ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டிலிருந்து வெளியேறினார்

னாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தனது மனைவி அயோமா ராஜபக்‌ஷ மற்றும் 2 பாதுகாவலர்களுடன் விமானப்படை விமானத்தில் இன்று (13.07.2022) அதிகாலை நாட்டை விட்டுச் சென்றுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, மாலைதீவின் மாலி நகருக்கு செல்வதற்காக  விமானப்படை விமானமொன்று அவர்களுக்கு வழங்கப்பட்டதாக, இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

இலங்கை விமானப்படை இது தொடர்பில் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களுக்கு இணங்க, தற்போதைய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய, பாதுகாப்பு அமைச்சின் முழு அனுமதியின் கீழ், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள குடிவரவு – குடியகல்வு, சுங்கம் உள்ளிட்ட ஏனைய அனைத்து சட்டங்களுக்கு உட்பட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முதல் பெண்மணி அயோமா ராஜபக்ஷ மற்றும் இரு பாதுகாவலர்களுடன் மாலைதீவிற்கு செல்ல, இன்று (13.07.2022) அதிகாலை விமானப்படையினால் விமானமொன்று வழங்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்றையதினம் (13.07.2022) பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிப்பு!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (13.07.2022) ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ள நிலையில், அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதியினால், பிரதமர் ரணில் விக்ரசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பதில் ஜனாதிபதியாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமித்தமை தொடர்பான அதி விசேட வர்த்தமானி வெளியிட்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய நான், இலங்கைக்கு வெளியே இருப்பதன் காரணமாக சனாதிபதிப் பதவிக்குரிய தத்துவங்கள், கடமைகள் மற்றும் பணிகளைப் பிரயோகிப்பதற்கும் புரிவதற்கும் இயலாதெனக் கருதுவதனால், நான் இலங்கைக்கு வெளியே இருக்கும் கால எல்லைக்குள் சனாதிபதிப் பதவியின் தத்துவங்கள், கடமைகள் மற்றும் பணிகளைப் பிரயோகிப்பதற்கும் புரிவதற்குமாக இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 37(1) ஆம் உறுப்புரையின் கீழ், இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களை, 2022, யு{லை மாதம் 13 ஆந் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருமாறு இத்தால் நியமிக்கின்றேன்.

கோட்டாபய ராஜபக்ஷ,
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதி.

கோத்தபய மாலைதீவு செல்ல உதவியா?- இந்தியா திட்டவட்ட மறுப்பு

லங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலைதீவு தப்பிச் செல்ல இந்தியா உதவி செய்ததாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதிபர் கோத்தபய ராஜபக்ச இலங்கை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவியதாக வெளியான ஆதாரமற்ற ஊகத்தின் அடிப்படையிலான ஊடக தகவல்களை திட்டவட்டமாக மறுப்பதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, மக்கள் கடந்த மார்ச்மாதம் முதல் தொடர் போராட்டங்களை நடத்திவந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ மாளிகைக்குள் புகுந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.

ஆனால், அதற்கு முன்பே இல்லத்தை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய, ராணுவத் தலைமையிடத்தில் பாதுகாப்பாக இருந்ததாகக் கூறப்பட்டது. மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, தனது பதவியை இன்று (ஜூலை 13) அதிபர் கோத்தபய ராஜிநாமா செய்யவுள்ளதாக நாடாளுமன்ற அவைத் தலைவர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து கூட்டணி அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன. நாட்டின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 20-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் திரிகோணமலை கடல் அருகே உள்ள பகுதியில் இருந்து கடற்படைக்குச் சொந்தமான மிகப்பெரிய படகு மூலம் கோத்தபய ராஜபக்சவும், அவரது உறவினர்களும் திரிகோணமலை பகுதிக்கு வந்ததாகவும், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொழும்பு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்ததாகவும் தகவல்கள் கசிந்தன.

அதிபர் கோத்தபய ராஜபக்ச இன்று அதிகாலை ராணுவ விமானம் மூலம் தனது மனைவியுடன் இலங்கையில் இருந்து புறப்பட்டார். அவருடன் பாதுகாவலர்கள் இருவரும் உடன் சென்றுள்ளனர்.

மாலத்தீவுக்குச் சென்றடைந்த அவர், ரகசிய இடத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவி செய்ததாக இலங்கையைச் சேர்ந்த சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

“அதிபர் கோத்தபய ராஜபக்ச இலங்கை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவியது என்ற அடிப்படையற்ற மற்றும் ஊக ஊடக அறிக்கையாகும். இதனை திட்டவட்டமாக மறுக்கிறோம்.

ஜனநாயக வழிமுறைகள் மற்றும் விழுமியங்கள், ஜனநாயக நிறுவனங்கள், இலங்கை அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் மட்டுமே இலங்கை மக்களுக்கு இந்தியா உதவுகிறது. இலங்கை மக்களின் முன்னேற்றத்திற்கான அவர்களின் கனவுகளை நனவாக்க இந்தியா அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

-இந்து தமிழ்
2022.07.13

Tags: