்/மம/மாஞ்சோலை அல் ஹிரா பாடசாலையின் அதிபர்)

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், அக்கல்லூரியின் அதிபருக்கு, ஓட்டமாவடி, மட்/மம/மாஞ்சோலை அல் ஹிரா பாடசாலையின் அதிபர் ஜிப்ரி கரீம் பகிரங்க கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அவரது Facebook பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள குறித்த மடல் வருமாறு,

மரியாதையாதைக்குரிய சண்முகா வித்தியாலய அதிபர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள்!

கடந்த சில நாட்களுக்கு முன் ஆசிரியை சகோதரி பஃமிதா அவர்களுக்கும் ஓர் மடலினை வரைந்திருந்தேன் ஆனாலும் உங்களுக்கு அப்படியொரு மடலினை வரைய வேண்டும் என்கின்ற எண்ணம் எனக்குத்தோன்றவில்லை ஆயினும் உங்களது தன்னிலை விளக்கமளிக்கும் காணொளி ஒன்றினை முகநூலில் காணக்கிடைத்ததும் எழுதாமல் இருக்கவும் என்னால் முடியவில்லை

மதிப்பிற்குரிய அதிபர் அவர்களே!
பாடசாலை ஒன்றின் அதிபராக கடமையாற்றுவது என்பது எத்துணை சவாலான விடயமென்பதை நான் அறிவேன்

விதவிதமான கொள்கைகள், குணாதிசயங்கள்,சிந்தனைகள் கொண்ட மனிதப்பிறவிகளுடன் சரிநிகர் சமானமாக அத்தனை பேரையும் திருப்திப்படுத்தி ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதென்பது முகநூல் சண்டியர்களுக்கு இலேசானதாக இருக்கலாம் அது எவ்வளவு மனஅழுத்த்தினை தரவல்லது என்பதும் அது எத்தனை சவாலானது என்பதும் அதிபர்கள் மாத்திரமே அறிந்து கொள்ளக்கூடிய ஒருவிடயம் என்பதை மறுப்பதற்கில்லை

அதற்காக இக்காலப்பகுதியில் தங்களுக்கேற்பட்டுப்போன மனத்தாங்கல்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்

இருப்பினும் உங்களிடம் சில கேள்விகள் கேட்காமலிருக்க முடியவில்லை

  1. சாதி,மதம்,இனம் என்பதற்கப்பால் நீங்கள் மாதாமாதம் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் ஓர் அரச ஊழியரா?
  2. நீங்கள் தலைமை தாங்கும் குறிப்பிட்ட பாடசாலை நாட்டுமக்களின் வரிப்பணத்தில் அரச உதவி பெற்று இயங்குகின்ற ஒரு பாடசாலையா?
  3. அங்கு கடமை புரியும் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அரசாங்கப் பணத்தில் மாதாந்த ஊதியம் பெறுபவர்களா?
  4. நீங்கள் தலைமை தாங்கும் பாடசாலை அரச பாடத்திட்டத்தின்படி கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் பாடசாலையா?
  5. நீங்களும்,நீங்கள் தலைமை தாங்கும் பாடசாலையும் அரசின் கல்விக் கொள்கை,சட்டதிட்டங்கள் மற்றும் சுற்றுநிரூபங்களுக்கேற்ப நிர்வாக செயற்பாடுகளையும்,அதனோடினைந்த செயற்பாடுகளையும் நடைமுறைப்படுத்துகின்ற ஒரு பாடசாலையா?
  6. இங்கு பயிலும் மாணவர்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் வரப்பிரசாதங்களை (சீருடை,பாடநூல்,போசாக்குணவு,புலமைப்பரிசில் கொடுப்பனவு போன்ற)இலவசமாகப் பெற்றுக் கொள்பவர்களா?
  7. வருடா வருடம் நடைபெறுகின்ற அரச பொதுப் பரீட்சைகளுக்கு (O/L, A/L, புலமைப் பரிசில் பரீட்சை) கட்ணமின்றி தோற்றுபவர்களா?
  8. பொதுப்பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய அரச பல்கலைக்கழகங்களில் இலவசமாக பட்டப்படிப்பை மேற்கொள்ள இக்கல்லூரி மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றார்களா?

மதிப்பிற்குரிய அதிபர் அவர்களே மேலே கேட்கப்பட்ட கேள்விகள் அத்தனைக்கும் “ஆம்” எனப் பதில் அளிப்பீர்களானால்  மட்டுமே கீழ் வரும் விடயங்கள் உங்களுக்கானதாகும்

நீங்கள் உங்கள் மீது சாட்டப்பட்ட அரச கடமையை நிறைவேற்றுவதிலிருந்தும் வேண்டுமென்றோ அல்லது நிர்ப்பந்தத்தின் பேரிலோ தவறிவிட்டீர்கள் என்பதே எனது வாதமாகும்

உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கடமைப் பொறுப்புக்களுக்கமைய குறிப்பிட்ட பாடசாலைக்கு திணைக்கள பொறுப்பதிகாரிகளின்  நியமனக்கடிதத்துடன் வரும் அரச ஊழியரை கடமையேற்கச் செய்யவேண்டியதும், வரவுப் பதிவேட்டில் கையொப்பமிட அனுமதிக்க வேண்டியதும் அதிபர் என்கின்ற வகையில் உங்களது கடமை மட்டுமல்ல பொறுப்பும் கூட இந்த இடத்தில் அரச உத்தரவொன்றை நிறைவேற்றத் தவறிய குற்றத்திற்கு ஆளாகி இருக்கின்றீர் என நினைக்கிறேன் இது எவ்வளவு பாரதூரமான விடயம் என்பதனை உணராமல் செய்யுமளவுக்கு தாங்கள் அனுபவமில்லாத ஒருவராக இருப்பீர்கள் என நான் நினைக்கவில்லை

மேலும் தங்களது தன்னிலை விளக்க முகநூல் காணொளியிலும் கையொப்பமிடுவது தொடர்பாக விளக்கமொன்றினை வழங்குவதை கண்ணுற்றேன் கைவிரல் அடையாளம் பதிவு செய்ய வேண்டியிருந்ததாலேயேகுறிப்பிட்ட ஆசிரியையை கடமையேற்கச் செய்வதில் தாமதமாகி விட்டதாகச் சொல்லியிருக்கிறீர்கள்

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 2021.10.01திகதிய 2/2021/(V) இலக்கம் கொண்ட அரச நிர்வாக சேவைகளை வழமை போன்று கொண்டு செல்லல் எனும் தலைப்பிடப்பட்ட சுற்றறிக்கையின் 07ம் பந்தி கடமைக்கு வரும் ஊழியர்களின் வருகை மற்றும் வெளியேறுகை தொடர்பில் வழமையான பதிவேடொன்றை கையாளுதல் போதுமானதாகும்” எனக்குறிப்பிடப்பட்டுள்ளதும் இதற்குப் பிந்தியதாக வந்த சுற்று நிரூபம் கூட திருத்தப்பட்டு வெளியிடப்பட்ட போதும் மேற்படி 07பந்தி திருத்தப்படாமல் இன்று வரை அமுலில் உள்ளதும் ஒரு பெரிய பாடசாலை ஒன்றின் அதிபர் அறியாமல் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்

மேலும் 22.01.2022 புலமைப்பரிசில் பரீட்சை நடந்து கடந்த சனிக்கிழமைதான் வினாத்தாள் திருத்தும் பணிகளே நிறைவு பெற்றுள்ள நிலையில் தரம் 5  புலமைப்பரிசில் பரீட்சைக்குத்தோற்றிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுக்கான ஏற்பாடகளுக்காக பாடசாலை வந்த பெற்றோர்களே பிரச்சினைக்குரிய பெற்றோர்கள் என்பதும்,பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்திலேயே  இவ்வாறான கூட்டங்களுக்கு பெற்றோர்கள் அழைக்கப்படுகின்றார்கள் என்பதும் தங்கள் பக்கத்தில் விடப்பட்ட தவறுகளை மறைப்பதற்காக சோடிக்கப்பட்ட சிறுபிள்ளைத்தனமான நகைப்பிற்கிடமான கட்டுக்கதைகள் என்பதை காணொளியை பார்க்கும் எவரும் அத்தோடு பாடசாலையொன்றின் அன்றாட நடவடிக்கைகளை அறிந்துள்ள எவரும் புரிந்து கொள்வார்கள்

ஒரு பொய்யை மறைக்க பல பொய்களை சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நீங்கள் ஆளாகிப்போயுள்ளதை நினைத்து கவலைப்படுகின்றேன்,சூழ்நிலைக் கைதியாகி தவறொன்றுக்குத்துணை போனதால் கடும்மன அழுத்தத்திற்கு ஆளாகிப் போன நிலையிலேயே இந்தக் காணொளியும் வெளியிடப்பட்டுள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது.எதுவாக இருப்பினும்  என்மனம் உங்களை நினைத்து கவலை கொள்கிறது

ஆயினும் என்ன செய்ய “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே”

2022.02.07

வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் ஆசிரியை பஃமிதா  

சண்முகா வித்தியாலயத்தின் சம்பவங்கள், அந்தப் பாடசாலைக்கு ஒரு சோதனையாக அமைந்து விட்டது

டாக்டர் நஜிமுதீன்
கனடா

ண்முகா வித்தியாலயத்தின் சம்பவங்கள் அந்தப் பாடசாலைக்கு ஒரு சோதனையாக அமைந்து விட்டது. அது இன்றைக்கு தமிழ் சமூகத்தையும் கூட ஒரு சோதனைக் களத்துக்குள் தள்ளியிருக்கின்றது. அவர்களின் அரசியல் தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் எல்லோரும் அறிந்த விடயம் ஒன்று தான் தனிமனித உரிமை குறித்த தெளிவு. நிறையவே சட்டத்தரணிகளையும் பிரபல்ய மிக்க மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் கொண்ட ஒரு சமூகம் அது. முஸ்லிம்களுக்கு இழைக்கப்படுகின்ற மனித உரிமை மீறல்களைக் கூடத் தட்டிக் கேட்பதற்கு அந்த சமூகத்தின் சட்டத்தரணிகள் தான் முன் வருவார்கள், அதற்கென முன்னிறுத்தப்படுவார்கள். அந்த அளவுக்கு ஆற்றலும், மனித உரிமை குறித்த அறிவும், பல்லாண்டு கால அனுபவமும் பெற்றவர்கள் அவர்கள். இவைகள் எல்லாவற்றையும் விட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டு மிகுந்த மனஉளைச்சல்களை எதிர்கொண்டவர்களும் அவர்கள்தான். 

ஆனால் சண்முகா சம்பவம் அவர்களைத் திக்கு முக்காட வைத்திருக்கிறது. வெளிப்படையாக உண்மையைப் பேச முடியாதபடி அவர்களின் குரல் வளையை நசுக்குகின்றது அந்த நிகழ்வு. அவர்களின் சமூகத்துக்கு இப்படி ஒரு சங்கடம் வருமாக இருந்தால் எல்லோரும் ஒன்றாகக் குரல் கொடுத்திருப்பார்கள். இதனை சங்கடம் என்றே நான் வர்ணிக்கின்றேன். ஏனென்றால் என்றைக்கும் இஸ்லாமிய சமூகப் பெண்ணுக்கு ஹபாயா என்பது மார்க்க அடையாளம் என்கின்ற நினைவே கிடையாது. அது உண்மையில் மார்க்க அடையாளமே அல்ல. 

நிஜத்தில், இஸ்லாமிய மார்க்கத்துக்கு ஆடை அடையாளம் ஒன்று கிடையாது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பல்வேறு கலாச்சாரங்களுடன் பரந்து வாழ்கின்ற 180 கோடிக்கு மேற்பட்ட இஸ்லாமியருக்கு அவர்களின் நாட்டின் ஆடையலங்காரமும் கலாச்சாரப் பாரம்பரியமுமே உடைகளாகின்றன. எமக்கு மிகவும் அருகில் இருக்கும் மிகப்பெரிய இஸ்லாமிய தேசம் இந்தோனேசியாவின் கலாச்சார உடை ஹபாயா அல்ல. இஸ்லாமியர்களுக்குரிய ஒரேயொரு கட்டளை ஆண்கள் குறிப்பிட்ட அளவுக்கும் பெண்கள் குறிப்பிட்ட அளவுக்கும் மறைத்துக் கொள்ளுங்கள் என்பதுவே. உங்கள் அழகும், மானமும், ஒழுக்கமும் பெறுமதி வாய்ந்தவை, அவற்றினை விளம்பரம் செய்து வியாபாரமாக்காதீர் என்பதுதான் அவர்களுக்கான வழிகாட்டல். அவர்கள் அதனை எந்த வழியிலும் பின்பற்றிக் கொள்ளலாம்.

ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் இஸ்லாமிய பெண்கள் ஹபாயாவை தங்கள் உடையாகத் தேர்ந்தெடுப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. மிகவும் முக்கியமான காரணம் அது மிகவும் இலகுவான ஓர் ஆடை.  உடம்பில் ஆரம்பித்து முகம், தலைமயிர், கூந்தல் என அலங்காரம் செய்ய விரயமாகின்ற நேரத்தை மீதமாக்கும் ஓர் அற்புதமான கண்டு பிடிப்பு. அணிந்திருக்கும் நேரமெல்லாம் எந்த இடத்திலாவது ஏதாவது வெளியில் தெரிகின்றனவா என்று எச்சரிக்கை உணர்வோடு இருப்பதற்கு அவசியமற்றது. ஏனைய ஆடைகளை விட அது அழகும் கவர்ச்சியும் குறைந்தது என்பதை அந்தப் பெண்கள் அறிவார்கள். அது அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.

ஒரு காலத்தில் சல்வார், பஞ்சாபி, என்றெல்லாம் ஆடைகள் அறிமுகமான போது அவற்றை முதலில் ஏற்றுக் கொண்டவர்களும் இஸ்லாமியப் பெண்களே. இன்று ஹபாயா அறிமுகமானவுடன் அதனை அவர்கள் இலகுவானவை என்கின்ற முறையில் தான் ஏற்றுக் கொண்டனர் என்பது ஏனைய இனத்தினருக்கு உண்மையில் தெரியாது. அது உண்மையில் முஸ்லிம்களின் கலாச்சார மற்றும் மார்க்கம் சார்ந்த உடையல்ல.

இது தவிர சாரி என்பதுவும் கூட தமிழர்களின் கலாச்சார உடையா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கின்றது. கலாச்சாரம் என்பதுவும் பண்பாடு என்பதுவும் காலத்துக்குக் காலம் மாறக்கூடியவை. ஒரு காலத்தில் ஆண்கள் வெறும் கச்சையுடன் காலம் கழித்தனர். பெண்களுக்கு மார்புச் சீலை தடை செய்யப்பட்டிருந்தது. பின்னர் வந்த காலங்களில் ஆண்கள் வேஷ்டியும் நீண்ட சட்டையும் அணிந்தனர். ஆசிரியர்கள் ஆண்களாக மட்டுமே இருந்தனர். தலையில் முண்டாசு, இன்று அவர்களின் அடையாளம். எல்லாமே மாறி விட்டன. ஆசிரிய ஆண்களைப்  பார்த்து யாரும் வேஷ்டியில்தான் வரவேண்டும், வாலாமணிதான் எங்கள் கலாச்சாரம் என்று கூக்குரலிடவில்லை. வெள்ளையரின் கலாச்சார ஆடையாகிய நீண்ட கால் சட்டையும் சர்ட்டும், டையும், சப்பாத்தும் எமது கலாச்சாரத்துக்கு சாவுமணி என்று அபாயக் குரல் கொடுத்து அடித்துத் துரத்தவில்லை.

ஆரியரின் வைஷ்ணவ பண்பாட்டுப் படையெடுப்பு இந்திய உபகண்டத்தை ஆக்கிரமித்த பொழுது, இன்று தங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொள்கின்ற சைவர்களும். வேத மதத்தினரும் சூத்திரர்கள் என்கின்ற இழிநிலைக்குத் தள்ளப்பட்டு எல்லாவிதமான கலாச்சார, பண்பாட்டு அடக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டிருந்தார்கள் என்பது வரலாறு. அவர்களை ஓரளவாவது பாதுகாத்து உரிமைகளை வழங்கியிருந்தனர் இஸ்லாமிய ஆட்சியாளர்கள். மார்பக வரி வசூலித்த திருவிதாங்கூர் சமஸ்தானம் போன்ற அடக்குமுறைகளுடன் எப்படிப்பட்ட போராட்டத்தை எமது சகோதர இந்து சகோதரிகள் நடாத்தினார்கள் என்பதெல்லாம் வரலாறுகள். அவற்றை நாங்கள் அறிவோம். அடக்குமுறைக்குள் அமிழ்ந்து கிடக்கின்ற ஒரு சமூகம் இன்னுமொரு சமூகத்தை அடக்க நினைத்தல் அழகல்ல.

கலாச்சாரம் என்பதுவும் பண்பாடு என்பதுவும் மாற்றத்துக்குட்பட்டவை. இன்றைய இந்து சகோதரிகள் இன்னும் சில காலம் சென்ற பின்னர் முழுவதும் ஆங்கில ஆடைக் கலாச்சாரத்துக்கு மாறிவிட மாட்டார்கள் என்பது நிச்சயமற்றது. அது ஏற்கெனவே மாறிவிட்டது. பாடசாலை விட்டு வீடு சென்றதுமே அவர்களின் ஆடைக் கலாச்சாரம் மாறிவிடுகின்றது. பல்கலைக் கழகங்களிலும் அலுவலகங்களிலும் மேலை நாடுகளிலும் பெரும்பான்மையான இந்துப் பெண்களின் உடை சாரிகள் அல்ல. 

இஸ்லாமியப்  பெண்கள் ஒரு விதமான இலகுவான ஆடையாக இருக்கின்றதே என்பதனால் தேர்ந்தெடுத்த ஹபாயாவுக்கு மத அடையாளம் பூசி, அதனை ஒரு பாரிய போராட்டத்தை நோக்கித் தள்ளியிருக்கின்றது ஷண்முகா வித்தியாலயம். தங்களை அழகாகவும் கவர்ச்சியாகவும் அடையாளப்படுத்த விரும்புகின்ற இன்றைய நாகரிக உலகத்தில், அதனை அப்படியே புறக்கணித்து எல்லோரும் சாக்குப்பை என்றும், கோணிபில்லா என்றும் மாற்று இனத்தவராலும் ஊடகங்களாலும் அசிங்கமாக வர்ணிக்கப்படுகின்ற ஹபாயாவை விரும்பி அணிகின்ற அந்தப் பெண்களின் தியாகத்தை மதிக்காது, அவர்களை இப்படி அலைக்கழிப்பதை எந்த விதத்தில் நியாயம் என்று சொல்வது.

தனது மார்க்கத்தை விட்டுக் கொடுக்காத இஸ்லாமியப் பெண் கடந்த சில தசாப்த காலமாகத்தான் வெளியில் வந்து நடமாட ஆரம்பித்திருக்கின்றாள். அவளை இப்படி அடாவடித்தனத்தாலும் இரக்கமின்றியும் துவைத்தெடுத்து போலீஸ் நிலையத்திலும் நீதிமன்ற வாசலிலும் நிற்கவைத்து சித்திரவதை செய்வதென்பது மிகப் பெரிய அவலம் மட்டுமல்ல, துரோகமும் கூட. 

இன்றைய பஹ்மிதாவின் சம்பவம் கடலடியில் அமிழ்ந்திருக்கும் பனிப்பாறையின் உச்சி தானே தவிர, அதுவே முழுவதுமான நிகழ்வின் பிரதிபலிப்பல்ல. 

இன்றைய இஸ்லாமிய சகோதரி அவளது பாரம்பரியமிக்க பின்னடைவில் இருந்து தன்னை விடுவித்து, மார்க்க விழுமியங்களுக்கும் வரம்புக்கும் உட்பட்டு, தன்னை வெளியில் கொண்டு வரும்பொழுது, சண்முகா போன்று  இன்னும் எத்தனை மறை கரங்கள் பௌத்த கலாச்சாரம் என்றும் சிங்கள பண்பாடு என்றும், கிறிஸ்தவ கலாச்சாரம் என்றும் கழுத்தை நெரிக்கக் காத்திருக்கின்றனவோ, அல்லது நெரித்துக் கொண்டிருக்கின்றனவோ நாம் அறியோம். 

சண்முகாவில் ஒன்று மட்டுமே போராடுகின்றது. ஏனையவை அடுத்தவருக்கும் சொல்லாமல் அடுப்படியில் கண்கலங்குகின்றனவோ என்பதனை நினைக்கும் பொழுது உண்மையில் கையாலாகாத எமது தலைமைத்துவங்களை சபிக்காமல் இருக்க முடியவில்லை. 

Tags: